ஒரு காட்டில் ஒரு ஆலமரம் இருந்தது. அதில் பலவிதமான பறவைகள் வசித்து வந்தன. அந்த மரத்தடியில் நூறு துவாரங்கள் உள்ள வலையில் பலிதம் என்னும் புத்திசாலி எலி ஒன்று வசித்து வந்தது.
அந்த ஆலமரத்தில் இருக்கும் பறவைகளைத் தின்று வாழும் ஒரு பூனையும் அங்கிருந்தது. அதன் பெயர் லோமசம்.
அந்தக் காட்டில் இருந்த வேடன் ஒருவன் நாள்தோறும் மரத்தடியில் பொறி வைத்து பறவைகளைப் பிடித்து தின்று வாழ்ந்து கொண்டிருந்தான்.
அந்தப் பொறி நரம்புகளால் ஆன சுருக்குக் கயிறுகளைக் கொண்டது. ஒருநாள் அந்தப் பூனை அந்தப் பொறியில் மாட்டிக் கொண்டு தவித்தது.
அதைக் கண்ட எலி பயமின்றி இங்கும் அங்கும் ஆனந்தமாக ஓடத் தொடங்கியது.
ஒரு மாமிசத் துண்டு பொறியின் மீது இருந்ததை எலி பார்த்தது. அதை எடுத்து தின்று கொண்டிருந்த போது 'அரிண' என்னும் கீரி ஒன்று தன்னை நோக்கி ஓடி வருவதைக் கண்டது.
அதே சமயம் ஆலமரத்தின் மீது 'சந்த்ரக' என்னும் கோட்டானையும் பார்த்துப் பயப்படத் தொடங்கியது.
என்ன செய்யலாம் என சிந்தித்த எலிக்கு ஒரு யோசனத் தோன்றியது. 'அறிவுள்ளவன் ஆபத்தைக் கண்டு அஞ்சமாட்டான்' அதிலிருந்து தப்ப வழியைப் பார்ப்பான். எனவே பகைவனானாலும் பூனையின் உதவியை நாடித் தப்பிக்கலாம். பூனையும் ஆபத்தில் சிக்கியுள்ளது. அதனால் அதுவும் சமாதானத்திற்குச் சம்மதிக்கும்.
ஆகவே, அதனுடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டு உயிரைக் காக்கலாம் என எண்ணியது. மேலும், ஆபத்துக் காலத்தில் உதவி செய்பவனே நண்பன், உதவி செய்யாதவன் பகைவன், சில சமயம் நண்பன் நழுவி விடுவான், பகைவன் உதவி செய்வான். எனவே, பகைவனாயிருந்தாலும், பூனை என்னால் விடுவிக்கப்படுமானால் எனக்கு உதவி செய்யக் கூடும். எனவே, ஒரு யுக்தியுடன் பூனையிடம் சமாதானம் செய்துக் கொள்ள வேண்டும்' என முடிவெடுத்தது.
பூனையுடன் சமாதான பேச்சை ஆரம்பித்தது.
'பூனையாரே, நட்பு முறையில் ஒன்று சொல்கிறேன், நல்ல வேளை பிழைத்தீர்கள், நீங்கள் தப்பிக்க வேண்டும் என்பது என் எண்ணம். இதனால் எனக்கும் நன்மை உண்டாகும். பயம் வேண்டாம். இப்பேராபத்தை போக்கிவிடுகிறேன். என் கூரிய பற்களால் இப்பொறியைத் துண்டுதுண்டாகக் கடித்து உங்களை வெளியே செல்லச் செய்கிறேன். நீர் இம்மரத்தின் மேல் வெகுநாட்களாக வாழ்கிறீர், நான் மரத்தடியில் பல நாட்களாக வாழ்ந்து வருகிறேன். இதனால் நாம் நண்பர்கள் ஆவோம். இப்போது கீழே உள்ள கீரி என்னை இன்னும் பார்க்கவில்லை. பார்த்தால் என் கதி அவ்வளவுதான். எனக்குப் பயமாக இருக்கிறது. நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டு இன்பமாய் வாழலாம் என்றது.
பகையான எலியின் வார்த்தைகளில் மகிழ்ந்த பூனை எலிக்கு நன்றி கூறியது. எலியைப் போல பூனையும் வஞ்சனையுடையது. எனவே சாமர்த்தியமாகப் பேசியது.
'எலியே, உன் பேச்சு அழகாய் உள்ளது; நீ கூறியபடி என்னைச் சீக்கிரம் விடுதலை செய். என்னைப் போல நீயும் பெரிதும் துன்புறுகிறாய். இது எனக்கு வருத்தத்தைத் தருகிறது. நம் காரியம் நிறைவேற ஒரு உடன்பாட்டிற்கு வருவோம். நான் இதிலிருந்து விடுபட்டால் உனக்கு உதவுவேன்' என்றது.
உடன் எலி, 'பூனையாரே! இனி என் பயம் தொலைந்தது. தாங்கள் வலையிலிருந்து விடுபட்டதும் என்னைக் கொன்றுவிடக் கூடாது. தவிர்த்து கோட்டான், கீரி ஆகியவற்றிடமிருந்தும் என்னைக் காக்க வேண்டும்" என்று கேட்டது.
பூனை 'என் உயிர் நண்பனே, உன்னால்தான் நான் பிழைக்கப் போகிறேன், இன்னும் என்னால் ஏதேனும் ஆக வேண்டுமாயின் ஆணையிடு, செய்கிறேன்; இனி நான் உன் நண்பன் அல்லவா?' என்றது.
பூனையின் ஆறுதலைக் கேட்ட எலி, நட்புமுறையில் பூனையுடன் பழக ஆரம்பித்தது. அதன் மார்பின் மீது தவழ்ந்து விளையாடத் தொடங்கியது. இது கண்டு கோட்டானும், கீரியும் தம் எண்ணம் ஈடேறாததால் வேறிடம் சென்றன.
இடம், காலம் தெரிந்த எலி கயிற்றை மெதுவாகக் கடிக்கத் தொடங்கியது.
பூனையோ, 'ஏன் வளையை தாமதமாக அறுக்கிறாய், சீக்கிரம் அறுத்து விடு' என்றது.
எலி, 'எந்த வேலையை எப்போது செய்ய வேண்டும் என நான் அறிவேன். இப்போது உம்மை விடுவித்தால், என்னையேக் கூட கொன்றிடுவீர்; தக்க சமயத்தில், வலை விரித்தவன் வரும்போது வலையை அறுப்பேன். அப்போது உடனே நீங்கள் மரத்திற்குத் தாவிப் போய் விடலாம், நானும் வளைக்குள் போய் விடுவேன். அப்படிப்பட்ட அவசர நிலையில்தான் நானும் தப்பிக்க முடியும்; இல்லையேல் உமக்குப் பலியாகி விடுவேன்' என்றது.
அதைக் கேட்டு அந்தப் பூனை வருத்தம் அடைந்தது. தாமதம் செய்த எலியைப் பார்த்து 'உயர்ந்தோர், நண்பர்களுக்கு உதவி செய்வதில் இவ்வளவு தாமதிக்க மாட்டார்கள். நான் எவ்வளவு விரைவாக உன் துன்பத்தைப் போக்கினேன்; நீ மட்டும் ஏன் தயங்குகிறாய்? பழைய பகையை மனதில் கொண்டு நடக்கிறாய்; இது நல்லதல்ல. மேலும், நீ தாமதப்படுத்தினால் என் உயிர் பிரிந்துவிடும்' என்றது.
புத்திசாலியான எலி, வஞ்சக எண்ணம் கொண்ட பூனையை நோக்கி, 'நண்பரே! பூனையாரே; சுயநலம் மிக்க உமது எண்ணத்தை அறிந்து கொண்டேன். பாம்பின் வாயிலிருந்து தப்பிப்பது போல பகைவனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்பர் பெரியோர். உலகில் இயற்கையாகவே நண்பர்களோ, பகைவர்களோ தோன்றுவதில்லை. ஒருவன் உதவி செய்யும் போது நண்பன் ஆகிறான். அவனே தீமை செய்யும் போது பகைவனாகக் கருதப்படுகிறான். சமயத்திற்கேற்ப பகையும், நட்பும் மாறும். காரியம் முடிந்த பின் யாரும் யாரையும் கவனிப்பதில்லை. ஆதலால் எந்தச் செயல் ஆனாலும் அதில் கொஞ்சம் மிச்சம் வைத்திருக்க வேண்டும். உமக்கு வலையை விரித்தவன் வந்ததும் பயந்து என்னைத் தின்னும் எண்ணத்தைக் கைவிட்டு ஓடி விடுவீர். நானும் தப்பித்துப் பிழைத்து விடுவேன்.
அதிகம் இல்லை அறுபட வேண்டியது ஒரு கயிறுதான். சற்றுப் பொறுமையுடன் இருங்கள்; அதையும் அறுத்து விடுகிறேன்' என உரைத்தது.
அந்த நேரத்தில் சில நாய்களுடன் வந்தான் பொறியை வைத்தவன். பூனை அவனைக் கண்டு பயந்து, 'இப்போது என் நிலையைப் பார்த்து; என்னை விடுவிப்பாயாக' எனக் கெஞ்ச, எலியும் தாமதமின்றி கயிற்றைத் துண்டித்தது.
உடன் பூனை விரைவாய் ஓடி மரமேறியது. அவனைக் கண்டு கோட்டானும், கீரியும் கூட ஓடி மறந்தன. எலியும், தன் பணி முடிந்து வளையில் ஒளிந்து கொண்டது.
பொறியை வைத்தவன் ஏமாற்றத்துடன் திரும்பினான்.
பின் பூனை எலியை நோக்கி, 'ஆபத்தில் உதவி செய்தவரே, நானும் எனது உறவினர்களும் உன்னை கௌரவிக்க விரும்புகிறோம்; என் சொத்து உனக்கே உரியது; என்னிடம் உனக்குப் பயம் வேண்டாம்; பயப்படாமல் வா' என்றது.
பூனையின் நோக்கத்தைப் புரிந்துக் கொண்ட எலி, 'உமது பாசமொழிகள் கேட்டு மகிழ்ச்சி. ஆனாலும் ஒன்று சொல்கிறேன். நண்பர், பகைவர் பற்றி ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும் என்பர் சான்றோர். நண்பர் பகைவர் போலவும், பகைவர் நண்பர் போலவும் தோற்றம் அளிக்கலாம். இந்தப் பகையும், நட்பும் நிலையானது அல்ல. ஏதோ ஒரு நோக்கத்தைக் கொண்டுதான் நட்பும், பகையும் அமைகின்றன. எனவே, இனி உம் நட்பு தேவையில்லை” என்று சொல்லிவிட்டு வளைக்குள் சென்று மறைந்தது.