அது மும்முரமான காலைப் பொழுது...
ஒரு கட்டுமான பொறியாளர், பதின்மூன்றாவது மாடியிலே வேலை செய்து கொண்டு இருந்தார்.
ஒரு முக்கியமான வேலை.
கீழே ஐந்தாவது மாடியில் வேலை செய்து கொண்டு இருந்த கொத்தனாருக்கு முக்கியமான செய்தி சொல்ல வேண்டும்.
கைபேசியில் கொத்தனாரைக் கூப்பிட்டார் பொறியாளர்.
‘ம்ஹும்...’ கொத்தனார் வேலை மும்முரத்தில், சித்தாளுடன் பேசிக் கொண்டிருந்தார்.
கைபேசியை எடுக்கவில்லை.
பொறியாளரும் உரக்கக் கத்திப் பார்த்தார். அப்பொழுதும், கொத்தனார் மேலே பார்க்கவில்லை.
இவ்வளவுக்கும்… கொத்தனார் வேலை செய்யும் இடத்தில் இருந்து , அவரால் பொறியாளரை நன்றாகப் பார்க்க முடியும்.
பொறியாளர் என்ன செய்வதென்று யோசித்தார்.
ஒரு பத்து ரூபாய் தாளை எடுத்து, மேலே இருந்து, கொத்தனார் அருகில் போட்டார்.
ரூபாயைப் பார்த்த கொத்தனார், அதை எடுத்து பையில் போட்டுக் கொண்டார். ஆனால் சற்றும் மேல் நோக்கிப் பார்க்கவில்லை.
பொறியாளருக்கோ ஒரே கோபம்.
இருந்தாலும் பொறுத்துக் கொண்டு… ஒரு ஐநூறு ரூபாயைக் கொத்தனார் மேல் போட்டார். அதையும் எடுத்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டு, கொத்தனார் மும்முரமாக இருந்தார்.
பொறியாளர், பொறுமை இழந்து ஒரு சின்ன கல்லை எடுத்து, கொத்தனார் மீது போட்டார்.
அது அவரது தோள் மீது பட்டு நல்ல வலியோடு, மேலே பார்த்தார்.
அப்பொழுதுதான் பொறியாளர் தன்னை அழைத்தார் என்பதை உணர்ந்தார்.
வேடிக்கை என்னவெனில் மனிதனும் அப்படித்தான். மேலே இருந்து இறைவன் அவனை அழைப்பது அவனுக்கு புரிவதில்லை, உலக மாயைகளில், சிக்கி இறைவனை மறந்தே விடுகின்றான். இறைவன் அவனுக்கு அருட்கொடைகளை அளிக்கின்றான். அப்பொழுதும் அவன் இறைவனை ஏறிட்டுப் பார்ப்பதில்லை. ஆனால் ஒரு துன்பம் நேரும் பொழுதுதான் இறைவனை ஏறிட்டுப் பார்க்கின்றான்.
வாழ்க்கையில் உங்களுக்குத் துன்பங்கள் வரும் நேரம்… இறைவன் உன்னைத் தேடி அழைக்கும் நேரம் என்று பொருள்.