ஓர் ஊரில் ஒரு நாய் இருந்தது. அந்த ஊரில் பஞ்சம் வந்ததால் உணவு கிடைக்கவில்லை. ஆகையால் அந்த நாய் வேறோர் ஊருக்குச் சென்றது.
அந்த ஊரில் இருந்த ஒரு பெண் அதற்கு நாள்தோறும் சோறிட்டுக் காப்பாற்றி வந்தாள்.
ஒரு நாள் அந்த நாய் தெருப்பக்கமாக வந்தது.
தெருவில் இருந்த மற்ற நாய்கள் எல்லாம் உறுமியும் குரைத்தும் அதை விரட்டிக் கொண்டு வந்து மேலே விழுந்து கடித்துக் குதறி விட்டன.
மேலும் சிறிது நேரம் இருந்தால் அது செத்துப் போய் விடும் போலிருந்தது. 'போதும் போதும் இந்த ஊர் வாசம்' என்று எண்ணிக் கொண்டே ஒரே ஓட்டமாகத் தன் ஊருக்குத் திரும்பியது.
ஊருக்குள் நுழைந்ததும் அந்த ஊர் நாய்களெல்லாம் அதைச் சூழ்ந்து கொண்டு, "நீ, போயிருந்த நாடு நல்ல நாடுதானா?" என்று கேட்டன.
"எல்லா நாடுகளிலும் அது சிறந்த நாடுதான். ஆனால், நம் இனத்திலேதான் ஒற்றுமை இல்லை. அதனால் நான் இப்படித் துன்பமடைய நேரிட்டது. ஒருவன் தன் இடத்திலேயே இருப்பதுதான் சிறந்தது" என்று அந்த நாய் மற்ற நாய்களிடம் கூறியது.