ஒரு காடு. அந்தக் காட்டில் ஒரு காக்கை, ஒரு எலி, ஒரு மான், ஒரு ஆமை என்று நான்கும் நண்பர்களாக இருந்தன.
ஒரு நாள் மேயப்போன மான் திரும்பி வரவில்லை. வெகுநேரம் வரை வரவில்லை.
காக்கையும், எலியும், ஆமையும், ‘மான் எப்போது வரும் ? எப்போது வரும்?’ என்று எதிர்பார்த்துக் கொண்டே இருந்தன. ஆனால், மான் வரவே இல்லை.
மானைத் தேடி காக்கை புறப்பட்டது. இங்கும் அங்கும் பறந்தது. கடைசியாக மானைக் கண்டு பிடித்துவிட்டது. ஆனால், பாவம், மான் ஒரு வலைக்குள் அகப்பட்டுக் கொண்டிருந்தது.
மான் பக்கத்திலே காக்கை போனது. “நண்பா, கவலைப்படாதே. நான் உடனே போய், நமது எலியைக் கூட்டிக் கொண்டு வருகிறேன். அது இந்த வலையை அறுத்து உன்னைக் காப்பாற்றிவிடும்” என்றது.
உடனே, எலியும் ஆமையும் இருந்த இடத்திற்குக் காக்கை பறந்து சென்றது. தான் பார்த்ததைச் சொன்னது.
அதைக் கேட்டதும், “ஆ அப்படியா? வா, உடனே போகலாம்” என்றது எலி.
காக்கை, எலியை முதுகிலே தூக்கிக் கொண்டு பறந்தது. இரண்டும் மான் இருந்த இடத்திற்குச் சென்றன.
ஆமையும் பின்னாலே சென்றது. மான் என்ன ஆனதோ? என்ற கவலை ஆமைக்கு. நகர்ந்து, நகர்ந்து மான் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது.
காக்கை மேலே பறந்து போய் வேடன் வருகிறானா என்று பார்த்தது.
வேடன் கொஞ்ச தூரத்தில் வந்து கொண்டிருந்தான்.
உடனே, “அதோ வேடன் வருகிறான். சீக்கிரம் வேலை நடக்கட்டும்” என்றது காக்கை.
எலி வலையைப் பல்லால் கடித்தது. வலை அறுந்தது. மான் தப்பித்துக் கொண்டது.
வேடன் வருவதற்குள் மான் ஒரே ஓட்டமாக ஓடி விட்டது. வேடன் ஏமாந்து போனான்.
மான் தப்பி ஓடியதும், எலி பக்கத்தில் இருந்த பொந்துக்குள் ஓடி ஒளிந்து கொண்டது. காக்கை பறந்து போய் மரத்தில் உட்கார்ந்து கொண்டது. ஆமையால் ஓட முடியுமா? அது மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது.
வேடன் ஆமையைப் பார்த்துவிட்டான். உடனே அதைப் பிடித்தான்.
‘மான் கிடைக்கவில்லை. இந்த ஆமையாவது கிடைத்ததே. இதைச் சமைத்துச் சாப்பிடலாம்’ என்று நினைத்தான்.
ஆமையை வில்லுடன் சேர்த்து நன்றாகக் கட்டினான். தூக்கிக் கொண்டு நடந்தான்.
“ஐயோ, ஆமை வேடனிடம் அகப்பட்டுக் கொண்டதே” என்று காக்கையும் எலியும், மானும் கவலைப்பட்டன.
அப்போது, ஆமையைக் காப்பாற்ற காக்கை ஒரு யோசனை சொன்னது.
அது மிகவும் அருமையான யோசனை.
வேடன் போகும் வழியில் ஓர் ஏரி இருந்தது. அந்த ஏரிக்கரைக்கு காக்கை, மான், எலி மூன்றும் சென்றன. வேடன் போவதற்கு முன்பே போய்விட்டன.
ஏரிக்கரையில் மான் செத்தது போல் படுத்துக் கொண்டது. மான் தலை மேல் காக்கை உட்கார்ந்து கொண்டு, முகத்தைக் கொத்துவது போல் பாசாங்கு செய்தது. எலி சிறிது தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
வேடன் மானைப் பார்த்தான். ‘அடே, இங்கே ஒரு மான் செத்துக் கிடக்கிறதே!’ என்று நினைத்தான்.
உடனே கையில் இருந்த ஆமையை ஏரிக்கரையில் வைத்துவிட்டு, மானை நோக்கிப் போனான். வேடன் நெருங்கி வருவதைக் காக்கை பார்த்தது.
பார்த்ததும், ‘காகா, காகா’ என்று கத்திக்கொண்டே மேலே பறந்தது. உடனே, மான் சட்டென்று எழுந்தது; ஒரே ஒட்டமாக ஓடிவிட்டது.
இதற்குள் ஏரிக் கரையில் இருந்த ஆமையிடம் எலி ஓடி வந்தது. ஆமையைக் கட்டியிருந்த கயிற்றை அவசர அவசரமாகப் பல்லால் கடித்து, அறுத்தது.
ஆமை தப்பித்துக்கொண்டது. பக்கத்திலிருந்த ஏரித் தண்ணீருக்குள் இறங்கி ஒளிந்து கொண்டது.
எலியும் புதருக்குள் ஓடி ஒளிந்துகொண்டது.
ஏமாந்துபோன வேடன் ஆமையை வைத்த இடத்திற்கு வந்தான்.
அங்கே ஆமையைக் காணோம். அறுந்த கயிறும், வில்லும்தான் கிடந்தன.
‘ஐயோ, மானுக்கு ஆசைப்பட்டேன். கையில் இருந்த ஆமையும் போய்விட்டதே’ என்று வருந்தினான்.
மறுபடியும் நான்கு நண்பர்களும் ஒன்றாய்க் கூடினார்கள்.
“புத்தி இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம்” என்றது காக்கை.
“ஒற்றுமையே பலம்” என்றது எலி.
“ஆமாம், ஆமாம்” என்று தலையை ஆட்டின ஆமையும், மானும்...