ஒரு மன்னருக்குத் திடீர் என்று ஒரு சந்தேகம் வந்ததது.
நாம் ஒரு செயல் செய்தால், அது நல்லபடியாக அமையணும். அது எப்படி? என்று யோசிச்சார்.
தொடங்குகிற நேரம், செயலைச் செய்கிற விதம், அதன் முக்கியத்துவம். இந்த மூன்றும் சரியாக இருந்தால், அந்தச் செயல் வெற்றி அடையும் என்று முடிவு செய்தார்.
ஒரு செயல் வெற்றி அடைய வேண்டுமெனில், அதைத் தொடங்கச் சரியான நேரம் எது? செயல் சரியாக நடக்க எவரிடம் ஆலோசனை கேட்பது? எவரிடம் கேட்கக்கூடாது? நாம் செய்ய வேண்டிய முக்கியமான செயல் எது? என்று, தன் சந்தேகத்தை மூன்றுக் கேள்விகளாகப் பிரித்துக் கொண்டார்.
இம்மூன்று கேள்விகளுக்கும் நல்ல பதில் சொல்பவருக்குப் பரிசு என்று அறிவித்தார்.
நிறைய பேர் வந்தனர்.
முதல் கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பதில் சொன்னார்கள்.
ஒருவன், “பஞ்சாங்கம் பார்த்து, நல்ல நாள், நல்ல கிழமை, நல்ல நேரம் பார்த்துச் செயலைத் தொடங்க வேண்டும்” என்றான்.
மற்றொருவன், “மன்னரே, ஒவ்வொரு செயலையும் தொடங்க நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அனைத்துச் செயல்களும் முக்கியம்தான். எது முக்கியமோ, அதற்குக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் அவ்வளவுதான் ”என்றான்.
இன்னொருவன், ”மன்னரே அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்ய முடியாது. அறிவாளிகள் அடங்கிய குழு ஒன்று அமைத்து, அக்குழுவின் பரிந்துரைப்படி செய்யலாம்” என்றான்.
அதற்கடுத்து ஒருவன், “முன்கூட்டியே அனைத்தையும் தெரிந்து கொள்ள மந்திரவாதியால்தான் முடியும். அதனால், மந்திரவாதிகளைக் கொண்டு செயல்களைத் தொடங்கலாம்” என்றான்.
இரண்டாவது கேள்விக்கும் விதவிதமான பதில்கள் வந்தன.
சரியான ஆலோசனைச் சொல்லத் தகுந்தவர்கள் துறவிகள், சமயக் குருக்கள், மருத்துவர்கள் என்று பலரும் பல விதமான யோசனைகளைச் சொன்னார்கள்.
மூன்றாவது கேள்வியான முக்கியச் செயல் எது? என்பதற்கும் பல பதில்கள் வந்தன.
நாட்டின் பாதுகாப்பு, கல்வி, சமயம் என்று பல செயல்களைப் பற்றிச் சொன்னார்கள்.
அவர்கள் சொன்ன பதில்கள் எதுவும் மன்னருக்குச் சரியாகப்படவில்லை.
தன் அரசு எல்லைக்குள் ஒரு மூலையில் உள்ள ஒரு காட்டில் இருக்கும் நல்ல துறவியிடம் கேட்கலாம் என்று முடிவு செய்துக் காட்டுக்குப் போனார்.
மாறுவேடத்தில் ஒரு சாதாரண ஆளாக, அந்தத் துறவியிடம் சென்றார்.
அவர் சென்ற வேளையில், துறவி தன் குடிசைக்கு முன்பாக, தோட்ட வேலைக்காகத் தோண்டிக் கொண்டிருந்தார்.
புது ஆளைப் பார்த்ததும், துறவி அவருக்கு வணக்கம் சொல்லிட்டு, தோண்டிக் கொண்டிருந்தார்.
துறவிக்கு வயது அதிகம், பாவம் ஒவ்வொரு தோண்டுதலுக்கும் அவருக்கு மூச்சு வாங்கியது.
மன்னர் துறவியிடம், “தன் மூன்று கேள்விகளைச் சொல்லிப் பதில் சொல்லுங்களேன்” என்று கேட்டார்.
துறவி கேள்வி கேட்ட அவனைப் பார்த்தார்.
பின்னர் பதில் ஒன்றும் சொல்லாமல், தன் வேலையைத் தொடர்ந்து செய்தார்.
மன்னர் துவண்டு போயிருக்கிற துறவியைப் பார்த்தார்.
“ரொம்ப களைப்பா இருக்கிறீர்களே சுவாமி, நான் கொஞ்சம் உதவி செய்யட்டுமா” என்று கேட்டார்.
“சரி, மிக்க நன்றி” என்று சொல்லி அந்தத் துறவியும் கடப்பாறையை மன்னரிடம் கொடுத்துட்டுப் பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டார்.
மன்னரும் கொஞ்சம் செடிகள் நடவு செய்ய ஓரிரண்டு குழிகள் தயார் செய்து விட்டு, மீண்டும் துறவியிடம் தன் கேள்விகளைப் பற்றிக் கேட்டார்.
அப்போதும் துறவி ஒன்றும் சொல்லவில்லை.
தன் கைகளை நீட்டி, “நன்றி அய்யா. நீங்கள் சற்று ஓய்வெடுங்கள். நான் இன்னும் கொஞ்சம் வேலை செய்கிறேன்” என்று சொல்லி மன்னரிடமிருந்து கடப்பாறையைக் கேட்டார்.
மன்னர் கடப்பாறையைத் தராமல், தானே மீண்டும் வேலையைச் செய்து கொண்டேயிருந்தார்.
சூரியனும் மறையத் தொடங்கியது.
மன்னர், தன் வேலையை நிறுத்தி, கையில் வைத்திருந்த கடப்பாறையைக் கீழே போட்டார்.
“சுவாமி, என் கேள்விக்குப் பதில் தேடி உங்களிடம் வந்தேன். தங்களுக்குப் பதில் சொல்ல விருப்பம் இல்லை என்றால் சொல்லிவிடுங்கள். நான் போய் விடுகிறேன்” என்றார்.
அப்போது யாரோ ஓடி வரும் சப்தம் கேட்டது.
“வாருங்கள் அய்யா, யாரென்று பார்ப்போம்” என்று மன்னரை அழைத்தார் துறவியார்.
தாடிக்காரன் ஒருவன் காட்டின் உள்பகுதியிலிருந்து துறவியின் குடிசை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான்.
வயிற்றில் வெட்டுக்காயம். இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. இரத்தப்போக்கை நிறுத்தும் வகையில் கையால் அழுத்திப் பிடித்துக் கொண்டே குடிசை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான். அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்தை அடைந்ததும் அவனால் நிற்க முடியாமல் மயங்கிக் கீழே விழுந்தான்.
துறவியும் மன்னரும் உடனே அவனுடைய ஆடைகளைக் களைந்து வயிற்றில் உள்ள பெரிய காயத்தைப் பார்த்தனர்.
உடனே மன்னர், அவனுடையக் காயத்தைக் கழுவி, தன் கைக்குட்டையைக் கொண்டு கட்டுப் போட்டார். இரத்தப்போக்கு நிற்காமல் போக, துறவி கொடுத்த துண்டையும் சேர்த்துக் கட்டினார். இரத்தம் நிற்கும் வரை அவனுக்குச் சிகிச்சை செய்து ஓரளவு இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தினார்.
கொஞ்சம் நினைவு திரும்பிய தாடிக்காரன் தண்ணீர் கேட்டான்.
மன்னரே அவனுக்கு நல்ல தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து, அவனைக் குடிக்க வைத்தார்.
குடிசையின் உள்பகுதியில் ஒரு படுக்கையில் அவனை இருவரும் படுக்க வைத்தனர். இப்போது நன்றாக இருட்டி விட்டது. களைப்பு மிகுதியால் மன்னரும் தன்னை மறந்து அருகிலேயேத் தூங்கிவிட்டார்.
விடிந்து மிக நேரம் ஆகியும் மன்னரின் தூக்கம் தெளியவில்லை.
திடீரென்று விழித்தார்.
தான் எங்கு இருக்கிறோம் என்ன செய்தோம்? இந்த தாடிக்காரன் யார்? என்னை ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறான்? என்று யோசித்தவருக்குக் சட்டென்று நேற்று நடந்தவை அனைத்தும் நினைவுக்கு வந்தன.
“என்னை மன்னியுங்கள்” என்று மன்னரிடம் மெல்லியக் குரலில் பேச ஆரம்பித்தான் தாடிக்காரன்.
“உங்களுக்கு என்னைத் தெரியாது, ஆனால் எனக்கு உங்களைத் தெரியும், உங்கள் எதிரி நான். முன்பு, என் தம்பியைக் கொன்று அவனது உடைமைகளை நீங்கள் எடுத்துக் கொண்டுவிட்டீர்கள். அதனால், உங்களைப் பழி தீர்க்கப் புறப்பட்டேன். நீங்கள் துறவியை பார்க்கக் கிளம்பியதும், பழி தீர்க்க இதுதான் சமயம் என்று உங்களைப் பின் தொடர்ந்தேன். உங்கள் காவலர்கள் என்னை அடையாளம் கண்டு என்னைத் தாக்கி காயப்படுத்தினர். நான் அவர்களிடம் இருந்து தப்பி இங்கு ஓடி வந்தேன், நீங்கள் என் இரத்தப் போக்கை நிறுத்தி தகுந்த சிகிச்சை அளிக்காமல் போய் இருந்தால், நான் இறந்து போயிருப்பேன். உங்களைக் கொல்ல நினைத்தேன். ஆனால், உங்களால் காப்பாற்றப்பட்டேன். அதற்கு நன்றிக்கடனாக இனி, நான் உங்கள் அடிமையாக இருப்பேன். என் இரண்டு பிள்ளைகளும் இனி உமக்கே அடிமை. என்னை மன்னியுங்கள்” என்று தழுதழுத்தான்.
மன்னருக்குத் தன் எதிரி எளிதில் சமாதானம் அடைந்தது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அவனை நண்பனாகப் பெற்றதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அளித்தது. அவனை அவன் நாட்டிற்கு அனுப்பி வைத்து, தன் மருத்துவரையும், அவன் சிகிச்சைக்காகக் கூடவே அனுப்பி வைத்தான், அவன் தம்பியிடம் கைப்பற்றியப் பொருட்களையும் திருப்பி அனுப்புவதாக வாக்களித்தான்.
அவனிடம் இருந்து விடைபெற்று வெளியே வந்த மன்னர் துறவியைத் தேடினார்.
துறவி வழக்கம் போல தோட்ட வேலை செய்து கொண்டிருந்தார்.
“என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் துறவியாரே” என்று கேட்டார்.
“உங்களுக்கு பதில் கிடைத்து விட்டது அரசே” என்றார் துறவி.
மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை.
“என்ன சொல்கிறீர் துறவியாரே...” என்று கேட்டார்.
“புரியவில்லையா அரசரே? நீங்கள் என் நிலைமை கண்டு கருணை கொள்ளாமல் போய் இருந்தால், உங்கள் எதிரி உங்களைத் தாக்கி இருக்கலாம். அப்போது நீங்கள் ஐயோ துறவியின் குடிசையிலேயே இருந்திருக்கலாமே என்று நினைத்திருக்கலாம்”என்று தொடங்கினார் துறவி.
“எனவே, மிக முக்கியமான நேரம், நீங்கள் எனக்கு உதவி செய்த நேரம். அப்போதைய முக்கியமான மனிதர் நான் தான். எனக்கு உதவி செய்ததே உங்களுக்குரிய முக்கியமான வேலை”
“பிறகு அந்த தாடிக்காரன் நம்மை நோக்கி வந்த போது, அப்போது முக்கியமான நேரம் அடிபட்டவனுக்கு நீங்கள் உதவிய நேரம். எனென்றால், அப்போது நீங்கள் அவனுக்கு உதவாமல் போய் இருந்தால், அவன் உங்களோடு சமாதானம் செய்து கொள்ளாமலேயே இறந்து போயிருக்கக்கூடும். அப்போதைய முக்கியமான நபர் அந்த காயம் பட்டவர்தான். நீங்கள் அவனுக்கு உதவியது தான் அப்போதைய முக்கியச் செயல். எனவே. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் அரசே. ஒரே ஒரு நேரம்தான் நம் வாழ்கையில் மிக முக்கியமான நேரம். அது “இந்த நேரம்”, “இந்த நொடி” மட்டுமே.
மாற்றும் சக்தி நமக்கு இருக்கிறது என்றால் அது இந்த நேரத்தில் மட்டுமே சாத்தியம். கடந்த காலத்தையோ அல்லது எதிர் காலத்தையோ நம்மால் இப்போது மாற்ற முடியாது. நிகழ்காலம் மட்டுமே நம் கையில் உள்ளது. அதனால்தான் சொல்கிறேன் நம்மால் நிகழ்காலத்தை மட்டுமே நம் செயல் மூலம் மாற்ற முடியும். ஆகவே முக்கியமான நேரம் என்பது இந்த நொடிதான்.”
“இரண்டாவது கேள்வி என்ன கேட்டீர்கள்? ஆலோசனை கேட்க யார் முக்கியமான மனிதர்? நீங்கள் யாரோடு அந்த சமயத்தில் இருக்கிறீர்களோஅவரே உங்கள் செயலுக்கு முக்கியமானவர். ஏனெனில், யார் யாருடன் எப்போது இருப்பார் என்று யாரால் சொல்லமுடியும்? ஆதலால் இப்போது யார் உங்களுடன் இருக்கிறாரோ, அவரே உங்கள் செயல் நடத்த மிகவும் முக்கியமானவர். உங்கள் செயலைப் பொறுத்தது அவர் ஆலோசனை தருகிறாரா அல்லது பெறுகிறாரா என்பது...”
“மூன்றாவதாக, எது முக்கியமான வேலை என்று கேட்டீர்கள். உங்களுடன் இருப்பவருக்கு உதவுவதே உங்கள் முக்கியமான வேலை. ஏனெனில், அவர் உங்களோடு இருப்பதே உங்கள் உதவி பெறுவதற்குத்தான். அவருக்கு உதவி செய்வதற்கே நீங்கள் படைக்கப்ப்ட்டு இருக்கிறீர்கள் என்று உணருங்கள்...” என்றார் துறவி.