இலங்கையில் சீதையைக் கண்டு விட்டு வரும் அனுமன், "கண்டனன் கற்பினுக் கணியைக் கண்களால்" என்று தெரிவித்ததாகக் கம்பன் பாடியிருக்கிறார்.
'கண்களால் கண்டனன்' என்று சொல்வதில் என்ன விசேஷம்? அனுமன் மாத்திரமல்ல, யாருமே கண்களால் தானே பார்க்கமுடியும்? என்று நமக்குத் தோன்றலாம்.
அதிலிருக்கும் பொருள் இதுதான்...
சீதையைத் தேடப் புறப்பட்ட போது சீதை எப்படி இருப்பாள் என்பது அனுமனுக்குத் தெரியாது. எனவே, அனுமன் ஒரு காரியம் செய்தார். மனைவியைப் பிரிந்து தவிக்கும் ஸ்ரீராமனின் கண்களை நன்றாகப் பார்த்து வைத்துக் கொண்டார். அந்தக் கண்களில் எத்தனை சோகம் தேங்கியிருக்கிறதோ, அதே அளவு சோகம் எந்தப் பெண்ணின் கண்களில் இருக்கிறதோ அவள்தான் சீதையாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். அவ்வாறே, அசோகவனத்தில் சீதையைப் பார்த்ததும் அவள்தான் சீதை என்பதை, அந்தக் கண்களின் சோகத்தால் 'கண்களால்' கண்டு கொண்டார்.