ஒரு ஊரில் வில்வித்தையில் சிறந்து விளங்கும் வீரன் ஒருவன் இருந்தான். அவனுடைய வில்லின் மீது அபார நம்பிக்கை அவனுக்கு. குறி தவறாமல் எய்துவதில் அவன் முதன்மையானவனாக இருந்ததால் அவனுக்கு கர்வமும் அதிகமிருந்தது.
ஒரு முறை அந்த ஊருக்கு முனிவர் ஒருவர் சீடர்கள் படை சூழ வந்திருந்தார்.
அவனுடைய திறமையைக் கேள்விபட்டு அவனைக் காண விரும்பினார்.
அவன் வந்ததும் அவனைப் பாராட்டினார்.
இளம்வீரனுக்கு கர்வம் தாங்கவில்லை. நீங்கள்தான் பல கலைகள் கற்றுத் தருகிறீர்களே, என்னோடு போட்டியிட உங்கள் சீடர்கள் யாரேனும் தயாராக இருக்கிறார்களா? என்று சவால் விட்டான்.
முனிவர் சற்றுநேரம் அமைதியாக இருந்தார்.
சீடர்களும் முனிவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிறகு, உன் அளவுக்கு அவர்கள் சிறந்து இருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால் முயற்சி செய்யச் சொல்கிறேன் என்றார்.
போட்டிக்கு நாள் குறித்தார்கள். போட்டி நாள் வந்தது.
இளம் வீரனும், சீடனும் சரிசமமாக தங்கள் திறமையை நிரூபித்தார்கள்.
இறுதியாக தூரத்தில் ஒரு பொம்மையை நிற்க வைத்து அதன் கண்களை குறிவைத்துத் தாக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.
இளம் வீரன் பொம்மையைக் குறி பார்த்து வில் அம்பு எய்தான். அதைத் தொடர்ந்து, அந்த அம்பையும் இரண்டாக பிளக்கச் செய்தான். அதைப் பார்த்த அனைவரும் அவனை ஆஹா ஓஹோவென்று பாராட்டினார்கள். வீரனுக்குப் பெருமை தாங்கவில்லை.
அவனைப் பாராட்டிய முனிவர் இன்னுமொரு போட்டியை வைக்கிறேன் என்றார்.
அனைவரும் அந்த ஊரின் மலை அடி வாரத்தில் கூடினார்கள். ஓரத்தில் ஆறு ஒன்று இருந்தது. மலையையும், ஆற்றையும் இணைக்கும் வகையில் ஒரு சிறிய கயிற்றுப்பாலம் கட்டப்பட்டிருந்தது. முனிவர் தன் சீடனை அதில் நின்று தூரத்தில் இருக்கும் மரத்தின் கனியை குறி பார்த்து அடிக்கச் சொன்னார்.
சீடனும் தன்னுடைய குரு சொன்னதைக் கேட்டு அதன்படி செய்தான். அடுத்து உன் முறை என்றார் முனிவர் இளம் வீரனிடம்.
வேகமாக வந்த இளம் வீரன், அந்தக் கயிற்றுப் பாலத்தில் நின்றான்.
கீழிருந்த ஆற்று நீரும், எப்போது கயிறு அறுந்து விழுமோ என்னும் பயமும் அவனை அச்சுறுத்தியது. அவ்வளவு தூரத்தில் இருக்கும் கனியை குறி வைக்கும் போது கீழே விழுந்துவிட்டால் என்னும் பயமே அவனுக்கு உதறலைக் கொடுத்தது. என்னால் முடியாது என்று வந்துவிட்டான்.
முனிவர் அவனைத் தட்டி கொடுத்தார். உன்னால் முடியாது என்று யார் சொன்னது. உனக்கு உன் மீதிருந்த நம்பிக்கையை விட வில்லின் மீதிருந்த நம்பிக்கைதான் அதிகம். அதனால் தான் உன்னால் குறியை சரியாக அடிக்க முடியவில்லை. முதலில் உன் மீது நம்பிக்கை வை. அதுதான் உன்னை ஜெயிக்க வைக்கும் என்றார்.
இளம் வீரன் உண்மையை உணர்ந்தது போல் அவரிடம் மன்னிப்பு வேண்டினான்.
முனிவரின் அறிவுரை அவனுக்கு மட்டுமல்ல நமக்கும் தான். முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் நம்பிக்கை நல்லதையேக் கொடுக்கும்.