முற்றும் துறந்த குரு ஒருவர் இருந்தார்.
ஒரு ஊரில் அவரைப் பேசுவதற்காகக் கூப்பிட்டிருந்தார்கள்.
அந்தக் கூட்டத்திற்கு ஆயிரம் பேருக்கு மேல் வருவார்கள் என்றும் சொல்லியிருந்தார்கள்.
குறிப்பிட்ட தேதியில் குருவும் அவ்வூருக்கு வந்தார்.
அன்று நல்ல மழை. கூட்டத்திற்கு வந்தவர்களும் கலைந்து சென்று விட்டார்கள்.
குரு அங்கு வந்த போது யாருமில்லை.
பேசுவதற்கு நிறைய தயார் பண்ணி வந்திருந்ததால் அவருக்கு ஏமாற்றம்.
அங்கு இருந்ததோ அவரை அழைத்து வந்த குதிரை வண்டிக்காரன் மட்டும் தான். என்ன செய்யலாம் என்று அவனையே கேட்டார்.
அவன் சொன்னான், "ஐயா, நான் குதிரைக்காரன். எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் தெரியும். நான் முப்பது குதிரைகளை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போகும் போது, எல்லாக் குதிரைகளும் வெளியே சென்றிருந்து, ஒரே ஒரு குதிரை மட்டும் இருந்தாலும், நான் அந்தக் குதிரைக்குப் புல்லை வைத்து விட்டுத்தான் வருவேன்" என்றான்.
அந்தக் குருவுக்கு படாரென்று அறைந்தது போல் இருந்தது.
அந்தக் குதிரைக்காரனைப் பாராட்டி விட்டு, அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பித்தார்.
தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் என்று சரமாரியாகப் பேசிப் பிரமாதப் படுத்தி விட்டார்.
பிரசங்கம் முடிந்ததும், எப்படி இருந்தது என்று அவனைப் பார்த்துப் பெருமையாகக் கேட்டார்.
அவன், "ஐயா, நான் ஒரு குதிரைக்காரன். எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும். நான் புல்லு வைக்கப் போன இடத்தில் ஒரே ஒரு குதிரை தான் இருந்தது என்றால், அதற்கு மட்டும் தான் புல் வைப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டி விட்டு வர மாட்டேன்" என்றான் அவன்.
அவ்வளவு தான்...! அந்தக் குரு அதிர்ந்து விட்டார்...!