ஒரு காட்டில் ஆடுகள் கூட்டம் கூட்டமாக போய் மேய்வது வழக்கம்.
அவ்வப்போது வழி தவறிப்போகும் ஆடுகளை ஓநாய் ஒன்று கொன்று உணவாக்கிக் கொள்வதும் வழக்கமாக இருந்தது.
ஒரு நாள் அப்படி ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த போது, நரி ஒன்று அவற்றின் மீது பாய்ந்து ஆட்டுக்குட்டி ஒன்றை வாயில் கவ்விக் கொண்டு ஓட்டம் பிடித்தது.
அதைப் பார்த்த ஆடுகள், மீண்டும் திருட்டு ஓநாய் வந்து ஆட்டைக் கவ்விக் கொண்டு ஓடுகிறதே! எனக் கூச்சல் போட்டன.
ஆட்டுக்குட்டியை கவ்விக் கொண்டு ஓடிய நரி ஓநாயைப் பார்த்து, “ஓநாயே, உன் மீது இன்று எந்தத் தவறும் இல்லாத போதும், அந்த ஆடுகள் உன் மேல் பழியைச் சுமத்துகின்றனவே” என்றது.
அதற்கு அந்த ஒநாய், “ஆடுகள் சொல்வதிலும் உண்மை உள்ளது. நான் பல முறை அவற்றின் மீது பாய்ந்து, பல ஆடுகளைக் கவர்ந்து வந்திருக்கிறேன். எனவே, எப்போது அவைகளுக்குக் கொடுமை நடந்தாலும் அதற்கு என் நினைவுதான் வருகிறது” என்றது.
நாமும் யாருக்கும் எந்தக் காலத்திலும் சிறு கெடுதலும் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால், நாம் கெடுதல் செய்தவர்க்கு எந்தத் துன்பம் நேர்ந்தாலும் பழி நம்மையே வந்து சேரும் என்பதையே இந்தக்கதை உணர்த்துகிறது.