குருவிடம் வந்து சேர்ந்த புதிதில் சீடனுக்கு ஒரு பிரச்னை இருந்தது.
எந்த ஒரு முக்கியமான பணியைச் செய்தாலும் முதல் முயற்சியிலேயே அதில் முழுமையான வெற்றி அவனுக்குக் கிடைப்பதில்லை.
அதைக் குருநாதர் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்றாலும், சீடனுக்கு அது மிகவும் துன்பமாக இருந்தது. எப்படி அந்தச் சிக்கலிலிருந்து மீள்வது என ஒவ்வொரு முறையும் கவலையோடு தன் பணிகளைச் செய்து வந்தான்.
அதை நினைத்தே அவனுக்குத் தினமும் பதட்டம் பற்றிக் கொள்ளும். அவனது பதட்டத்தால் செயல்பாடுகளில் சிறு சிறு குறைகள் ஏற்பட்டு விடுமென்பதால், அவனால் ஒருமுறை கூட முதல் முயற்சியிலேயே வெற்றியைப் பெற முடியவில்லை.
அவனைக் கவனித்து வந்த குரு, ஒருநாள் அவனை அழைத்துப் பேசினார்.
“கிளி ஜோதிடர்களின் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் கிளிகள் சீட்டை எடுக்க வெளியே வந்தாலும், அவை தன் சிறகை விரித்துப் பறக்க முயற்சிப்பதில்லை. மனிதர்களைப் போல நடந்துதான் வெளியே வருகின்றன. திரும்பவும் நடந்தேக் கூண்டுக்குள் செல்கின்றன. இது எதனால் என்று தெரியுமா?” என்று கேட்டார் குரு.
ஓரிரு நொடிகள் யோசித்து விட்டு, “தெரியவில்லை குருவே” என்றான் அந்தச் சீடன்.
குரு, “சுதந்திரமாகப் பறந்து திரியும் கிளியைப் பிடித்தவுடன் முதலில், அதன் சிறகுகளை வெட்டியெடுத்து விடுவார்கள். சிறகிழந்த கிளியானது அதை உணராமல் பறக்க முயற்சிக்கும். ஆனால், அதனால் பறக்க இயலாது. தனக்கு இறகுகள் இல்லை என்று கிளிக்குத் தெரியாது. மீண்டும் மீண்டும் பறக்க முயற்சிக்கும். ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகும்...”
கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான் சிஷ்யன்.
“வெட்டப்பட்ட சிறகுகள் மறுபடியும் நாளடைவில் வளர்ந்து விடும். கிளியால் அப்போது பறக்க முடியும். ஆனால், அது பறக்க முயற்சிப்பதில்லை. தான் ஒவ்வொரு முறையும் பறக்க முயன்று அது பலிக்காததால், தனக்கு இப்போது பறக்கும் சக்தி இல்லை என்று அது தவறாக நம்பிக் கொள்ளும். சிறகை விரித்துப் பறக்கும் பழக்கத்தையே மறந்து போய் விடும்...”
குருவின் வார்த்தைகளைக் கேட்கக்கேட்கக் கிளிக்கும் தனக்கும் இருக்கும் ஒற்றுமை என்ன என்பது அரைகுறையாகப் புரிந்தது அந்தச் சீடனுக்கு.
“எத்தனை முறை முயற்சி செய்கிறோம் என்பது முக்கியமல்ல. எத்தனை முறை தோல்வியடைகிறோம் என்பதும் முக்கியமல்ல. ஒவ்வொரு தோல்விக்குப் பின்னரும், அடுத்த முறை வெற்றி கிடைக்கும் என நம்புவதும், அதே நம்பிக்கையுடன் விடாமுயற்சியைத் தொடர்வதும்தான் முக்கியமாகும். இத்தனை தடவைகள் தோற்றுப் போனோமே என்ற கவலையை மனதுக்குள் கொண்டு சென்றால், அதனால் பதட்டமே ஏற்படும். அடுத்த முயற்சியும் தோல்வியாக முடியவே வாய்ப்புகள் அதிகமாகும். வெற்றியைச் சந்திக்க வாய்ப்பு இருந்தும், நம்பிக்கை இன்மையால் முழு அளவில் முயற்சி செய்யாமல் தோற்றுப்போவோம்...” என்றார் குரு.
அதன் பின்னர், அந்தச் சீடனிடம் தோல்விகளைப் பொருட்படுத்தும் பழக்கம் தொலைந்து போனது.
அதன் பிறகு, அவன் செய்த செயல்கள் அனைத்திலும், முதல் முயற்சியிலேயே வெற்றி அவனைத் தேடி வந்தது.