புத்தருக்கு நெருங்கிய உறவினரான ஆனந்தர் புத்தரை விட வயதில் மூத்தவர். அவர், புத்தரின் சீடராவதற்குத் தனக்கு அதிக உரிமை இருக்கிறது என்று நினைத்தார்.
புத்தரிடம் வந்த அவர், "சித்தார்த்தா! நான் உனக்கு அண்ணன் முறை. நான் என்ன சொன்னாலும் நீ கேட்க வேண்டும். எனக்காக நான் சொல்லும் மூன்றை நீ கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். நான் உனக்குச் சீடனானதும் நீ அவற்றை விட்டுவிடக் கூடாது” என்றார்.
“அந்த மூன்று செயல்கள் என்ன?” என்று கேட்டார் புத்தர்.
"முதலாவதாக, நான் எப்போதும் உன்னுடனேயே இருக்க வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் புத்தமதக் கருத்துக்களைப் பரப்ப உன்னை விட்டு என்னை நீ வேறு நாடுகளுக்கு அனுப்பக் கூடாது. இரண்டாவதாக, நான் உன்னைச் சந்திக்க யாருக்கு அனுமதி தந்தாலும் நீ அவரைச் சந்திக்க வேண்டும். நள்ளிரவாக இருந்தாலும் 'முடியாது' என்று சொல்லக் கூடாது. மூன்றாவதாக, நீ உறங்கும்போது உனது அருகிலேயே 'நான் உறங்க வேண்டும். வேறு அறைக்குச் சென்று தூங்கு!' என்று என்னிடம் சொல்லக் கூடாது” என்றார் ஆனந்தர்.
"அப்படியேச் செய்கிறேன்" என்று வாக்குறுதி தந்தார் புத்தர்.
அதன்படி ஆனந்தர் நாற்பத்திரண்டு ஆண்டுகள் புத்தருடனேத் தங்கியிருந்தார். என்றாலும் அவர் ஞானம் பெறவில்லை.
வெகு தொலைவிலிருந்து வந்து புத்தரின் சீடர்களான சிலர், சில நாட்களிலேயே ஞானம் பெற்றதை அறிந்தார் ஆனந்தர்.
தனக்கு மட்டும் ஏன் ஞானம் கிடைக்கவில்லை என்று அவர் மனம் வருந்தினார்.
இறக்கும் நிலையில் இருந்தார் புத்தர்.
அப்போது அவரிடம் ஆனந்தர், “இரவும் பகலும் உன்னைப் பிரியாமல் நாற்பத்திரண்டு ஆண்டுகள் கழித்து விட்டேன். இன்னும் நான் ஞானம் பெறவில்லை. நீ இறந்த பின்பு என் நிலை என்ன ஆகும்?” என்று கண்களில் கண்ணீர் வழியக் கேட்டார்.
மெல்லிய குரலில் புத்தர், “வாழ்க்கையைப் பற்றி நீங்கள் ஒன்றும் புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் ஞானம் பெறுவதற்கு நானேத் தடையாக இருந்திருக்கிறேன். நான் இறந்த பிறகு நீங்கள் ஞானம் பெற்றாலும் பெறலாம்.
“நீங்கள் என்னிடம் மூன்று வேண்டுகோளை வைத்தீர்கள். நான் அவற்றை ஏற்றுக் கொண்டது உங்கள் வாழ்க்கைக்குத் தடையாயிற்று. நீங்கள் எப்பொழுதும் உங்களை என் அண்ணன் என்றே நினைத்துக் கொண்டீர்கள். மற்றவர்களை விட என்னிடம் உங்களுக்கு அதிக உரிமை இருக்கிறது என்று கருதினீர்கள். உங்களுக்காகத்தான் அந்த மூன்று வேண்டுகோளை நான் ஏற்றுக் கொண்டேன். என் இறப்பு தான் உங்களுக்கு உதவி செய்யும்” என்றார்.
பிறகு புத்தர் இறந்து போனார்.
ஞானம் பெற்ற சீடர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடினார்கள்.
கடந்த நாற்பத்திரண்டு ஆண்டுகளில் புத்தர் என்னென்ன அறிவுரைகள் சொன்னாரோ, அவற்றை எழுதி வைக்க வேண்டும் என்று நினைத்தார்கள்.
அங்கிருந்த யாருமே புத்தருடன் நாற்பத்திரண்டு ஆண்டுகள் தொடர்ந்து இருந்ததில்லை. அத்தனை ஆண்டுகளும் புத்தருடன் இருந்த ஆனந்தரோ இன்னும் ஞானம் பெறவில்லை. அதனால் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் அனுமதிக்கப்படவில்லை.
கூட்டம் நடக்கும் இடத்திற்கு வெளியே ஆனந்தர் அமர்ந்திருந்தார்.
அவரது நிலை பரிதாபமாக இருந்தது.
"புத்தரே! நான் உங்களுடன் நாற்பத்திரண்டு ஆண்டுகள் இடைவிடாமல் இருந்திருக்கிறேன். உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒவ்வொரு சிறிய நிகழ்ச்சியும் என் உள்ளத்தில் பதிந்திருக்கிறது. ஞானம் பெறாதவர் என்பதால் எனக்கு இப்போது கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லையே! நான் என்ன செய்வேன்? என்று ஆனந்தர் அழுது புலம்பினார். வாழ்க்கையே அழிந்துவிட்டது போல் அழுதார்.
கண்ணீர் வெள்ளத்தில் நனைந்தார் அவர். அதனால் அவருடைய ஆணவம்' நீங்கியது. குழந்தையைப் போல ஆனார் அவர். அப்போதே ஞானம் பெற்றார்.
வெளியே வந்த சீடர்கள் சில விளக்கங்கள் கேட்பதற்காக ஆனந்தரைத் தேடினார்கள். ஞானம் பெற்ற அவரைக் கண்டு மகிழ்ந்தார்கள்.
புத்தரின் போதனைகளை எல்லாம் அதன் பிறகு ஆனந்தர் தொகுத்தார்.