முட்டாள் நாய் ஒன்று ஒரு இறைச்சிக் கடையில் இருந்த எலும்புத்துண்டை திருடியது.
அதனை வாயில் கவ்விக்கொண்டு தன் இருப்பிடத்திற்குப் புறப்பட்டது.
செல்லும் வழியில் சில நாய்குட்டிகள் அந்த முட்டாள் நாயிடம், எலும்புத்துண்டைத் தரும்படி கேட்டன.
ஆனால் அந்த முட்டாள் நாயோ “இதை நான் யாருக்கும் தரமாட்டேன். இதை முழுவதுமாக நான் மட்டுமேச் சாப்பிடப் போகிறேன்” என்று கூறி விட்டுச்சென்றது.
செல்லும் வழியில் ஒரு பாலத்தைக் கடக்க வேண்டியிருந்தது.
நாய் பாலத்தைக் கடக்கும் போது, தற்செயலாகக் கீழே தண்ணீரைப் பார்த்தது.
அந்தத் தண்ணீரில் அதன் உருவம் தெரிந்தது. தண்ணீரில் தெரிந்த அதன் உருவத்திலும் வாயில் எலும்புத்துண்டு இருந்தது.
அதைக் கண்ட நாய் “இந்த நாயிடமும் ஒரு எலும்புத்துண்டு உள்ளது. இதையும் அபகரித்துவிட வேண்டும்” என்று நினைத்தது.
உடனே அது பலமாக 'லொள்', 'லொள்' எனக் குரைத்துக் கொண்டே தண்ணீரில் தெரிந்த நாயின் மீது பாய்ந்தது.
அதனால், அதன் வாயில் இருந்த எலும்புத் துண்டும் தண்ணீரில் விழுந்தது.
தண்ணீரில் விழுந்தவுடன்தான் அந்த முட்டாள் நாய்க்கு புரிந்தது, இது தன்னோட நிழல் பிம்பம் என்று.
நாய் தண்ணீரில் தத்தளித்தது. மிகவும் துன்பத்துடன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் எனக் கரையேற வேண்டியதாயிற்று.
இருந்த எலும்புத் துண்டும் ஆற்றோடு போய்விட்டதே என்று நினைத்தபடி சென்றது.