ஒரு திருடன் தன் தொழிலின் மூலம் ஏராளமான சொத்து சேர்த்திருந்தான்.அவன் கட்டளைக்கு அடிபணிய சில திருடர்கள் இருந்தனர்.ஆனாலும் அவனிடம் நிறைவில்லை.
ஒரு ஞானியிடம் தன்னைப் பற்றிய விபரங்களைக் கூறி, தன் மனக்குறையை நீக்க ஒரு வழி காட்டுமாறு வேண்டினான்.
ஞானி அவனை ஒரு மலை அடிவாரத்திற்குக் கூட்டிச் சென்றார்.அங்கே கிடந்த மூன்று பெரிய கற்களைத் தூக்கிக் கொண்டு அவர் பின்னே வரச்சொன்னார்.
அவர் மலை ஏறத் தொடங்கி விட்டார். திருடனால் மூன்று கல்லையும் தூக்கிக் கொண்டு நடக்க முடியவில்லை. அவன் அதை ஞானியிடன் கூற அவரும் ஒரு கல்லைக் கீழே போட்டு விட்டு இரண்டை மட்டும் தூக்கி வரச் சொன்னார்.
சிறிது தூரம் சென்றவுடன் இரண்டு கல்லுடன் நடப்பதும் சிரமமாக இருப்பதாகக் கூறினான்.
ஞானி, இன்னொரு கல்லைக் கீழே போட்டு விட்டு ஒரு கல்லை மட்டும் எடுத்து வரச் சொன்னார்.
மீண்டும் சிறிது தூரம் நடந்தார்கள். ஒரு கல்லைத் தூக்கிக் கொண்டும் அவனால் மலை மீது ஏற முடியவில்லை.
அதைக் கண்ட ஞானி அந்த ஒரு கல்லையும் கீழே விட்டுவிட்டு வரச் சொல்ல அவனும் எளிதாக அவருடன் மலை ஏறினான்.
இருவரும் வேகமாக மலை உச்சியை அடைந்தனர்.
ஞானி சொன்னார், ''நேர்மை வழியிலிருந்து பிறழ்ந்து விட்டால் மனசாட்சி மிகவும் கனமாகிவிடும். கனமான கற்களைத் தூக்கி கொண்டு உன்னால் மலை ஏற முடியவில்லை. அது போல மனசாட்சியைக் கனமாக வைத்துக் கொண்டு உன்னால் நிம்மதியாகவும் நிறைவாகவும் வாழ முடியாது.''
திருடனும் திருந்தினான்.