ஒரு மலைக்கிராமத்தில் கோவில் ஒன்று கட்டினார்கள்.
அந்தக் கோவிலில் நிறுவ வேண்டிய சுவாமி சிலையை அடிவாரத்தில் உள்ள ஒரு சிற்பியிடம் தந்திருந்தார்கள்.
அவரும் குறித்த நேரத்தில் அதை பயபக்தியுடன் சிறப்பாகச் செய்து முடித்து விட்டார்.
ஆனால், அதை எடுத்துச் செல்லும் நாளில் கடுமையான மழை. மலை ஏறும் சாலையில் மண் சரிந்து, மரங்கள் விழுந்து எந்த வாகனமும் போக முடியாது போனது. இந்த வழியைச் சீர்படுத்தக் குறைந்தது ஒரு வாரம் ஆகலாம். ஆனால் ஒரிரு தினங்களில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டியிருந்தது.
சுவாமி சிலையை எப்படி மேலே எடுத்துச் செல்வது...? என்று அனைவரும் யோசித்துக் கொண்டிருந்த போது அந்த ஊர் சலவைக்காரர் அவ்வழியே வந்தார்.
அவரிடம் உள்ள கழுதையில் ஏற்றினால் விடிவதற்குள் மலைக்குப் போய்விடலாமே என்றார் சிற்பி.
அந்த யோசனை அனைவருக்கும் பிடித்திருந்தாலும் கடவுள் சிலையைக் கழுதை மேல் ஏற்றுவதா? என யோசித்தார்கள்.
அவ்வேளையில் திருவுளச்சீட்டு போட்டு பார்க்கலாமே என்றார் ஒருவர்.
அனைவரும் அதை ஆமோதிக்க, சீட்டு போட்டதில் கழுதை மீது ஏற சம்மதம் வந்தது.
உடனேக் கழுதையை நீராட்டி, மாலை அணிவித்து, அதற்கு நல்ல உணவுகள் தந்து சிலையை அதன் மேல் ஏற்றினார்கள்.
அந்தக் கழுதையும் சுவாமி சிலையைச் சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்தது.
செல்லும் வழியெங்கும் மக்கள் கைகூப்பி வணங்கினார்கள்.
கழுதைக்குப் பெருமையாக இருந்தது. இத்தனை மனிதர்கள் நம்மை வணங்குகிறார்களே... நாம் மிகப்பெரியவன் என்று கர்வப்பட்டது. இந்த சந்தோஷத்தில் வேகமாக நடந்து குறித்த நேரத்திற்கு முன்பாகவே அந்தக் கிராமத்திற்கு போய்ச் சேர்ந்து விட்டது அக்கழுதை.
அந்த ஊரிலும் சுவாமியைக் கொண்டு வந்த கழுதை என்பதால் தடபுடலாக வரவேற்றார்கள்.
சிலர் கீழே விழுந்தெல்லாம் வணங்கினார்கள். கழுதைக்கு தங்க நல்ல வசதியான இடம் தந்து, சுவையான உணவும் தந்தார்கள். கழுதைக்கு தலைகால் புரியாத மகிழ்ச்சி!
மறுநாள் சலவைக்காரர், அந்தக் கழுதையை கீழே அழைத்துப் போக வந்தார்.
அவரிடம் கழுதை, “இனி நான் பொதி சுமக்க மாட்டேன். நான் போற்றுதலுக்குரியவன், ஆகவே நீயும் என்னை வணங்கு” என்றது.
“என்னது, நான் உன்னை வணங்க வேண்டுமா?” என்றார்.
“என்னைப் பற்றி உனக்குச் சரியாகத் தெரியவில்லை. நான் மலை ஏறி வரும்போது, மக்கள் என்னை வணங்கினார்கள். என் காலில் கூட விழுந்து வணங்கினார்கள்.. எனக்கு எப்படி மரியாதை அளித்தார்கள் என்று உனக்குத் தெரியாது. நீ அதெல்லாம் பார்க்கவில்லை, அதனால்தான் நீ என்னைக் குறைத்து மதிப்பிடுகிறாய்” என்றது அந்தக் கழுதை.
“முட்டாள் கழுதையே...! அந்த மரியாதை உனக்கு வழங்கப்பட்டது அல்ல. நீ சுமந்து வந்த சுவாமி சிலைக்கு வழங்கப்பட்டது. வீணாகப் பேசி என் நேரத்தை வீணடிக்காதே” என்றுகூறி அந்தக் கழுதையை தன் கையில் வைத்திருந்த பிரம்பால் அடித்து இழுத்துப் போனார் அந்தச் சலவைக்க்காரர்.