முன் காலத்தில் தேவசன்மா என்கிற ஒரு சாமியார் இருந்தான். அவன் பிச்சையெடுத்துப் பிழைத்து வந்தான். பிச்சையெடுத்துச் சேர்த்த காசையெல்லாம் அவன் ஒரு கந்தையில் முடிந்து வைத்திருந்தான். அவன் பணம் சேர்த்து வைத்திருப்பது யாருக்கும் தெரியாது. ஆனால், இதை எப்படியோ ஆஷாடபூதி என்ற ஒருவன் தெரிந்து கொண்டு விட்டான்.
ஆஷாடபூதி ஒரு திருடன். திருடிப் பிழைப்பதே அவன் தொழில். சாமியாருடைய கந்தையைத் திருடி எடுத்துக் கொண்டு விட்டால், பிறகு நாள்தோறும் திருட வேண்டியதில்லை. அந்தப் பணத்தைக் கொண்டு பல நாள் இன்ப வாழ்வு நடத்த முடியும் என்று ஆஷாடபூதி நினைத்தான்.
அதற்கு அவன் ஒரு சூழ்ச்சி செய்தான்.
அவன் ஒருநாள் சாமியாரிடம் வந்து, அவரது காலில் விழுந்து வணங்கினான்.
தனக்குத் திருமணமாகவில்லை என்றும், தன்னைச் சீடனாக ஏற்றுக் கொண்டு, நல்ல வழி காட்ட வேண்டும் என்றும் வேண்டினான்.
தேவசன்மாவும் அவனைத் தன் சீட னாக ஏற்றுக் கொண்டான்.
ஆஷாடபூதியும் மிகவும் நல்லவன் போல் சாமியாருக்குப் பணிவிடைகள் செய்து வந்தான்.
ஒரு நாள், ஓர் அந்தணன் இவர்களுக்கு விருந்து வைத்தான். விருந்துண்டுவிட்டுப் புறப்பட்ட அவர்கள் நெடுந்துாரம் சென்ற பிறகு, ஆஷாடபூதி தன் தலையில் கிடந்த ஒரு துரும்பைக் காட்டி, 'சுவாமி, நமக்குச் சோறு போட்ட அந்தணன் வீட்டிலிருந்து இந்தத் துரும்பு என்னையும் அறியாமல் ஒட்டிக் கொண்டு வந்து விட்டது. உணவளித்தவன் வீட்டுப் பொருளை ஒரு துரும்பானாலும் எடுத்து வரலாமா? இதோ நான் ஓடிப்போய் இதைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வந்து விடுகிறேன்’ என்று ஓடினான்.
சிறிது தூரம் சென்று ஒரு மறைவான இடத்தில் நெடுநேரம் உட்கார்ந்திருந்துவிட்டு அவன் திரும்பி வந்தான்.
இந் நிகழ்ச்சிக்குப் பிறகு, தேவசன்மாவுக்கு தன் சீடன் மேல் நம்பிக்கை அதிகமாகியது.
ஒரு நாள் சாமியாரும் சீடனும் ஒரு குளக் கரையை அடைந்தார்கள். குளத்தில் இறங்கிக் கால் கை கழுவிக் கொண்டு வருவதற்காக சாமியார் போகும் போது, கரையில் இருந்த ஆஷாடபூதியிடம் என்றும் விட்டுப் பிரியாத தன் கந்தை முடிப்பைக் கொடுத்து வைத்திருக்கும்படி கூறிவிட்டுப் போனான்.
சாமியார் கை கால் கழுவிக் கொண்டு திரும்பும் போது, குளத்தின் கரையில் மற்றொரு பக்கத்தில், இரண்டு ஆட்டுக்கடாக்கள் முட்டி மோதிச் சண்டை போட்டுக் கொண்டிருந்தன. தூரத்திலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு நரி அவற்றின் தலையிலிருந்து வழிந்து தரையில் கிடக்கும் இரத்தத்தைக் குடிப்பதற்காக அங்கு வந்தது. இரண்டு கடாக்களுக்கு இடையில் புகுந்து இரத்தம் குடிக்கத் தொடங்கிய நரி அவற்றின் இடையில் சிக்கி முட்டுப்பட்டு மோதுண்டு உயிரை இழந்தது.
இந்த வேடிக்கையைப் பார்த்துக் கொண்டே சாமியார் தேவசன்மா தன்னை மறந்து நின்று கொண்டிருந்தான்.
இந்த வேளை போனால், இன்னொரு வேளை வாய்க்காது என்று எண்ணிய ஆஷாடபூதி, அப்போதே, சாமியாரின் கந்தை முடிப்பை எடுத்துக் கொண்டு ஓடி காட்டுக்குள் சென்று மறைந்து விட்டான்.
திரும்பி வந்த சாமியார் தன் சீடனைக் காணாமல் மனம் வருந்தினான். அவனைத் தேடி ஊர் ஊராக அலைந்தான்.
அலைந்ததுதான் மிச்சம். கடைசிவரை அவன் ஆஷாடபூதியைக் கண்டு பிடிக்கவில்லை.
அறிவின்மையால் தேவசன்மா தன் கைப்பொருளை இழந்தான். யோசனையில்லாமல் ஆட்டுக்கடாப் போரில் நடுவில் சென்று மாட்டிக் கொண்டு நரி உயிரிழந்தது.
இதுதான் தங்களுக்குத் தாங்களே கேடு செய்து கொண்ட கதை.