சங்கமித்திரன் என்ற அரசன் ஒரு நாட்டை ஆண்டு வந்தான். அவனுக்குக் குரங்குகள் என்றால் மிகவும் பிரியம். ஆகையால் தன் அறைக்குள்ளேயே ஒரு குரங்கை வளர்த்து வந்தான். தன் படுக்கையறைக்குள் வருமளவுக்குச் சுதந்திரம் அளித்து வைத்திருந்தான்.
ஒரு நாள் அரசவையில் அதன் அட்டகாசம் தாங்காது அமைச்சர்களும் மற்றவர்களும் குரங்கின் நட்பை விட்டுவிடுமாறு கூறினார்கள். அவர்களது அறிவுரையை ஏற்கவும் மறுத்தான் சங்கமித்திரன்.
ஒரு நாள் இரவில் தான் தூங்கப் போகும் போது குரங்கை தனக்கு விசிறி விடுமாறு சொல்லிவிட்டு ஆழ்ந்து தூங்கிப் போனான் அரசன்.
அப்போது ஒரு ஈ ஒன்று அவன் கழுத்தில் வந்து அமர்ந்தது. விசிறியால் மீண்டும் மீண்டும் விசிறியும் ஈ பறக்காமல் அமர்ந்திருந்தது.
அதனால் கோபம் கொண்ட குரங்கு, "உன்னைக் கொன்று விடுகிறேன் பார்" என்று சொல்லி அரசனின் வாளால் அரசனின் கழுத்தில் அமர்ந்திருந்த ஈயை வெட்ட வாளை ஓங்கி வீசியது.
அரசனின் கழுத்து துண்டானது.
கூடா நட்பு கேடாய் முடியும்.