ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் விழாக்கோலம் பூண்டிருந்தது. கருட வாகனத்தில் ரங்கநாதரின் பேரருளை தரிசித்துப்பெற திரளான பக்தர்கள் அங்கே திரண்டிருந்தனர்.
தேவதாசிகள் கீதம் இசைக்க... பல்லக்கு தூக்கிகள் கருட வாகனத்தில் ரங்கநாதரை சுமந்து வருகின்றனர். திரண்டிருந்த பக்தர்கள் அனைவரது கண்களும் ரங்கநாதரை முற்றுகையிட்டு தரிசிக்கின்றன. மகான் ராமானுஜரும் அந்த தெய்வீக தரிசனத்தில் தன்னை இணைத்துக் கொண்டு திரும்புகிறார்.
வழியில் ஒரு வித்தியாசமான காட்சி அவரது பார்வையைத் திசை திருப்புகிறது. அங்கே, ஒரு அழகான இளைஞனும், இளம் பெண்ணும் செல்கின்றனர். இளைஞன் வலது கையில் ஒரு குடையை அந்த இளம் பெண்ணுக்கு நிழல்தர பிடித்திருக்கிறான். இடது கையில் உள்ள விசிறி அவளுக்கு காற்று வரும் பொருட்டு வீசிக்கொண்டே வருகிறது.
அந்த வழியாகச் செல்வோர் எல்லோருமே இந்தக் காட்சியை ஒருகணம் நின்று பார்த்துவிட்டு செல்கிறார்கள். பலர், அந்த இளம் பெண்ணின் பேரழகை அவசரத்தில் பார்வையால் பருகிவிட்டு அகலுகின்றனர். சிலரோ, ‘இது என்ன அபத்தம்?’ என்று முகம் சுளித்து விலகுகின்றனர்.
இந்த விமர்சனப் பார்வைகளையும் கவனித்து விட்டார் ராமானுஜர். அருகில் நின்ற தன்னுடைய சீடன் ஒருவனை அழைத்தவர், அந்த இளைஞனை தன்னிடம் அழைத்து வருமாறு கூறினார்.
அடுத்த நிமிடமே பேரழகியை நிழலாகப் பின்தொடர்ந்த இளைஞன் ராமானுஜர் முன்பு வந்து நிற்கிறான்.
“ஆமாம்... இங்கே திரண்டு வந்திருக்கும் கூட்டத்தை பொருட்படுத்தாமல் அவளைப் பின் தொடர்ந்து இந்தக் கோலத்தில் செல்கிறாயே; அப்படி என்ன அவளிடம் உனக்குப் பிடித்துப் போயிற்று?” என்று கேட்டார் ராமானுஜர்.
“இவளது கண்களின் அழகு என்னைக் கவர்ந்து விட்டது. இவளது அழகான கண்களைப் போன்ற கண்களை நான் வேறு எவரிடத்திலும் கண்டதில்லை!” என்று வியப்புடன் கூறினான், அந்த இளைஞன்.
“சரி... உங்கள் பெயர் என்ன?”
“என் பெயர் உறங்காவில்லி. நான் ஒரு மல்யுத்த வீரன். அவள் பெயர் பொன்னாச்சி, இவள் ஒரு தேவதாசி...”
“உன் காதலியின் கண்களைவிட அழகான கண்களை நான் காண்பிக்கிறேன். அதைக் கண்டு நீ வியந்தால், அவளை விட்டு விலகத் தயாரா?”
“உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும், என் காதலியின் கண்கள்தான் மிக மிக அழகானவை...” என்று உறுதியாகச் சொன்னான், உறங்காவில்லி.
அன்று மாலை ராமானுஜர் கேட்டுக் கொண்டபடி அவரைப் பார்க்க வந்தான் உறங்காவில்லி. அவனை, அழைத்துக் கொண்டு ரங்கநாதரை தரிசிக்கச் சென்றார் ராமானுஜர்.
கர்ப்பக்கிரகத்தில் ரங்கநாதர் ஜொலிக்கும் அழகில் வீற்றிருக்கிறார். அவரது கண்களைப் பார்க்கிறான் உறங்காவில்லி. அடுத்தகணமே தன்னை மறந்து போனான். பக்திப் பரவசத்தில் மூழ்கினான். காதலியின் கண்கள்தான் மிக அழகானவை என்ற எண்ணமும் அந்த இடத்திலேயே அவனுக்குள் இருந்து அகன்று விடுகிறது.
அப்போது அவனைத் திரும்பிப் பார்க்கிறார் ராமானுஜர். பக்கத்தில் அவன் இல்லை.
கீழே தனது காலை யாரோ வருடுவது போன்ற உணர்வு ஏற்பட, கீழே குனிகிறார். அங்கே, உறங்காவில்லி கண்கள் பனிக்க சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறான்.
‘ரங்கநாதரின் கண்களின் அழகுக்கு இணையான அழகான கண்கள் யாருக்கும் இல்லை’ என்ற முடிவுக்கு வந்த உறங்காவில்லி, ராமானுஜரை குருவாக ஏற்றுக் கொண்டான்.
அவனது காதலியான பொன்னாச்சியும் சுகபோக வாழ்வை துறந்து அவரை சரணடைந்தாள்.