ஒரு ஊரில் வில்லியம் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் யாருக்குமே பயப்படாதவனாகவே இருந்தான், ஏனென்றால், அவன் தன் உருவத்திலும், உடலிலும் உள்ள பலத்தையேப் பெரிதாக நம்பி இருந்தான். அவனுடைய எண்ணமெல்லாம் தன்னுடைய பலத்திற்கு முன்பாக, எதுவுமே நிற்க முடியாது என்பதுதான். அதனால், எந்தவொரு செயலையும் தன்னால் மட்டுமேச் செய்ய முடியும் என்கிற ஒரு ஆணவத்துக்குள் இருந்தான்.
நாட்கள் சென்றன. அந்த ஊருக்கு ஒரு கர்த்தருடைய ஊழியக்காரர் ஊழியம் செய்வதற்கு வந்தார். அது மட்டுமல்லாமல் அவரிடம் இருந்த கர்த்தருடைய கிருபை, அவருக்கு அந்த ஊரில் மிகுந்த மரியாதைக்குரியவராக மாற்றியது, அது மட்டுமல்லாமல் அவரிடத்தில் பலரும் பயபக்திக்குரியவர்களாக மாறினர்.
அதைப் பார்த்த அந்த வில்லியம், தான் மற்றவர்களைப் பயமுறுத்தினால் மாத்திரமே, தன்னுடைய ஆயுதத்தைக் கண்டு பயப்படுகிறார்கள். மற்றபடி யாருமே தனக்கு முன்பாக உண்மையாகப் பயப்படுவதில்லை என்கிற ஒரு கோப உணர்வு அவனிடம் காணப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அந்த ஊழியக்காரரிடம் மோதும்படியாக கடந்து சென்றான். தேவையில்லாமல் அவரிடம் சென்று பிரச்சனைகள் உருவாக்கினான். ஆனால், அவர் ஒன்றுமேச் செய்யவில்லை. அதனால் அந்த வாலிபன் எரிச்சல் அடைந்து அவரை ஒரு சமயம் அடித்து விட்டான். அதற்கும் அவர் கோபப்படாமல் அமைதியாகச் சென்று விட்டார்.
அதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த அந்த வாலிபன், அடுத்து அவர் என்ன செய்யப்போகிறார்? என்பதைப் பார்க்க அவரைப் பின் தொடர்ந்து சென்றான்.
அவனுக்கு அவருடைய செயல்கள் ஆச்சரியமாக இருந்தது.
அந்த ஊழியக்காரர், தன்னை அடித்த அந்த வாலிபனுக்காக முழங்காலிட்டு அவன் மனம் திரும்பும்படியாக ஜெபித்துக் கொண்டிருந்தார்.
அத்தகைய காரியம் அந்த வாலிபனுக்கு கோழைத்தனமாக இருந்தது. ஆகவே மேலும் மேலும் அவன் அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான்.
ஆனால், அவருடைய ஜெப ஆயுதத்துக்கு முன்பாக, அந்த வாலிபனுடைய மாமிசம் ஆயுதம் எனும் உடல் பலம் விழுந்து போனது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், அவருடைய ஜெபம் அந்த வாலிபனைப் படுத்த படுக்கையாக்கி விட்டது. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை நாட்கள் செல்லச்செல்லப் பயம் ஏற்பட்டது.
ஆனால், அந்த ஊழியக்காரர் அவனைத் தேடிச் சென்று ஜெபிக்க ஆரம்பித்தார். அவருடைய ஜெபம் அந்த வாலிபனை மறுபடியும் பலத்தோடு எழுப்பியது. அதைப் பார்த்த அந்த வாலிபனுக்கு ஒன்று புரிந்தது. இந்த உலகத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட ஆயுதம் எல்லாம் வெட்டாத, அதாவது பற்கள் இல்லாத ஆயுதம் என்பதை புரிந்து கொண்டான். ஆகவே, அவன் ஒரு முடிவு எடுத்தான்.
அந்த ஊழியக்காரரிடம் சென்று, அந்த அழியாத, வெட்டுகிற ஆயுதத்தை பெற்றுக் கொள்வதற்கான ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டான்.
- கிறித்தவக் கதைகள்