எலி ஒன்று வைர வியாபாரி வீட்டிலிருந்து ஒரு வைரத்தை விழுங்கிவிட்டது.
மிகவும் விலை உயர்ந்த வைரம் அது. வியாபாரி எலி பிடிப்பவனைப் பார்த்து, எப்படியாவது அந்த எலியைப் பிடித்து, அதன் வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுக்க உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
எலி பிடிப்பவனும் தன் ஆயுதங்களுடன் அங்கே வந்தான்.
எலி அங்கே இங்கே என்று போக்கு காட்டி ஓடியதில், திடீரென்று ஆயிரக்கணக்கான சக எலிகள் அங்கு ஒன்று கூடிவிட்டன.
ஆயிரக்கணக்கான எலிகளுக்கிடையேயும் அந்த வைரம் விழுங்கிய எலி மட்டும், எலிக் கூட்டத்தோடு சேராமல் ஒதுங்கி, தனித்தே நின்றிருந்தது.
எலி பிடிப்பவனுக்கு அது வசதியாகப் போய்விட்டது.
சரியாகக் குறி வைத்து அந்த எலியைத் தாக்கினான்.
வைர வியாபாரி, அந்த எலியின் வயிற்றைக் கிழித்து வைரத்தை எடுத்துக் கொண்டான்.
வைர வியாபாரி எலி பிடிப்பவனிடம், “ஆயிரம் எலிகளுக்கு மத்தியிலிருந்த அந்த எலியை மாத்திரம் சரியாக அடையாளம் கண்டது எப்படி?என்று கேட்டான்.
அதற்கு எலி பிடிப்பவன், ”இப்படித்தான்... மனிதர்களிலும் பலர் திடீரென்று பணக்காரர் ஆனதும் மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர் என்ற எண்ணத்துடன், தங்களை நினைத்துக் கொண்டு, மற்றவர்களுடன் சேராமல் ஒதுங்கிக் கொள்வார்கள். அதுவே, அவர்களுக்கு ஆபத்தில் கொண்டு போய்விட்டு விடுகிறது” என்றான்.
இடையில் வந்து அழிந்து போகும் செல்வத்தை நம்பி, வாழ்க்கையில் தானாக ஏற்பட்ட உறவுகளை மறந்து போய்விடுகிறார்கள். பின்னர் தனித்து நின்று, அழிந்து போய் விடுகிறார்கள்.