ஒரு குடும்பத்தில் தந்தை இறந்து போனார். வயதுக்கு வந்த மகன் குடும்பப் பொறுப்பு ஏற்றான். அப்பா இறந்த பிறகு அவரது டைரியில் இருந்த குறிப்பு ஒன்று சற்றே அதிர்ச்சி தந்தது.
அதில் நண்பரிடம் ஒரு லட்சம் கடனாக வாங்கியிருப்பதைத் தந்தை குறிப்பிட்டிருந்தார். அவர் கடன் வாங்கிய விபரம் குடுபத்தில் யாருக்கும் தெரியவில்லை.
இறப்பின் போதும், இறப்பிற்குப் பிறகும் கடன் கொடுத்த அந்த அப்பாவின் நண்பரை வேறு வேறு இடங்களில் சந்தித்து விட்டான். அவரும் இவனிடம் நலம் விசாரித்ததோடு சரி.
அவனது அப்பாவிடம் வழங்கியிருந்த கடன் குறித்து பேசாதது ஆச்சரியம் தந்தது. எனவே தந்தையின் நண்பரைத் தேடிச் சென்றான். சந்தித்து, விவரம் சொன்னான்.
அவர் மெதுவாகச் சொன்னார், "உங்க அப்பா எனக்குப் பல நேரங்களில் உதவியிருக்கிறார். அவர் ஒரு சமயத்துல உங்க அம்மா உடல் நலம் பாதிக்கப்பட்டபோது கேட்டார். கொடுத்தேன்"
"அதுக்கு எந்த ஆதாரமும் என்னிடம் இல்லை. திடீர்னு உங்கப்பா இறந்துட்டார். அந்த நிலையில் எந்த ஆதாரமும் இல்லாமல், உங்கப்பா எங்கிட்ட கடன் வாங்கியிருக்காருன்னு கேட்குற மனம் எனக்கு வரவில்லை. அதற்கு முக்கியக் காரணம், கடன் வாங்கும் போதே இது என் வீட்டிற்குத் தெரிய வேண்டாம் என்று சொன்னார்"
"அவர் இறந்த பிறகும், அவர் வார்த்தைக்கு மதிப்பளிப்பதுதான் நியாயம் என்று எனக்குப் பட்டது. அதனால நானும் அதை விட்டு விட்டேன்" என்றார்"
எங்கப்பா கையெழுத்துப் போட்டு கடன் வாங்கவில்லை என்றாலும், அதைத் திரும்பக் கொடுக்குறதுதான் அவரோட மகனுக்கு அடையாளமாக இருக்கும் என்ற மகன், கையோடு கொண்டு சென்றிருந்த பணத்தைத் திரும்பக் கொடுத்தான்
அப்பாவின் நண்பர் நெகிழ்ந்து போனார்.
ஒரு மனிதனின் பண்பும் செயலும்தான், சமூகத்தில் அவன் தரத்தைத் தீர்மானிக்கிறது.