துறவறம் சாதாரணமானதா?
ஒரு கணவனும் மனைவியும் சந்நியாசம் பெற்றுக் கொண்டு, தீர்த்த யாத்திரைக்காக ஒன்று சேர்ந்து சென்றனர்.
அவர்கள் ஒரு காட்டு வழியே சென்று கொண்டிருந்தார்கள். முன்னதாக அக்கணவனும், பின்னே அவன் மனைவியுமாகச் சென்றனர். சற்றுத் தூரம் செல்கையில் முன்னே சென்ற கணவனுக்கு ஒரு வைரக்கல் தென்பட்டது.
ஒரு வேளை அந்த வைரக்கல்லைத் தன் மனைவி கண்டு, அதன் மேல் ஆசை கொண்டு தன் சந்நியாச பலத்தை இழந்து விடுவாளோ என சிந்தித்தான். அதை அவள் கண்களில் படாமல் புதைத்து விடலாம் என முடிவெடுத்தான். அவள் அருகில் வருவதற்குள் புதைக்க வேண்டுமே என அவசர அவசரமாகத் தரையைத் தோண்டினான்.
ஆனால் மனைவி அருகில் வந்து விட்டாள். " சுவாமி எதற்காக இத்தனை அவசரமாகத் தரையைத் தோண்டுகிறீர்கள்?" எனக் கேட்டாள். அவளிற்கு உண்மையைச் சொல்லாமல் ஏதோ மறைமுகமாகப் பதில் சொன்னான்.
இருப்பினும் அவன் மனைவிக்கு அவன் மனக்கருத்தைப் பற்றியும், வைரத்தினைப் பற்றியும் நன்றாக விளங்கியது. அதனால் அவன் மனதிற்படும்படி இப்படிக் கேட்டாள். " சுவாமி! வைரத்துக்கும், சாதாரண கல்லுக்கும் உள்ள வித்தியாசம் தங்களுக்கு இன்னும் தெரிகிறதானால் தாங்கள் ஏன் உலகத்தைத் துறந்து வந்தீர்கள்?"
கணவனால் ஒன்றும் பேச முடியவில்லை.
-ஸ்ரீ ராமகிருஷ்ணர் கதை.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.