கோட்டையூர் என்ற ஊரில் அருணாச்சலம் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவன். வாழ்க்கையில் இன்பமோ துன்பமோ எது நடந்தாலும் எல்லாம் கடவுள் செயல் என்று சொல்வான். அதனால் எதை பற்றியும் கவலைப்பட மாட்டான். இறைவன் அருள் இன்றி ஒரு அணுவும் அசையாது என்பது அவனுடைய கொள்கை.
அதே ஊரில் தங்கையா என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் அருணாச்சலத்திற்கு நேர் எதிர். கடவுளே இல்லை என்று சொல்லும் கொள்கையுடையவன். வசதிக்குக் குறைவில்லை.
எனவே, அருணாசலத்தைப் பார்க்கும் போதெல்லாம் மிகவும் கிண்டல் செய்வான். காரணம், அருணாச்சலம் ஏழை. அதனால் அவனது கிண்டலுக்குக் கேட்கவும் வேண்டுமா?
நீ நம்பி இருக்கிற கடவுள் உன்னை மட்டும் ஏழையாக வைத்துவிட்டு, என்னை மட்டும் பணக்காரனாகப் படைத்திருக்கிறான் பார்த்தாயா? இப்படியெல்லாம் பேசி நக்கல் செய்வான்.
அதற்கு அருணாச்சலம் எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். அதை இறைவனைத் தவிர யார் அறிய முடியும்? என்று சொல்வான். இப்படியாக, தங்கையா கிண்டல் செய்வதும் அருணாச்சலம் பதில் சொல்வதுமாக இருந்தான்.
ஒரு நாள் உச்சி வெயில் மண்டையை பிளந்தது. அப்போது அந்த வழியாக குடை பிடித்து கொண்டு வந்து கொண்டிருந்தான் தங்கையா. குடை வாங்க வசதியில்லாத அருணாச்சலம் வெயிலில் வேர்வை வழிந்தோட வந்து கொண்டிருந்தான். அவனை கண்டதும் அருணாச்சலத்திற்கு ஏக குஷி.
வழக்கம் போல் அருணாச்சலத்தை வம்புக்கு இழுத்தான். “என்ன அருணாச்சலம் வெயிலில் வேர்க்க விறுவிறுக்க எங்க போயிட்டு வர்ற? எல்லாம் கடவுள் செயல் என்று சொல்லும் உனக்கு ஒரு குடை கொடுக்க வேண்டும் என்று அந்தக் கடவுளுக்குத் தெரியாதா? என்னய்யா சாமி?” என்று நக்கல் செய்தான்.
வெயில் கொடுமை ஒரு பக்கம்; அவனது தொடர் தொல்லை ஒரு பக்கம் சேர்ந்து கொண்டு அருணாச்சலத்தை எரிச்சல் படுத்தியது.
“அந்தக் கடவுளின் கருணை இல்லையென்றால், உன் கையில் குடை இருந்தாலும் நீ அதைப் பிடித்துச் செல்ல முடியாது. அதைக் கையில் வைத்துக் கொண்டு தலை காய ஓடுவாய் என்பதை மட்டும் மறந்துவிடாதே. இறைவனது கருணையை எப்போதும் கிண்டல் செய்யாதே,” என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தான்.
பெரிய தத்துவம் சொல்றான் என்று சிரித்து கொண்டே நடந்தான் தங்கையா.
சிறிது தூரம் கூட நடந்திருக்கமாட்டான் அதற்குள் வெறி நாய் ஒன்று அவனைத் துரத்த ஆரம்பித்தது.
உயிர் பயத்தில் ஓட்டம் பிடித்தான் தங்கையா. நாயோப் பயங்ரமாகத் துரத்தியது.
குடையைப் பிடித்துக் கொண்டு ஓடுவதற்குச் சிரமமாக இருந்தது. எனவே, குடையை மடக்கிக் கையில் வைத்து கொண்டு ஓட்டமாக ஓடி உயிர் தப்பிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.
அப்பொழுதுதான் அவன் மனதில் அருணாச்சலம் சொல்லிவிட்டுச் சென்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.
கடவுளின் கருணை இல்லாவிட்டால், கையில் குடை இருந்தாலும் பிடிக்கமுடியாது என்பதை உணர்ந்தான்.
அவனை அறியாமல் ஒருவித பயம் அவனை ஆட்கொண்டது. அன்றிலிருந்து கடவுளின் அருளை நம்ப ஆரம்பித்தான் தங்கையா.