ஒரு காட்டில் ஒரு யானை இறந்து கிடந்தது. அந்தப் பக்கமாக வந்த ஒரு நரி அதைக் கண்டது.
அதன் இறைச்சியைத் தின்பதற்காக அதன் அருகில் சென்றது.
அப்போது அங்கு சிங்கம் வந்து சேர்ந்தது.
நரியைக் கண்டு, “நீ யார்?” என்று அதட்டியது சிங்கம்.
“அரசே, தாங்கள் கொன்று போட்ட இந்த யானையைக் காத்துக் கொண்டு நான் இருக்கிறேன்” என்றது நரி.
நரி அடக்க ஒடுக்கமாகவும், சமாதானமாகவும் பேசியதைக் கண்ட சிங்கம், அதன் பேரில் இரக்கப்பட்டு, “நரியே, இது நான் கொன்ற யானை அல்ல. ஆகவே, நீங்களே இதை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிச் சென்றுவிட்டது.
சிங்கம் சென்ற சிறிது நேரத்தில், அங்கு ஒரு புலி வந்து சேர்ந்தது.
அது நரியை பார்த்து, “நீ யார்? என்ன செய்துகொண்டிருக்கிறாய்?” என்று அதிகாரக் குரலில் கேட்டது.
"புலியாரே, இதை ஒரு சிங்கம் கொன்று போட்டது. அந்தச் சிங்கம் இந்தப் பக்கத்தில்தான் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறது. ஏதாவது புலி வந்தால் எனக்குச் சொல். என்று அந்த சிங்கம் சொல்லியிருக்கிறது. ஏன்? என்று கேட்டேன். அதற்கு அந்தச் சிங்கம், முன்னொரு யானையை தான் கொன்று போட்டுவிட்டு, நீராடப் போயிருந்த போது, ஒரு புலி வந்து அந்த யானையைக் கடித்துத் தின்று எச்சிலாக்கி விட்டது. ஆகவே, புலியை அதற்குத் தண்டிக்க வேண்டும்’ என்று சொல்லியது?"
இவ்வாறு நரி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, புலி, தப்பித்தேன் பிழைத்தேன் என்று அங்கிருந்து ஓடி விட்டது.
இவ்வாறு பகையுணர்ச்சியினால் புலியை மாறுபடச் செய்து ஓட்டிய பின் அங்கு ஒரு குரங்கு வந்தது.
‘வா, வா இவ்வளவு பெரிய யானை இறந்து கிடக்கிறது. தின்ன ஆளில்லையே என்றுதான் பார்த்துக் கொண்டிருந்தேன். இதன் உடலைக் கிழித்து,வேன்டிய அளவு தின்னு’ என்று கூறியது நரி, குரங்கும் சரியென்று கூர்மையான தன் கை நகத்தால் யானையின் உடலைக் கிழித்தது. அது கிழித்து முடிந்த சமயம், ஐயோ சிங்கம்! சிங்கம் , அதோ வருகிறது!’ என்று நரி கூச்சலிட்டது.
சிங்கம் என்றவுடன் பயந்து போன குரங்கு ஒட்டம் பிடித்தது.
'அப்பாடா இந்த யானையின் தடித்தோலை எப்படிக் கிழிப்பதென்று யோசித்துக் கொண்டிருந்தேன். தானம் கொடுப்பது போல் காட்டிக் குரங்கை ஏமாற்றிக் கிழித்தாயிற்று. தின்ன வேண்டியதுதான்” என்று நரி யானையைத் தின்னப் போகும் பொழுது அங்கு மற்றொரு நரி வந்து சேர்ந்தது.
உடனே அந்த நரியின் மேல் பாய்ந்து சண்டையிட்டு அடித்து விரட்டி விட்டது. இவ்வாறு தண்டம் செய்து அதை ஓட்டிய பின் அந்த யானை இறைச்சியைத் தனக்கேச் சொந்தமாக வைத்துக் கொண்டு நெடுநாள் வரை தின்று தன் பசியைத் தீர்த்துக் கொண்டது நரி.
சாமம், பேதம், தானம், தண்டம் ஆகிய நான்கு வழிகளாலும் அறிவுடையவர்கள் தங்கள் விருப்பத்தை எப்படியும் முடித்துக் கொள்வார்கள்.