அப்பொழுது கோடைக் காலம்.
ஒரு நாரை வயலில் உட்கார்ந்து மகிழ்ச்சியால் நடனமாடிக் கொண்டு இருந்தது.
பசியோடு இருந்த ஒரு நரி அச்சமயம் அங்கு வந்தது.
நாரை மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்துப் பொறாமைப் பட்ட நரி சொன்னது.
நாரை நடனமாடுகிறது. என் கண்களை நம்ப முடிய வில்லை. பாவம் நாரைக்கு இரண்டே கால்கள்தான் இருக்கின்றன.
நாரை நடனமாடுவதை நிறுத்தி விட்டு நரியைப் பார்த்தது, நரிக்கு ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு கால்கள் இருப்பதைக் கண்டு, நாரை தனது அலகைத் திறந்து வியப்படைந்தது.
"ஓ! எவ்வளவு பெரிய அலகு! இருந்து என்ன பயன்? ஒரு பல்லாவது இருக்கிறதா?”
நரி தன் பற்கள் அனைத்தும் தெரியும் வண்ணம் உரக்கச் சிரித்தது.
உடனே நாரை, தன் அலகை மூடிக் கொண்டு வெட்கத்தால் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டது.
“ஹா... ஹா...! உன்னுடைய காதுகள் எங்கே? காதுகள் இல்லாமல் தலை உண்டா? ஏய், நாரையே? உன் மண்டையில் ஏதாவது இருக்கிறதா? இல்லை, அதுவும் காலியா?” என்று ஏளனம் செய்தது நரி.
“கடலைக் கடந்து நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்; எனவே கொஞ்சம் அறிவு இருக்க வேண்டும்” என்று சொல்லிய நாரைக்கு அழுகையே வங்து விட்டது.
“அப்பாவி நாரையே! இரண்டே கால்கள், ஒரே ஒரு யோசனையுடைய சிறிய தலை. இவ்வளவுதானே உன்னிடம் இருப்பது! என்னைப் பார்! நான்கு கால்கள், இரண்டு காதுகள், வாய் நிறையப் பற்கள், என் தலையிலோ நூற்றுக்கணக்கான யோசனைகள். ஆழகான, அடர்ந்த வால் இவ்வளவும் என்னிடம் உள்ளன” என்றது நரி.
நாரை மிகவும் வருத்தப்பட்டது. விரக்தியுடன் ஆகாயத்தைப் பார்க்க அலகை மேலேத் தூக்கியது.
அப்பொழுது ஒரு வேடன் வில், அம்புகளுடன் வருவவதைப் பார்த்தது.
“ஓ! நரியாரே! உங்களிடம் நான்கு கால்கள், இரண்டு காதுகள், வாய் நிறைய பற்கள் நுாற்றுக்கனக்கான யோசனைகள், ஒரு பெரிய அடர்ந்த வால் இவ்வளவும் இருக்கின்றன. இங்கே பாருங்கள்! ஒரு வேடன் வருகிறான். அவனிடமிருந்து நாம் எப்படித் தப்பித்துக் கொள்வது?”
“எனக்கு எத்தனையோ வழிகள் தெரியும். உனக்கு நீயே யோசனை செய்” என்று சொல்லிவிட்டு நரி ஒரு ஆழாமான பொந்திற்குள் சென்றுவிட்டது.
“நரிக்கு நூறு யோசனைகள் தெரியும். எனவே அது செய்வது சிறந்ததுதான்” என்று எண்ணிய நாரை, நரியைப் பின் தொடர்ந்து தானும் பொந்திற்குள் சென்றது.
நரியை நாரை துரத்துவதை இதுவரை கண்டிராத வேடன், பொந்தின் அருகில் சென்று கையை விட்டு நாரையின் இரு கால்களைப் பிடித்து வெளியே எடுத்தான்.
நாரையின் இறகுகள் துவண்டு போய் இருந்தன. கண்கள் வெளிறிக் கிடந்தன. இதயத் துடிப்பு அநேகமாக நின்றுவிட்டது.
இங்கு வளைக்குள் மூச்சுத் திணறியிருக்கிறது போலும் என்று எண்ணிய வேடன் நாரையை அருகில் இருந்த புல்தரையின் மீது வீசி எறிந்தான்.
மறுபடி வேடன் வளைக்குள் கையை விட்டு நரியின் வாலை பிடித்து வெளியே இழுத்தான், "நரி தன் காதுகளை முறுக்கியது; பற்களை நறநற என்று கடித்தது. நான்கு கால்களாலும் பிராண்டியது. ஆனாலும் வேடன் நரியை பைக்குள் திணித்துக் கொண்டான்.
”சரி, நாரையையும் எடுத்துக் கொண்டு போவோம்” என்று வேடன் பின் பக்கம் திரும்பினான்.
புல்தரை முழுவதும் தேடிப் பார்த்தான்.
அங்கு நாரையைக் காணவில்லை, மேலேப் பார்த்தான் வேடன். நாரை வெகு தொலைவில், அம்புகளுக்கு எட்டாத தூரத்தில் பறந்து கொண்டு இருந்தது.
தனது அறிவைப் பற்றி தற்பெருமை அடித்துக் கொண்ட நரியின் கதி இப்படி ஆயிற்று. நாரைக்குச் சிறிய தலையானாலும் அது சாமார்த்தியமாகத் தப்பிவிட்டது.