கிழக்கு ஆசிய நாடுகளில், ஒரு விதமான பூச்சியைப் பிடித்து, ஒரு கண்ணாடிப் பெட்டியினுள் அடைத்து மூடி விடுவார்கள். அந்தக் கண்ணாடியில் சிறிய துவாரங்கள், சுவாசிப்பதற்காக இருக்கும். அந்த பூச்சியானது, மேலே நோக்கிப் பறந்து, வெளியே போக முயற்சி செய்யும். மேலே உள்ள கண்ணாடியில் இடித்து, “ஆ! அம்மா !! வலிக்குதே, இனி மேலே நோக்கிப் போகும் போது பார்த்துப் போகனும்” என்று தீர்மானித்துக் கொள்ளும்.
அதேப் போல, இடது புறம் உள்ள கண்ணாடி வழியாக, வெளியேச் செல்ல முயற்சிக்கும். அதே அடி. அதே வலி. அதேத் தீர்மானம்.
இப்படியாக எல்லா திசைகளிலும், பறந்து, வெளியேச் செல்ல முயன்று, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து விடும்.
“சரி, இதுதான் நமது வாழ்க்கை. இந்த கூண்டுக்குள்தான் இனி நம் வாழ்நாளைக் கழிக்க வேண்டும் போல இருக்கு. இனியும் முயற்சி செய்து பலன் இல்லை. ஆக, இந்தக் கூண்டுக்குள், நாம் எப்படி மகிழ்ச்சியாக நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணத் தொடங்கி விடும். அதோடு கூண்டைத் தாண்டி வெளியேச் செல்லும் முயற்சியைக் கைவிட்டு விடும். இப்போது மேலே நோக்கி பறக்கும்.
சரியாக ஒரு அங்குல தூரத்தில் நின்று விடும். இந்த தடவை, கண்ணாடியில் இடி இல்லை. வலியும் இல்லை. அதே போல், இடது பக்கம் பறக்கும். ஒரு அங்குலத் தூரத்தில் நின்று விடும்.
அனைத்துப் பக்கங்களிலும் பறக்கும். எந்தக் கண்ணாடியிலும் இடிக்காமல் பறக்கும். அந்தத் திறமையை, வாழ்க்கை அளித்த பாடம் என்று பெருமையாக எண்ணிக் கொள்ளும். இப்படி, அந்தப் பூச்சி, எந்தப் பக்கத்திலும் இடிக்காமல் பறப்பதைப் பார்த்தவுடன், அவர்கள், மேலே உள்ள கண்ணாடி, மற்றும் பக்கங்களில் உள்ள கண்ணாடியை எடுத்து விடுவார்கள்.
இப்போது, மேலே கண்ணாடி இல்லை. பக்கங்களில் கண்ணாடி இல்லை. ஆனால், அந்தப் பூச்சி, ஆனந்தமாக, இன்னும் அந்த ஒரு அங்குலத் தூரத்தில் நின்று, இல்லாத கண்ணாடிகளில் இடிக்காமல், அந்த வேலி இல்லாத பெட்டிக்குள், தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறது.
.
அந்த பூச்சி மட்டும், பழைய வலியை மறந்து, முயற்சி செய்து இருந்தால் அந்த ஒரு அங்குலத் தூரத்தைக் கடந்து இருக்கும். ஒரு அங்குலத் தூரத்தைக் கடந்து இருந்தால், இந்த உலகத்தையேச் சுற்றி வந்து இருக்கும்.
ஆம், நண்பர்களே.., தொடர்ந்து முயற்சி செய்வதைக் கைவிட்டு விட்டு, நம்மில் பலர், இந்தப் பூச்சியை போன்று வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
முயற்சி செய்யுங்கள் ''வெற்றி'' கிடைக்கும். முயற்சி செய்யுங்கள் ''தோல்வியும்'' கிடைக்கும். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், 'தோல்வியும் வெற்றியாக'' மாறும்.