பெருமாள் பக்தரான நம்பூதிரி ஒருவர் வாதநோயால் பீடிக்கப்பட்டார்.
அவருக்கு நோய் மிகவும் தீவிரமாகி, கை கால்களை நீட்ட முடியாமல், உடல் குறுகிவிட்டது.
அவரால் நடக்க முடியாததால், அவரை உறியில் வைத்துத் தூக்கிச் செல்வார்கள். அதனாலேயே அவரை ‘உறியமதம்’ என்று அவ்வூர் மக்கள் அழைக்க ஆரம்பித்தார்கள்.
அவருக்குப் பல மருத்துவங்கள் செய்தும் பலனளிக்கவில்லை.
பெருந்தொகையைக் காணிக்கையாகச் செலுத்துவதாகவும், தான் பூரண குணமடைய வேண்டும் என்றும் குருவாயூரப்பனை வேண்டிக்கொண்டார்.
குருவாயூர் செல்லப் பயணப்பட்டார். உறியில் வைத்து அவரை அழைத்துச் சென்றனர்.
அதே சமயம், வறுமையால் வாடிய ஒருவன், குருவாயூர் சென்று வேண்டினால், வறுமை தீர்ந்து சௌகரியமாய் வாழலாம் என்ற நம்பிக்கையில் குருவாயூர் வந்தான்.
உறியமதம், சுவாமி தீர்த்தத்தில் நீராடி, நித்ய அனுஷ்டானத்தை முடிக்க ருத்ர தீர்த்தம் சென்றார்.
தன்னுடைய பணப்பையைப் குளத்துப் படிக்கட்டில் வைத்தார்.
உறியைக் குளத்தில் இறக்கி வைக்கச் சொன்னார்.
ஏற்கனவே அங்கிருந்த, பணமில்லாமல் வாடிக் கொண்டிருந்த பக்தன், அந்தப் பணப்பையை எடுக்கக் கையை வைத்தான்.
அதைக் கண்ட உறியமதம், யாருமே எதிர்பார்க்கா வண்ணம், உறியிலிருந்து குதித்து, அவனைப் பிடிக்க ஓடினார்.
ஆனால் அவன் ஓடிவிட்டான். தான் குணமடைந்ததையே உணராத உறியமதம், காணிக்கை அளிக்க முடியவில்லையே என்று மனம் வருந்தினார்.
அப்போது “கவலைப்படாதே! உங்கள் இருவரின் வேண்டுதல்களும் நிறைவேறிவிட்டது” என்று அசரீரி கேட்டது.
மகிழ்ந்த அவர் குருவாயூர் பெருமானை சேவித்து ஊர் திரும்பினார்.
அவரது நோயும் முழுமையாக நீங்கியது.