மூன்று தவளைகள் ஒன்றோடு ஒன்று நண்பர்களாக இருந்தன.
அதில் ஒரு தவளை மிகவும் சோம்பேறியாகவும், தன்னால் எந்த வேலையும் செய்ய முடியாது என்றும் தாழ்வு மனப்பாமையுடன் இருந்தது.
இரண்டாவது தவளை, எந்த விஷயத்திலும் எந்த முயற்சியும் செய்யாமல் எல்லாமே நம் விதிப்படிதான் நடக்கும் என வேதாந்தம் பேசி வந்தது.
மூன்றாவது தவளை, எந்தக் காரியத்திலும் முயற்சியை விடாது, விடா முயற்சி செய்து வெற்றி பெற்று வந்தது.
ஒரு நாள் அவை மூன்றும் இருட்டில் போன போது, கிணறு வெட்ட வெட்டியிருந்த ஒரு பெரிய பள்ளத்தில் போய் விழுந்தன.
முதல் தவளை, “ஐயோ பள்ளத்தில் வீழ்ந்துவிட்டோமே... இனி இங்கிருந்து வெளியேறிச் செல்ல முடியாதே” என அழுதபடி இருந்தது.
இரண்டாவது தவளை, “நாம் பள்ளதில் விழ வேண்டும் என்பது விதி. நாம் வெளியே வரவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால் இதிலிருந்து வெளியே வருவோம்” என்றபடி சும்மா இருந்தது.
மூன்றாவது தவளையோ, “கண்டிப்பாக என் முயற்சியால், நான் இந்தப் பள்ளத்திலிருந்து வெளியேறி விடுவேன் என்று கூறி தாவி... தாவி... குதிக்க ஆரம்பித்தது.
ஒரு கட்டத்தில், மண்ணின் பக்கவாட்டிலிருந்த ஒரு மரக்கிளையில் அது தாவி உட்கார்ந்தது.
அடுத்த தாவில், அந்த மரக்கிளையிலிருந்து வெளியே போய் விழுந்தது.
அதன் பின், தன் நண்பர்கள் நிலை குறித்து மனம் வருந்தித் தன் வழியேச் சென்றது.
எந்த ஒரு செயலிலும் முயற்சிக்கே முதல் வெற்றி கிடைக்கும்.