ஒரு செல்வந்தர் தனது மகனுக்கு தொழில் மற்றும் படிப்பினை பெற்றுக் கொள்வதற்காக தனது நண்பரின் நிறுவனம் ஒன்றில் பணிசெய்ய தனது மகனை 6 மாத காலத்திற்கு அனுப்பி வைத்தார்.
அவர் மகனோ எந்த வேலையும் செய்யவில்லை. ஆனாலும், தனது நண்பர் மகன் என்பதால் அவரும் கண்டுகொள்ளாமல் 6 மாதம் கடந்தவுடன் ஒரு தங்க நாணயத்தைக் கூலியாகக் கொடுத்து அனுப்பினார்.
அந்த நாணயத்தைத் தனது அப்பாவிடம் மகன் கொண்டு வந்து கொடுத்தான்.
அதனை வாங்கிய அப்பா, அதனைத் தூக்கித் தூர எறிந்தார். அதைக் கண்ட மகனோ ஒன்றும் கண்டு கொள்ளாமல் தனது படுக்கை அறைக்கு சென்று விட்டான்.
மீண்டும் இன்னொரு தெரிந்த நண்பரிடம் 3 மாதத்திற்கு வேலைக்கு அனுப்பினார்.
அங்கும் இப்படித்தான் எந்த வேலையும் செய்யாமல் 3 மாதம் கடத்தினான். ஆனாலும், தனது நண்பர் மகன் என்பதால் அவரும் 2 தங்க நாணயங்கள் கொடுத்து அனுப்பினார்.
அதையும் அப்பாவிடமே கொண்டு வந்து கொடுத்தான்.
முன்பு போலவே அந்த 2 நாணயங்களையும் தூக்கித் தூர எறிந்தார். அப்போதும் கண்டு கொள்ளாமல் மாடிக்குச் சென்று விட்டான்.
சிறிது காலம் கழித்து, அறிமுகம் இல்லாத ஒருவர் இடத்தில் வேலைக்குச் சேர்த்து விட்டார்.
அங்கு 3 மாதம் வேலை செய்து விட்டு 1/2 தங்க நாணயத்தை ஊதியமாக கொண்டு வந்து கொடுத்தான்.
முன்புபோலவே அதையும் தூர தூக்கி எறிந்தார். ஆனால் இம் முறை, அவனுக்கு மிக பெரிய அளவில் கோபம் வந்தது விட்டது.
“இது என்ன தெரியுமா? எனது வியர்வை! எனது உழைப்பு!! 3 மாதம் தூங்காமால் உழைத்து இருக்கிறேன். அதற்கான கூலி இது. இவ்வளவு அலட்சியமாகத் தூக்கி எறிந்து விட்டாய், நீ எல்லாம் ஒரு மனிதனா?சாய்வு நாற்காலியில் படுத்துக் கிடக்கும் உனக்கு உழைப்பின் வலிமை தெரியவில்லை. தெரிந்தால் இதைத் தூக்கி எறிந்து இருப்பாயா?” என்று கோபமாகக் கத்தினான்.
அப்பொழுது அவனது அப்பா சொன்னார்.
“இதைத்தான் உன்னிடம் நான் எதிர்பார்த்தேன். முன்பு நீ உழைக்காமல் கொண்டு வந்து கொடுத்தத் தங்க நாணயத்தை, நான் தூர எறிந்த பொழுது உனக்குக் கோபம் வரவில்லை. காரணம், அப்போது உனக்கு உழைப்பின் அருமை தெரியவில்லை. இப்போது நீ உழைத்துக் கொண்டு வந்த தங்க நாணயத்தை நான் எறிந்த பொழுது, உனக்கு சரியான கோபம் வருகிறது. காரணம், நீ கஷ்டப்பட்டு உழைத்து பெற்று வந்தது. உழைப்பின் வலிமை உனக்கு இப்போதுதான் தெரிகிறது. இதைத்தான் நான் உன்னிடம் எதிர்பார்த்தேன் என்று சொல்லி மகனையும் அந்த 1/2 பவுன் தங்க நாணயத்தையும் மாறி மாறி முத்தம் இட்டார்.
உழைக்காமல் எது கிடைத்தாலும் நிலைக்காது, அதனின் அருமை தெரியாது. உழைத்துப் பெற்ற பொருளை ஒரு போதும் மனம் இழக்க நினைக்காது. தகப்பனாக இருந்தாலும், மனம் தட்டிக் கேட்கத் தயங்காது.