ஞானி ஒருவரிடம் பல சீடர்கள் இருந்தனர். அதில் ஒரு சீடர் அவரை ஏதாவது கேட்டு அடிக்கடித் தொந்தரவு செய்து கொண்டிருந்தான்.
ஞானி ஒருநாள் தொந்தரவு செய்து கொண்டிருந்த அந்த சீடனிடம் ஒரு கல்லைக் கொடுத்து காய்கறி சந்தைக்குப் போய் விற்பது போல நடித்து மக்களின் நிலையைத் தெரிந்து வரச் சொன்னார்.
சீடனும் சந்தைக்கு சென்று கல்லின் அருமை பெருமைகள் பலவற்றைக் கூறினான். ஆனால் ஒரு சிலரே அதுவும் மிகக் குறைந்த விலைக்கு கேட்டார்கள்.
சீடன் குருவிடம் வந்து, விபரம் கூறி அங்கு கல்லை பத்து பைசாவிற்கு மேல் விற்க முடியாது என்று கூறினான்.
குரு அடுத்து அதே கல்லை தங்க நகைகள் விற்கும் கடை வீதிக்கு எடுத்து சென்று அதே போலக் கவனிக்க சொன்னார்.
சீடன் கடை வீதிக்கு சென்று, திரும்பி வந்து ''இங்கு பரவாயில்லை. இந்தக் கல்லை ஆயிரம் ரூபாய் வரை கேட்கிறார்கள்'' என்றான்.
பின்னர் குரு அவனை அந்தக் கல்லை எடுத்துக் கொண்டு வைர வியாபாரம் நடக்கும் இடத்திற்கு எடுத்து சென்று அதே முயற்சியை செய்ய சொன்னார். அங்கு போய் வந்த சீடன், ''இங்கு இந்தக் கல்லை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்கலாம்''என்றான்.
குரு சொன்னார், “நீ விற்கவில்லை என்றதும் எப்படி விலை கூடியது? இந்தக் கல்லைப் போல்தான் நீயும் இருக்கிறாய். காய்கறி சந்தையில் இருக்கும்போது நீயும் அதன் மதிப்பு பத்து பைசாதான் என்று நினைத்தாய். இப்போது ஆன்மீகத்தில் நீ காய்கறி சந்தையில் தான் இருக்கிறாய். அதாவது உன் மனநிலையின் மதிப்பு பத்து பைசா தான். அதை வைரம் விற்கும் கடையைப்போல உயர்த்து. பிறகு என்னிடம் கேள். உனக்கு பல விபரங்களைத் தெரிவிக்கிறேன்” என்றார்.
அன்றிலிருந்து அந்தச் சீடன் அந்த ஞானியைக் கேள்வி கேட்காமலே தன்னை உயர்த்திக் கொள்ளத் தொடங்கினான்.