கேரளத்தில் ஒரு சிறு பாலகன் இருந்தான்.
அவன் தினமும் குருவாயூரப்பனைத் தரிசனம் செய்யக் கோவிலுக்குப் போவான்.
அவனுக்கு ஸ்ரீ குருவாயூரப்பனை நேரிலே பார்க்க மிகவும் ஆசை.
ஒரு நாள், கண்ணனை எப்படியும் பார்த்தேத் தீருவது என்று முடிவு செய்து, கண்ணனிடம் பிரார்த்தித்தான். கண்ணனோ வரவில்லை. கண்ணா வா என்றான் .
நான் உன்னை நேரிலே பார்க்க வேண்டும் என்றான். நீ வராவிட்டால் நான் இங்கேயே இருப்பேன் என்று கூறி கோவிலிலேயே உட்கார்ந்து விட்டான்.
நடையும் அடைத்தாயிற்று.
கண்ணன் வரவில்லை. அழுதான். அரற்றினான். குழந்தையல்லவா? அவன் அழுவது கண்ணனுக்கு பொறுக்கவில்லை.
வந்தான். எப்படி? மயில் பீலி, பட்டு, பீதாம்பரம் உடுத்திக் கொண்டு, குழலூதிக் கொண்டு வந்தான்.
குழந்தையுடன் விளையாடினான். சிறுவனுக்கு ஒரே சந்தோஷம்.
கண்ணனோ தன்னுடைய அரைஞாணை அவனுக்கு அளித்தான்.
சிறுவன் மகிழ்ச்சியாக வீட்டுக்குச்சென்று அம்மாவிடம் நான் கண்ணனுடன் விளையாடினேன் என்றான்.
அம்மாவோ நம்பவில்லை. இங்கே பார் "கண்ணன் தன்னுடைய கிண்கிணியை எனக்கு கொடுத்தான் பார்" என்றான்.
கோவிலிலும் அரைஞாணைக் காணாததால் அனைவரும் சிறுவன் அதைத் திருடியதாக நினைத்தார்கள்.
அம்மா திட்டினாள்.
அதைப்பிடுங்கி வீசினாள்.
அது பக்கத்தில் இருந்த கொன்றை மரத்தின்மேல் சிக்கிக்கொண்டது. உடனே, அந்த மரம் முழுவதும் தங்க நிறத்தில் கிண்கிணியைப்போன்ற பூக்கள் பூத்துக் குலுங்கின.
அப்பொழுது, "உன் மகனுடன் நான் விளையாடியது உண்மை" என்று அசரீரி வாக்கு கேட்டது.
அது முதல் "கொன்னப்பூ" பூஜைக்கு மிகவும் உகந்ததாகப் போற்றப்பட்டது.
இப்பொழுது படத்தில் உள்ள குருவாயூரப்பனின் அரைஞாணும், கொன்னப்பூவின் மொக்குகளும் ஒரே மாதிரி இருப்பது போல் தெரிகிறதா?