ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாடச் சென்றார்.
நேரம் போனது தெரியாமல் வேட்டையாடிக் கொண்டிருக்கும் போது மாலை நேரம் வந்து எங்கும் இருள் கவ்வத் தொடங்கிவிட்டது. அப்போது தூரத்தில் தெரிந்த ஒரு மரத்தின் மீது ஏதோ ஒரு மிருகம் அமர்ந்திருப்பதை போல இருந்தது. மிகப் பெரிய உருவமாக இருந்தபடியால் ஏதேனும் கொடிய மிருகமாகத் தான் இருக்கவேண்டும் என்று கருதி, வில்லில் அம்பைப் பூட்டி மரத்தை நோக்கி பாணத்தை செலுத்தினான்.
அடுத்த சில வினாடிகளில் மரத்தின் மீதிருந்து, “ஐயோ… அம்மா” என்ற குரல் கேட்டது.
ஏதோ ஒரு மிருகத்தின் ஓலம் கேட்கும் என்று எதிர்பார்த்தால் இப்படி மனிதனின் ஓலம் கேட்கிறதே…
யாரையோத் தவறுதலாக கொன்று விட்டோமோ என்று அஞ்சி மரத்தை நோக்கி விரைந்தான்.
அங்கு சென்று பார்த்தால் பதினாறு வயதையொத்த சிறுவன் ஒருவன் இவரின் அம்புக்கு பலியாகி வீழ்ந்து கிடந்தான்.
“இப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்து விட்டதே”என்று பதைபதைத்த அரசன், உடனே காவலாளிகளைக் கூப்பிட்டு, “இவன் பெற்றோர் அருகே தான் எங்காவது இருக்க வேண்டும். உடனே கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டான்.
வீரர்கள் நாலாபக்கமும் விரைந்தனர்.
கடைசியில் ஒரு விறகு வெட்டித் தம்பதியினரை அழைத்து வந்தனர்.
“இவர்கள் தான் அந்தப் பாலகனின் பெற்றோர். காட்டில் விறகு வெட்டிப் பிழைப்பதுதான் இவர்கள் தொழில்” என்று மன்னனிடம் கூறினார்கள்.
மன்னன் அவர்களிடம் நடந்ததைக் கூறி, “என்னை மன்னித்து விடுங்கள். நான் வேண்டுமென்று உங்கள் மகனை கொல்லவில்லை. அறியாமல் நடந்த தவறு இது. போதிய வெளிச்சம் இல்லாததாலும் தூரத்திலிருந்து அம்பெய்ததாலும் மரத்தின் மீதிருந்தது ஏதோ ஒரு விலங்கு என்று எண்ணி விட்டேன்…”
தான் சொன்னதைக் கேட்டு அவர்கள் சமாதானாக வில்லை என்று யூகித்துக் கொண்டான்.
அடுத்த நொடி கைதட்டித் தனது காவலர்களை அழைத்தவன் இரண்டு பெரிய தட்டுக்கள் கொண்டு வருமாறு கட்டளையிட்டான்.
அருகே நின்று கொண்டிருந்த அமைச்சரிடம், இரண்டு தட்டுக்களை அவர்கள் முன்பு வைக்கச் சொன்னான்.
தட்டுக்கள் வைக்கப்பட்ட பிறகு, அதில் ஒரு தட்டில் பொற்காசுகளைக் கொட்டி, தான் அணிந்திருந்த விலைமதிப்பற்ற ஆபரணங்கள் நகைகள், நவரத்தின மாலை, முத்தாரம் என அனைத்தையும் வைத்தான்.
பின்னர் தன் இடுப்பிலிருந்த உடைவாளை உருவி, அதை மற்றொரு தட்டில் வைத்தான்.
“மக்களை காக்கவேண்டிய நானே எனது குடிமகன் ஒருவன் உயிரிழக்க காரணமாகி விட்டேன். நான் தண்டிக்கப் படவேண்டியவன். பாதிக்கப்பட்ட உங்களிடமே தீர்ப்பை கூறும் வேலையை விட்டு விடுகிறேன். நான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் இது தான். இதோ ஒரு தட்டு நிறைய பொற்காசுகள் விலைமதிப்பற்ற ஆபரணங்களும் இருக்கின்றன. அவற்றை எடுத்துக் கொண்டு என்னை மன்னியுங்கள். அப்படி மன்னிக்க விருப்பம் இல்லை என்றால், மற்றொரு தட்டில் இருக்கும் உடைவாளை எடுத்து என்னை வெட்டி வீழ்த்தி உங்கள் மகனைக் கொன்றதற்கு பழி தீர்த்துக் கொள்ளுங்கள்...” என்று தனது கிரீடத்தைக் கழற்றி மந்திரியிடம் கொடுத்து இந்தப் பெற்றோர் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான் அரசன்.
உடன் வந்த காவலர்களுக்கும் மந்திரி பிரதானிகளும் நடப்பதை பார்த்து திகைத்துப் போய் நின்றனர்.
அந்த விறகுவெட்டி நம் மன்னனை வெட்டிவிட்டால் என்ன செய்வது?
மக்களுக்கும் மகாராணியாருக்கும் என்ன பதில் சொல்வது… செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர்.
சில நிமிடங்கள் மௌனத்திற்கு பிறகு விறகு வெட்டி பேச ஆரம்பித்தான்…
“ஒன்று நான் இந்த ஆபரணங்களையும், பொற்காசுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது மன்னரைக் கொல்ல வேண்டும்… அப்படித்தானே…? நான் எதைச் செய்யப் போகிறேன் என்று அறிந்துகொள்ள அனைவரும் படபடப்புடன் காத்திருக்கிறீர்கள் சரிதானே? நான் விரும்புவது இந்தப் பொற்காசுகளையோ ஆபரணங்களையோ அல்ல… என் மகனேப் போய்விட்ட பிறகு, இவற்றை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்...?
“ஐய்யய்யோ... அப்படியென்றால் இவன் மன்னரைக் கொல்லப் போகிறான் போலிருக்கிறதே...” என்று எல்லோரும் வெடவெடத்துப் போனார்கள்.
விறகுவெட்டி தொடர்ந்தான்… “நீங்கள் நினைப்பது போல நான் மன்னரைக் கொல்ல விரும்பவில்லை. அவர் அளிக்கும் பொன் பொருளையும் விரும்பவில்லை. நான் விரும்பியது எதுவோ அது கிடைத்து விட்டது. தான் செய்த தவறு குறித்து மன்னர் மனம் வருந்தவேண்டும் என்று விரும்பினேன். அவரோ வருந்திக் கண்ணீர் விட்டதோடு பெருந்தன்மையாக தனது உயிரையும் பதிலுக்குத் தியாகம் செய்யத் துணிந்துவிட்டார். அது ஒன்றே எனக்கு போதும். மன்னரைத் தண்டிப்பதால் என் மகன் எனக்கு மீண்டும் கிடைக்கப் போவதில்லை. ஆனால், இந்த நாடு ஒரு நல்ல மன்னனை இழந்துவிடும். நான் அப்படிச் செய்தால் என் மகனின் ஆன்மாவே என்னை மன்னிக்காது. அதே நேரம், நான் பொன்னையும் பொருளையும் பெற்றுக் கொண்டால், என் மகனின் உயிருக்கு நான் விலை பேசியது போலாகிவிடும். மன்னர் தான் செய்த தவறுக்கு உளப்பூர்வமாக மனம் வருந்தி சிந்திய கண்ணீரே போதுமானது… எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம்” என்று கூறி தன் மனைவியை அழைத்துக் கொண்டு தன் வழியே போய்விட்டான் விறகுவெட்டி.
ஒரு விறகுவெட்டிக்கு இப்படி ஒரு பெருந்தன்மையா? இப்படி ஒரு ஞானமா? என்று வியந்து போனார்கள் அனைவரும்.