நகிலா ஓர் அழகிய பெண். நகிலாவின் அழகில் மயங்கிய பவதேவன் அவளைத் தன் மனைவியாக்கிக் கொண்டான்.
நகிலாவின் அழகு பவதேவனை இந்த உலகையே மறக்கச் செய்தது. அவன் ஒவ்வொரு நாளும் நகிலாவைப் பல விதங்களில் அழகு செய்து ரசித்து வந்தான்.
வசந்தகாலம் வந்தது. புத்தம்புதிய மலர்கள் பூத்துக் குலுங்கின. எங்கும் மலர்கள் மலர்ந்திருந்தன. இந்த மலர்களைவிட நகிலாதான் அழகி என்று அவள் புகழையே பாடிக்கொண்டிருந்தான் பவதேவன்.
ஒரு நாள் வீட்டின் முன்புறக் கதவைத் தட்டிய ஒலி கேட்டது. நகிலாவை விட்டு எழுந்து செல்ல மனமில்லாமல், ஒருவாறு எழுந்து சென்று கதவைத் திறந்தான் பவதேவன். அங்கே துறவி ஒருவர் நிற்பதைக் கண்டான்.
அவர் பல வருஷங்களுக்கு முன்பு இல்வாழ்க்கையைத் துறந்து துறவறம் மேற்கொண்டவர். பவதேவனின் மூத்த சகோதரர்தாம் அவர். அவரது பெயர் நாகதத்தர்.
பவதேவனும் நாகதத்தரும் இளம் பிராயத்திலிருந்து ஒருவர் மீது ஒருவர் அளவிலா அன்பு பூண்டவர்கள்.
பல வருஷங்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட இருவரும் நீண்ட நேரம் உரையாடினர். எதற்கும் ஓர் எல்லை உண்டல்லவா? நாகதத்தர் தம் தம்பியிடம் விடைபெற்றுத் திரும்பத் தயாரானார்.
பவதேவன் நாகதத்தரின் உணவேற்கும் பாத்திரத்தை மரியாதை நிமித்தமாகத் தன் கையில் எடுத்துக் கொண்டான். சிறிது தூரம் தொடர்ந்து சென்று வழியனுப்பி வைக்க எண்ணினான் பவதேவன்.
நாகதத்தரும் உணவேற்கும் கலத்தை ‘என்னிடம் கொடு’ என்று கேட்கவுமில்லை; பவதேவனாலும் ‘இந்தாருங்கள் தங்கள் பாத்திரம்; நான் சென்று வருகிறேன்’ என்று சொல்ல முடியவில்லை.
இருப்பினும் நகிலாவின் மீதே அவனது எண்ணமெல்லாம் பதிந்திருந்தது.
தன்னை எதிர்பார்த்து நகிலா காத்திருப்பாள் என்பதும் பவதேவனுக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் என்ன செய்வது? நாகதத்தரிடம் சொல்லிக்கொண்டு வீட்டிற்குத் திரும்பவும் அவனால் முடியவில்லை; அத்தனை பாசம் நாகதத்தரிடம்.
இவ்வாறு ஒரு புறம் சகோதர பாசம்; மறு புறம் நகிலாவின் மீது ஆசை என்று பவதேவனின் மனம் தத்தளித்தது.
சகோதரர் இருவரும் காட்டை வந்தடைந்தனர்.
பவதேவன் நாகதத்தருடன் வந்ததைக் கண்ட பிற துறவியர், பவதேவன் துறவு ஏற்கவே வருகிறான் என்று நினைத்து மகிழ்ந்தனர்.
தலைமைத் துறவி பவதேவனுக்குத் துறவற தீட்சையை அருள நாளும் குறித்துவிட்டார்.
பவதேவனுக்கோ ஒன்றும் தோன்றவில்லை. ‘அண்ணனைத் தொடர்ந்து, துறவு மேற்கொள்ள இருக்கிறேன் என்று பிறர் கருதும் இந்தத் தருணத்தில் துறவை ஏற்க விருப்பமில்லை என்று எப்படிச் சொல்வது? ஐயோ! அண்ணன் நாகதத்தருக்கு எத்தனை இழுக்கு?’ பவதேவனால் இதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஆனால் அதே அளவிற்கு நகிலாவையும் அவனால் மறக்கவே முடியவில்லை.
நாகதத்தர் உயிர் வாழும்வரை அவருடன் இருந்து விட்டு, பின்பு வீட்டுக்குச் சென்றுவிடலாம் என்ற உறுதியுடன் பவதேவன் வேறு வழியின்றித் துறவை மேற்கொண்டான்.
எப்படியோ பன்னிரண்டு வருஷங்கள் ஓடிவிட்டன. நாகதத்தரின் இந்த உலக வாழ்க்கையும் முடிந்தது.
அன்றிரவே பிற துறவியர் யாருக்கும் தெரியாமல் துறவுப் பள்ளியினின்றும் நழுவித் தன் வீடு நோக்கி நடந்தான் பவதேவன். நெல்வயலையும் தோட்டங்களையும் கடந்து கடைசியில் கிராமத்தின் அருகில் வந்து சேர்ந்தான்.
இதற்குள்ளாகப் பொழுது புலர்ந்தது. அருகில் இருந்த மாந்தோப்பின் வழியாகத்தான் அவன் தன் வீட்டிற்குச் செல்ல வேண்டும். அப்போது மாந்தோப்பின் அருகே இருந்த இரண்டு பெண்களைக் கண்டான் பவதேவன். ஒரு கணம் ஏதோ யோசித்தான்.
ஒருவேனை பன்னிரு வருடங்களுக்கு முன்பு விட்டுச் சென்ற தன் வீடு அப்படியே இருக்குமோ அல்லது சிதைந்திருக்குமோ? நகிலா இங்கு இருப்பாளோ அல்லது இருக்கமாட்டாளோ? நகிலாவைப்பற்றி விசாரித்த பிறகே தன் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தான் பவதேவன். ‘ஒருவேளை நகிலா இல்லையென்றால் கிராமத்துக்குள்ளே செல்வதனால் பயன் என்ன? திரும்பவும் காட்டுக்கேச் சென்றுவிடலாம்’ என முடிவு செய்தான்.
இவ்விதம் சிந்தித்துக் கொண்டே கிணற்றருகே இருந்த இரு பெண்களில் ஒருத்தியிடம் நகிலாவைப் பற்றி விசாரித்தான். அவன் பவதேவனைக் கூர்ந்து நோக்கினாள். மறு விநாடி அவளது கண்களில் நீர் நிறைந்து வழிந்தது.
அவள், “என்னைத் தங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா?” என்றாள். அவள் வேறு யாருமில்லை, நகிலாவேதான்!
அதைக் கேட்ட பவதேவன், ‘நகிலா! நான்தான் உன் பவதேவன்!” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்ட நகிலா, “நான் உங்கள் நகிலாவா? என்று சொல்லிச் சிரித்தாள். துறவைக் கைக்கொண்ட பின்னரும் தன்னைப்பற்றியே நினைக்கும் அளவிற்குத் தன்னிடம் அரிதாக ஒன்றும் இல்லையே” எனச் சிந்தித்தாள்.
அன்பு குழைய, “நகிலா! நாம் நம் வீட்டற்குச் செல்வோமே!” என்றான் பவதேவன்.
“வீட்டிற்கா? நாம் இங்கே தங்கி வாழ இடமே இல்லையே” என்றாள் நகிலா.
“உண்மையிலேயே அங்கு இடமே இல்லையா?” என்று வியப்புடன் கேட்டான் பவதேவன்.
ஒளிவு மறைவின்றிப் பேச ஆரம்பித்தாள் நகிலா: “தாங்கள் கிடைப்பதற்கு மிகவும் அரிதான ஒப்பற்ற துறவு வாழ்க்கையை மேற்கொண்டிருக்கிறீர்கள். அத்தகைய துறவு நெறியினின்று தாங்கள் நழுவிக் கீழ்நிலைக்கு இறங்க நான் உதவுவேன் என்று எதிர்பார்க்கிறீர்களா? தங்களிடம் ஆழமான, உண்மையான அன்பு கொண்டவள் நான்!” என்றாள், அமைதியுடன்.
பவதேவன் நகிலாவின் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அவன் கண் முன்னால் நகிலா ஒரு சாதாரண மனித உருவமாகவேத் தெரியவில்லை. அவள் ஓர் அசாதாரணத் தெய்வத் தன்மை பொருந்தியவளாகவே அவனுக்குத் தோன்றினாள். எத்தனை புனிதமான அன்பு கொண்டவள் நகிலா! தூய்மையான அன்பு ஒருபுறம், கொடிய விஷம் போன்ற ஆசையோ மறுபுறம். தன்னுடைய அன்பில் என்றும் நிலைபேறான புகழைக் கொண்ட பவதேவனைத் தான் நகிலா கண்டாள்.
பவதேவன் நகிலாவின் அன்பின் ஆழத்தை, அதன் ஒப்பற்ற தூய்மையை உணர்ந்தான். தன் நிலையை எண்ணினான்.
பவதேவன் எந்தப் பேரின்பத்தில் திளைக்க வேண்டும் என்று நகிலா மனப்பூர்வமாக விரும்பினாளோ, அதற்காகவே அவன் அந்த இடத்தை விட்டகன்று, அதே வயல்வெளியைக் கடந்து திரும்பவும் காட்டை அடைந்தான், உண்மைத் துறவியாக.