காட்டில் இருந்த பறவைகள் எல்லாம் ஒரு பெரிய மாநாடு கூட்டின.
அந்த மாநாட்டுக்கு எல்லாப் பறவைகளும் வந்திருந்தன. பறவைகள் முன்னேற்றத்தைக் குறிந்துப் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டு முடிவில் ஒருநடன அரங்கேற்றம் ஏற்பாடாகியிருந்தது.
திட்டப்படி கடைசியில் மாநாட்டு மேடையின் மீது ஏறி மயில் நடனம் ஆடியது.
நீலப் புள்ளிகள் நிறைந்த அழகிய பச்சைத் தோகையை விரித்து மயில் ஆடிய நடனம், பார்க்கப் பார்க்க இன்பமளிக்கும் காட்சியாயிருந்தது.
பறவைகள் மயிலை மிகவும் பாராட்டின. அதன் அற்புதமான நடனத் திறனைக் குறித்து அவை புகழ்ந்து பேசின. பல பரிசுகளும் மாநாட்டின் சார்பில் மயிலுக்கு வழங்கப் பெற்றன.
இவற்றையெல்லாம் ஒரு வான்கோழி பார்த்துக் கொண்டிருந்தது.
மாநாட்டுத் தலைவரிடம் போய் "நானும் நடன அரங்கேற்றம் நடத்த அனுமதி கொடுங்கள்” என்று கேட்டது.
"நீயா?” என்று வியப்புடன் கேட்டது மாநாட் டுத் தலைவராக இருந்த பருந்து.
"ஏன், ஆச்சரியப்படுகிறீர்கள்? என்னையும் ஆடவிட்டுப் பாருங்கள். வாய்ப்புக் கொடுத்தால் தானே திறமை இருக்கிறதா இல்லையா என்று தெரிந்து கொள்ளலாம்?’ என்று அடித்துப் பேசியது வான்கோழி.
மாநாட்டுத் தலைவர் பருந்து, அனுமதி கொடுத்து விட்டது.
வான்கோழி மேடையின்மீது ஏறியது.
வால் போல் நீண்டிருந்த தன் சிறகுகளை விரித்துக் கொண்டு, அது நடனம் ஆடியது வேடிக்கையாக இருந்தது.
எல்லாப் பறவைகளும் கேலி செய்து சிரித்தன.
அவமானம் தாங்க முடியாமல் வான் கோழி மேடையை விட்டு இறங்கி ஓடிவிட்டது.
இப்படித்தான் சிலர் தனக்குத் தெரியாத ஒன்றைச் செய்து அவமானப்படுகின்றனர்.