சங்கரபுரம் என்ற ஊரில் சித்தன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்து வந்தான். அவன் குணத்தில் நல்லவனாகவும் சிறந்த பக்திமானாக இருந்த போதிலும் அவனுக்கு வாய்த்த மனைவி கொடுமைக்காரியாக இருந்ததால் அவனது வாழ்க்கை மிகவும் கஷ்டத்திலேயே நகர்ந்தது. வேலை நேரத்தை தவிர்த்து, மற்ற நேரங்களைத் தியானத்திலும் பிராத்தனையிலும் செலவிட்டான். எந்த அளவிற்கு அவன் பக்தியில் மனதைச் செலுத்துகின்றானோ அந்த அளவிற்கு அவனை கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டன.
அதே ஊரில் அவனுக்கு வித்தன் என்ற சூழ்ச்சி குணமுடைய பணக்கார நண்பன் இருந்தான். தனது இன்பத்திற்காக எந்த ஒரு கொடுமையான செயலையும் செய்பவனாக அவனிருந்தான்.
அவனுக்கு நல்ல குணமுடைய பக்தியில் சிறந்த மனைவியும் அமைந்திருந்தாள். இருப்பினும், அவனுக்குக் கடவுள் நம்பிக்கை என்பது துளிகூட இல்லை. அவனுக்கு சித்தனின் கடவுள் நம்பிக்கையை கேலி செய்வது என்பது வாடிக்கையான வேலை.
அதன் காரணமாக ஒரு கட்டத்தில் இருவரிடையே சண்டையே வந்துவிட்டது.
கோபத்தில் வெகுண்டெழுந்த சித்தன் இறைவன் மீது தனது பக்தி உண்மையாயிருந்தால் இன்னும் ஒரு வாரத்தில் நீ செய்த தவறுக்கெல்லாம் தண்டனை அனுபவிப்பாய் என்று சாபமிடத் தொடங்கினான்.
சிரித்துக்கொண்ட வித்தன் அப்படி நடக்கவில்லை என்றால், நீ ஆன்மீகத்தை கைவிட வேண்டும் என்ற சவாலுக்கு இழுத்தான். அதற்கு ஒப்புக்கொண்ட சித்தன் தீவிரமான பிராத்தனையில் ஈடுபட்டான்.
போட்டியின் கடைசி நாளும் வந்தது. அந்த நாளில் வித்தனோ காட்டிற்குச் சென்று தேவைக்கு அதிகமான பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாடி கொன்று விருந்திற்காக வீட்டிற்கு எடுத்து வந்து கொண்டிருந்தான். வரும் வழியில் களைப்பு தாங்காமல் ஒரு மரத்தினடியில் ஓய்வெடுக்க உட்கார்ந்தான்.
உட்கார்ந்த இடத்தில் ஏதோ உருத்துவது போல் இருந்ததனால் என்ன? என்று விலக்கி பார்த்தான். கணக்கிட முடியாத செல்வம் அங்கு புதைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து, அதையும் மூட்டையாக கட்டிக்கொண்டு இரட்டை சந்தேஷத்துடன் வீடு திரும்பினான்.
இதற்கிடையே வயலில் வேலை செய்துகொண்டிருந்த சித்தனை மாடு முட்டி கடுமையான காயங்களுடன் படுத்த படுக்கை ஆக்கிவிட்டது விதி.
இப்படி ஒரு முட்டாள் கணவனுடன் வாழ்வது அசிங்கம் என்று சித்தனின் மனைவிஅவனைவிட்டு நீங்கினாள்.
தனது நிலையை நினைத்து உள்ளும் வெளியும் ஒவ்வொரு நொடியும் அழுதே தீர்த்தான். தான் பட்ட அவமானத்தால் இனி வாழ்ந்து பயனில்லை என்ற முடிவுக்கு வந்தான் சித்தன்.
உடல் ஊனத்தால் அவனால் தற்கொலை கூட செய்து கொள்ள முடியவில்லை. எப்படியோ எழுந்து தன் விட்டிற்கு பின்னாலுள்ள கிணற்றில் குதித்தான்.
திடீரென்று தன்னை யாரோ தூக்குவது போல் உணர்ந்தான். ஆம் எந்த தெய்வத்தை அவன் பக்தியுடன் வணங்கினானோ அதே தெய்வம் அவனைக் காப்பாற்றிக் காட்சியும் கொடுத்தது.
உடலாலும் மனதாலும் அவதிப்பட்ட அவனுக்கு வணங்கத் தோன்றவில்லை, மாறாகச் சண்டை போடத் தொடங்கினான். தனது ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் கொட்டித் தீர்த்தான்.
அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த கடவுளோ, அவனைத் தன்னோடு அணைத்துக் கொண்டார்.
இறைவனின் அரவணைப்பால் சற்று ஆறுதல் பெற்றான் சித்தன்.
அப்பொழுது கடவுள் பேச தொடங்கினார். சித்தா, நீ இப்பிறவியில் நல்லவனாகப் பிறந்திருந்தாலும் முன்பிறவியில் வித்தனை விடக் கொடுமைகாரனாக இருந்தாய். நீ உன் மனைவியை மதித்தது கூட கிடையாது. மாறாக வித்தனோ முன்பிறவியில் நல்ல காரியங்களையேச் செய்து வந்தான், அதனால் இப்பிறவியில் அவனுக்கு சகல நன்மைகளும் கிடைத்தது. மாறாக, உனக்கோ நீ செய்த பாவங்களை அனுபவிக்க நேரிட்டது. என்னை அனுதினமும் நீ வணங்கியதால், நீ அனுபவிக்க வேண்டிய கர்மத்தின் பெருபாலனவையை நானே ஏற்றுகொண்டேன். மாறாக, நீயோ அதில் சிறு பகுதியையே அனுபவிக்கின்றாய். ஆன்மீகத்தைத் தொடங்கும் ஒருவன் முதலில் அவனது பாவபதிவையே அனுபவிக்கத் தொடங்குகின்றான். மாறாக, அக்கிரமங்கள் செய்யும் ஒருவனுக்கோ அவன் செய்த புண்ணியங்களை அனுபவித்த பின் அவன் பாவபதிவுகள் செயல்படத் தொடங்கும். வித்தனுக்கு கிடைத்த புதையலே அவனுடைய கடைசிப் புண்ணிய பதிவாகும். அவன் செய்த அனைத்து புண்ணியங்களும் ஒட்டுமொத்தமாகச் செயல்பட்டு அவனுக்கு புதையலாகக் கிடைத்தது. இதுவரை நீ அனுபவித்த கஷ்டங்களில் உனது அனைத்துப் பாவங்களும் கரைந்துவிட்டன. இனி நடக்கவிருப்பதை நீயே உன் கண்ணால் பார்த்துத் தெரிந்து கொள் என்று சில அறிவுரைகளையும் கூறி மறைந்தார் கடவுள்.
நாட்கள் செல்லச்செல்ல சித்தனின் உடல் நிலை நலம் பெறத் தொடங்கியது. அவனது நெருங்கிய உறவினருக்கு வாரிசு இல்லாததால் அவரது சொத்துக்கள் அனைத்தும் சித்தனுக்கு கிடைத்தது. நல்ல குணமுடைய மனைவியும் சித்தனுக்கு அமைந்தாள். அதே சமயத்தில் வித்தனுக்கோ வினோதமான ஒரு நோய் தாக்கி படுத்த படுக்கையாகி விட்டான். அவனது மனைவியும் திடீரென்று இறந்து விட, அவன்கூட இருந்தவர்கள் அவனை ஏமாற்றி அவன் சொத்துக்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டு வெளியே துரத்தி விட்டனர்.
தனது நண்பனின் நிலை அறிந்து வருந்திய சித்தன், வித்தனையும் தன் இல்லத்திலேயேத் தங்கச் செய்து உதவினான்.