கம்பீரமும் வீரமும் மிகுந்த யானைகளின் அரசனான கஜேந்திரன் தன் பிடிகளுடனும் குட்டிகளுடனும் காட்டில் மரங்களை உடைத்தும் மூங்கிலை உண்டும் உலாவிக் கொண்டிருந்தது.
அதன் சப்தத்தை கேட்டதுமே சிங்கம் புலி முதலிய பலம் மிகுந்த மிருகங்கள் பயந்து ஓட மற்ற சிறிய மிருகங்களான மான், முயல் முதலியவை பயமில்லாமல் அதனுடன் ஒட்டி வந்து கொண்டிருந்தன. அப்போது எங்கிருந்தோ தாமரை மலரின் நறுமணம் அவனது துதிக்கையை எட்டியது.
உடனே தனது பரிவாரங்கள் சூழ அந்தப் பொய்கையை நோக்கி ஓடத் தொடங்கினான். வழியில் உள்ளவற்றையெல்லாம் துவம்சம் செய்து கொண்டு பொய்கையை அடைந்த கஜராஜன் தன் துதிக்கையால் தாமரைப் பூ, அல்லி ஆகியவற்றின் மகரந்தங்கள் நிறைந்த அந்த இனிய பொய்கை நீரை உறிஞ்சி உளம் குளிரப் பருகி, அந்த நீரை தன் பரிவாரங்களுக்கும் வழங்கினான். ஒரு குடும்பத்தலைவனைப் போல பின் ஒரு தாமரை மலரை தான் வணங்கும் பெருமாளுக்கு சமர்பிக்க பறிக்க பொய்கைக்குள் காலை வைத்த போது அந்தப் பொய்கையிலிருந்த முதலை கஜேந்திரனின் காலைக் கவ்விக் கொண்டு கஜேந்திரனை தண்ணீருக்குள் இழுக்க முயன்றது.
பின்னிருந்து மற்ற பெண் யானைகளும், குட்டிகளும் சேர்ந்து இழுத்தன் ஆனால் முதலைக்கு தண்ணீரில் பலம் அதிகமல்லவா? இந்த இழுபறி நீடித்தது. ஆயிரம் வருடங்கள் இந்த இழுபறி நீடித்தது. தேவர்கள் எல்லாரும் கூடி நின்று இந்த போராட்டத்தை கண்ணுற்றனர். மெல்ல மெல்ல கஜேந்திரன் தன் சக்தி குறைந்து வருவதை உணர்ந்தான், மற்ற பிடிகள் எல்லாம் இனி பயனில்லை என்று கஜேந்திரனை விட்டு அதன் உறவுகள் ஓடிவிட்டன.
கஜேந்திரன் தன் துர்கதியான நிலையை உணர்ந்தான், மரணத்தின் வாயிலில் நின்ற அந்த வேளையில் அந்த பரம் பொருளைத் தவிரத் தனக்கு எந்த பற்றுக் கோடும் இல்லை என்று உணர்ந்தான்.
முன் ஜென்மத்தில் தான் அந்த ஆதி மூலத்தை துதித்த துதிகள் அவனுக்கு ஞாபகம் வந்தன. அவன் அவற்றை பாராயணம் செய்தான். அந்த ஸ்தோத்திரத்தின் சாரம் பரம புருஷனே உனக்கு நமஸ்காரம், உன்னிடமிருந்துதான் சகலமும் தோன்றியது, அனைத்துக்கும் ஆதாரம் நீயே, அனைத்தும் உன்னுள்ளே அடக்கம், உன்னுடைய மாயையினாலே அண்ட சராசரங்களும் இயங்குகின்றன, சில ஒளிர்கின்றன, சில அழிகின்றன. பிரளய முடிவில் அனைத்து உயிர்களும் அழிய ஆலிலை மேல் துயில் கொள்ளும் மாயனும் நீயே. உன்னை விட்டால் எனக்கு வேறு பற்றுக் கோடு யாருமில்லை, உன் சரணமே சரணம். ஆதி மூலமே! என்று தாமரைப் பூவை தனது தும்பிக்கையில் வைத்துக் கொண்டு அலறியது கஜேந்திரன்.
கஜேந்திரனனின் அந்த அபயக்குரல் கேட்டவுடனே பெருமாள் வேத சொருபனான ஓடும் புள்ளேறி (கருடனில்), கையில் சுதர்சன சக்கரத்துடன் விரைந்து வந்து சக்கராயுத்தால் முதலையை வதைத்து கஜேந்திரனைக் காப்பாற்றி அவனுக்கு மோக்ஷமும் அளித்தான் அந்த பக்த வத்சலன்.
இந்தக் கதைக்கான காரணம் வேண்டுமா? என்ன?
முற்பிறவியில் யானை பாண்டிய மன்னன் இந்திரதும்யனாக பிறந்து மஹா விஷ்ணு மீது மிகவும் அதீத பக்தி கொண்டு வாழ்ந்து கொண்துருந்தான். ஒரு சமயம் அவன் பூஜை செய்து கொண்டிருந்த போது துர்வாச முனிவர் அவனைக் காண வந்தார். பூஜையில் ஈடுபட்ட மன்னன் முனிவரை வெகு நேரம் காக்க வைத்து விட்டான். அதனால் கோபமடைந்த துர்வாசர், என்னை மதிக்க்காமல் மதம் கொண்டு நடந்த நீ, மதம் கொண்ட யானையாக மாறக்கடவது என்று சாபம் கொடுத்தார். மன்னன் முனிவர் தாள் படிந்து வேண்டி, அடுத்த பிறவியிலும் தான் பெருமாள் கொண்ட பக்தி தொடர வேண்டும் என்று வேண்ட, முனிவரும் அவ்வாறே வரம் கொடுத்து அந்த மஹா விஷ்ணுவாலேயே உனக்கு மோக்ஷம் கிட்டும் என்று சாப விமோசனமும் அளித்தார்.
இந்த முதலை, முற்பிறவியில் அவன் கூஹூ என்னும் கந்தர்வனாக இருந்தான். பொய்கைக்கு கால் கழுவ வருபவர்களின் காலைப் பற்றி இழுத்து விளையாடும் வழக்கத்தை கொண்டிருந்தான். ஒரு சமயம் தேலவர் முனிவரின் காலை இவ்வாறு இழுத்த போது முனிவர் அவனுக்கு தண்ணீரில் கிடந்து தவிக்கும் முதலையாக ஆகும் சாபம் அளித்தார். அவன் தன் தவறை உணர்ந்து சாப விமோசனம் வேண்ட மஹா விஷ்ணுவின் சுதர்சன சக்கரம் பட்டு உனக்கு சாப விமோசனம் ஏற்படும் என்று சாப விமோசனம் அளித்தார்.