இரவு நேரம். மலையோரத்தில் அழகான குடிசை வீடு. அந்த வீட்டில் விளக்கு சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதன் வெளிச்சம், வீடு முழுவதும் நிறைந்திருந்தது.
விளக்கைச் சுற்றி விட்டில் பூச்சிகளும் சிறு சிறு வண்டுகளும் பறந்து கொண்டிருந்தன. விளக்கு பிரகாசமாக சுடர் விட்டுக் கொண்டிருந்தது.
அப்போது அங்கு வந்த எலி, விளக்கைப் பார்த்து, "விளக்கே, நீ சுடர் விட்டு எரிவதால்தான் இந்த இடமே வெளிச்சமாக இருக்கிறது. இதற்கு யார் காரணம்?" என்று கேட்டது.
விளக்கு பக்கத்தில் இருந்த தீப்பெட்டி, "நான்தான் காரணம். நான்தான் இந்த விளக்கைப் பற்ற வைத்தேன். நான் இல்லாவிட்டால் ஏது இந்த வெளிச்சம்!" என்றது.
"இல்லை இல்லை... விளக்கு எரிய நான்தான் காரணம். ஏனென்றால் நான்தான் விளக்கெரிய எண்ணெய்யை இழுத்துக் கொடுக்கிறேன்." என்றது திரி.
இதை கவனித்த எண்ணெய் சொன்னது: "அதுஎப்படி?? நான் இருந்தால் தானே உங்களுக்கு வேலை. விளக்கு எரிய நான்தானே முக்கியம். எனவே விளக்கு எரிய நான்தான் காரணம்." என்று அதட்டலாகவே கூறியது.
"சும்மா பிதற்றாதீர்கள்... நீங்களெல்லாம் நிற்பதற்கு நான்தான் உதவுகிறேன். நான் இல்லாவிட்டால் எண்ணெய் வழிந்து விடும். அப்புறம் எப்படி விளக்கு எரியும்? உங்கள் எல்லோரையும் தாங்கி நிற்பது நான்தான். எனவே விளக்கு எரிய நான்தான் காரணம்" என்றது குடுவை.
இப்படி எல்லோருமே, விளக்கு எரிய 'நான்தான் காரணம்! நான்தான் காரணம்!' என்று சொல்ல, எலி குழப்பமடைந்தது.
இதையெல்லாம் மரத்தின் மீதிருந்து பார்த்துக் கொண்டிருந்த புறா, "எலியே, நீ நாளைக்கு காலையில் வா. விளக்கு எரிய யார் காரணம் என்று சொல்கிறேன்." என்றது.
மறுநாள் காலை, அந்த வீட்டுக்காரர் விளக்கை கழற்றித் துடைத்து வெயிலில் காய வைத்திருந்தார். தீப்பெட்டி, திரி, எண்ணெய், குடுவை யாவும் தனித்தனியாகக் கிடந்தன.
எலியும் புறாவும் வந்தன.
தனித்தனியாகக் கிடந்த தீப்பெட்டி, திரி, எண்ணெய், குடுவை இவற்றைப் பார்த்து புறா, "உங்களில் யாரால் தனியாக இப்பொழுது விளக்கை எரிய வைக்க முடியுமோ, அவங்க முன்னால் வரலாம்." எனச் சொன்னது.
நான்கு பேரும் திருதிருவென விழித்தனர்.
"நீங்கள் நான்கு பேரும் ஒற்றுமையாக இருந்தால்தான் விளக்கு எரியும். உங்களில் ஒருவர் இல்லையென்றால் கூட விளக்கு எரியாது." என்றது புறா.
உண்மைதான். குடும்ப வாழ்க்கையும் அப்படித்தான். ஒருவரையொருவர் சார்ந்திருப்பதுதான் குடும்பம். அதற்கு ஒவ்வொருவரின் பங்களிப்புமே முக்கியமானது. என்னுடைய பங்களிப்புதான் பெரியது, என்ற அகங்காரம் வந்துவிட்டால், அது எல்லோரையும் பாதிக்கும். அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, மகன், மகள், சகோதரன், சகோதரி என ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலிருக்கும் கடமைகளை இறுமாப்பில்லாமல் செய்தாலேப் போதும். குடும்பம் தழைக்கும், நிம்மதி கிடைக்கும். ஒருவருக்கொருவர் அனுசரித்து வாழ்வதே நிம்மதியான குடும்பம்.