ஒரு குட்டிப் பெண்ணும் குட்டி பையனும் விளையாடிக் கொண்டு இருந்தனர்.
அந்தப் பையன் கைகளில் நிறைய பொம்மைகளும், அந்தக் குட்டிப்பெண் கையில் நிறைய இனிப்புகளும் இருந்தன.
அந்தப் பையன் குட்டிப் பெண்ணிடம், “என்கிட்ட இருக்கிற பொம்மைகள் எல்லாத்தையும் உன்கிட்ட தர்ரேன். நீ வச்சிருக்கிற இனிப்புகள் எல்லாத்தையும் எனக்கு தர்ரியா?” என்று கேட்டான்.
குட்டிப் பெண்ணும் அதற்குச் சம்மதம் தெரிவித்தாள்.
அந்தப் பையன் தன்னிடம் உள்ள நல்ல பொம்மையை ஒளித்து வைத்துவிட்டு, அந்தக் குட்டி பெண்ணிடம் இனிப்புகளை கேட்டான்.
குட்டிப் பெண் எல்லா இனிப்புகளையும் கொடுத்து விட்டு, அவன் கொடுத்த பொம்மைகளை வாங்கிக் கொண்டாள்.
அன்று இரவு, அந்தக் குட்டிப் பெண் நிம்மதியாக உறங்கினாள்.
அந்தப் பையனுக்கு உறக்கமே வரவில்லை. அவள் எல்லா இனிப்புகளையும் நம்மிடம் தந்திருப்பாளா...? இல்லை, நாம் ஒளித்து வைத்தது போல் அவளும் ஏமாற்றி இருப்பாளா? என்று நினைத்துக் கொண்டே உறக்கம் இல்லாமல் அவதிப்பட்டான்.
நீங்கள் நூறு சதவீதம் அடுத்தவர் மேல் நம்பிக்கை வைக்கவில்லை என்றால், அடுத்தவர் உங்களிடம் காட்டும் அன்பின் மீது உங்களுக்குச் சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும்.