வீர சிவாஜி ஒரு முறை முகலாய மன்னனிடம் இருந்து தப்பித்து மாறு வேடத்தில் ஊருக்குள் சுற்றிக் கொண்டிருந்தார்.
ரொம்பப் பசி எடுத்ததும் அருகில் இருந்த ஒரு வீட்டிற்குச் சென்று தனக்கு உணவளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அந்த வீட்டிலிருந்த வயதான பாட்டி, அப்போதுதான் சமைத்து முடித்திருந்தாள்.
"வாப்பா" என்றழைத்து சுடச்சுட சோற்றைப் பரிமாறினாள்.
அவசரக் குடுக்கையான சிவாஜி பசி தாளாமல், வேகவேகமாய் சுடு சோற்றின் நடுவே கை வைத்துச் சாப்பிட ஆரம்பித்தார். அதிகச் சூட்டினால் சாப்பிட முடியாமல் தவித்தார்.
உடனே குறுக்கிட்ட அந்தப் பாட்டி, “ஏம்ப்பா... நீயும் நம்ம சிவாஜி மாதிரி விவரம் புரியாத ஆளா இருக்கியே... முதல்ல சுற்றி இருக்க சின்னச்சின்னக் கோட்டைகளைக் கவர்ந்து விட்டு, அதன் பிறகு, பெரிய கோட்டையை ஆக்கிரமிக்கணும்... எடுத்ததுமே மிகப்பெரிய விஷயத்துக்கு ஆசை மட்டும் படக் கூடாது. அது போல, நீ ஓரத்துல இருக்க சோற்றை முதலில் சாப்பிட்டு முடி... அதற்குள் நடுவில் இருக்கும் மலைக்குவியல் சோறு ஆறியிருக்கும். பின் அதை சாப்பிடலாம்" என்றது.
சிவாஜிக்குத் தூக்கி வாரிப் போட்டது.
இருந்தும் பாட்டியின் சொல்லில் இருக்கும் நிஜத்தைப் புரிந்து கொண்ட சிவாஜி போர் நுணுக்கத்தை தனக்குச் சொல்லிக் கொடுத்த பாட்டியிடம், தான்தான் சிவாஜி என்று சொல்லாமலேயே, உணவளித்தமைக்கு நன்றி சொல்லி அந்த இடத்தை விட்டு வெளியேறிச் சென்றார்.