ஒரு ஆசிரமத்தில் ஞானி ஒருவர் வசித்து வந்தார். அவரிடத்தில் பல சீடர்கள் படித்து வந்தனர். அவர்கள் அனைவரும் நல்ல அறிவாளிகளாக இருந்தனர். அதில் ஒரு சீடன் எல்லோரையும் விட ஞானிக்கு பணிவிடை செய்து அவருக்கு மிக நெருக்கமாக இருந்தான்.
ஞானியிடம் நல்லவனைப் போன்று நடந்து கொண்டு மிகுந்த ஆர்வத்தோடு ஒவ்வொரு நாளிலும் புதிய புதிய செயல்களை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டான். அதனால் அங்கிருந்த அனைத்துச் சீடர்களைக் காட்டிலும் அந்த ஆசிரமத்தில் அவனே முக்கியமானவனாக இருந்தான். ஞானியும் அவனிடம் தனிப்பட்ட அன்பும் கவனமும் செலுத்தினார்.
சிறிது காலம் சென்றது.அந்த சீடனிடம் பல மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன. அவன் எல்லோரையும் ஏளனமாக பார்க்க ஆரம்பித்து விட்டான். தன்னை விட மூத்த சீடர்களைக் கூட அவன் மதிக்காமல் இருந்தான். இளையச் சீடர்களை கிள்ளுக் கீரையாக நினைத்தான்.
பலருக்கும் மத்தியில் மூத்த சீடர்களிடம் தேவையில்லாத கேள்விகளைக் கேட்டு அவர்கள் விடை தெரியாமல் விழிப்பதைப் பார்த்து கைகொட்டிச் சிரித்தான். அவர்கள் அவமானத்தில் அழும் வரை கேலி செய்வான். சக சீடர்களைப் பற்றி ஞானியிடம் ஒன்றுக்கு இரண்டாக சொல்லி சிண்டு முடிந்து கொண்டிருந்தான்.
இந்த விஷயம் ஞானியின் காதுகளுக்கு சென்றது. இந்த அகம்பாவம் அவனை அழித்து விடும் என்பதை உணர்ந்தார். அவனது பிழையை அவனுக்கு உணர்த்த விரும்பினார் ஞானி. நேரடியாக அறிவுரை சொன்னால், அவன் கண்ணை மறைக்கும் அகம்பாவத்தில் அவரையே கூட எதிர்த்துப் பேசக்கூடும். அதற்காக அவர் வேறொரு வழியை யோசித்தார்.
மறுநாள் அவனை அழைத்து "இன்று அதிகாலையில் பக்கத்துக் கிராமத்தில் உள்ள என் நண்பர் ஒருவர் இறந்து விட்டார். அவர் இருநூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்து முறை அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர். சாத்திரங்கள் பலவற்றைக் கற்றவர். பல அயல் நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் உண்டு. பக்கத்துத் தெருவிலுள்ள ஆசாரியிடம் போய் விவரத்தைச் சொல்லி ஒரு தரமான சவப்பெட்டியை செய்து வைக்கச் சொல். இன்று மதியம் அவரது அடக்கத்திற்குத் தேவைப்படுகிறது. இதை உன்னால் மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும்" என்று கூறினார்.
கடைசியாக அவர் அவனை உயர்த்திச் சொன்ன வார்த்தைகள் அவனை மிகவும் உற்சாகப்படுத்தி விட்டன.
"இதோ உடனே செய்து முடிக்கிறேன் குருவே" என்று சொல்லிவிட்டு ஆசாரி வீட்டிற்கு விரைந்தான். ஆசாரி அவனை வரவேற்று அவன் வந்த விஷயத்தைக் கேட்டார். அவனும் மதியத்திற்குள் ஒரு தரமான சவப்பெட்டி வேண்டுமென்ற விஷயத்தை சொன்னான். ஆசாரி இறந்து போனவரைக் குறித்த விபரங்களைக் கேட்டார். அவனும் ஆசிரியர் சொன்னபடியே அவர் சாஸ்திரத்தை கரைத்துக் குடித்தவர். பத்து முறை அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர்.. என அவன் சொல்லி முடிப்பதற்குள் ஆசாரிக்குக் கோபம் வந்துவிட்டது.
"ஏன்டா முட்டாள்! இன்னிக்கு நீ பொழுது போக்க நான் தான் கிடைத்தேனா? செத்த பிணத்தோட விவரம் சொல்லாம வேறென்னமோ உளறுகிறாயே! நீ படிச்சவன்தானா? என்றார். அதைக் கேட்டதும் அந்த மாணவனுக்கு கோபம் வந்துவிட்டது. "அவரைப் பத்தி இவ்வளவுவ் சொல்லியும் உங்களுக்கு புரியலைன்னு சொன்னா நீங்கதான் ஒரு அடி முட்டாள்" என்றான்.
அதற்கு ஆசாரி, "அடேய் அறிவு கெட்டவனே. என்னதான் படிச்சிருந்தாலும்.. விருதெல்லாம் வாங்கி இருந்தாலும்.. எனக்கு அது பிணம்தான். எனக்கு வேண்டியது அதோட உயரமும் அகலமும்தான். நீங்க படிக்கிற படிப்பெல்லாம் உடம்புல உயிர் இருக்கிற வரைக்கும் தான். உனக்குப் பெட்டி வேணும்னா மரியாதையா போய் அளவெடுத்துக் கிட்டு வா!” என்றார்.
அதைக்கேட்டதும் அவனுக்கு பளீரென்று அடி விழுந்தது போல் இருந்தது.
மனித ஞானம் இவ்வளவுதானா? இதற்காகவா இத்தனை பேரை அவமானப்படுத்தினேன்? என்று நினைத்துக் கொண்டே ஞானியின் முன்னால் கூனிக் குறுகியபடியே போய் நின்றான்.
ஞானியோ சிரித்துக் கொண்டே, "என்னப்பா! சவப்பெட்டி செய்தாகி விட்டதா?” என்று கேட்டார்.
அதற்கு அந்த சீடன், "குருவே! என்னோட தலைக்கனத்துக்கு தான் பதிலடி கிடைச்சுது" என்றான்.
என்னதான் படித்தாலும் இது அழியப் போகிற சரீரம் தான். இதை உணர்ந்து மனத்தாழ்மையாய் நடப்பதே உண்மையான ஞானம். வீண்பெருமையும், அகந்தையும், ஆணவமும் உடையவர்கள் ஒரு நாள் முக்கியமற்றுப் போகிறார்கள். ஆனால் அடக்கமாக இருக்கிறவர்களோ ஞானம் பெறுகிறார்கள். உயர்வை அடைகிறார்கள். நல்ல குரு கிடைத்ததால் இந்த சீடன் திருந்துவதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், அகங்காரம் தன்னை ஒரு நாள் சுட்டெரித்து விடும் என்பது அறியாமல் நிறைய சீடர்கள் அதிகாரத்தில் ஆடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
பாவம்! அந்த சீடர்களுக்கு நல்ல குருமார்கள் கிடைக்க வேண்டும் என நாம் வேண்டிக் கொள்வோம்.