கிருபாச்சாரியாரின் குருகுலத்தில் பாண்டவர்களும், கவுரவர்களும் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
பந்து ஒரு கிணற்றுக்குள் போய் விழுந்தது.
அப்போது அழுக்குத்துணி உடுத்தி மீசை, தாடியுடன் வந்த துரோணர், ''கிணற்றைச் சுற்றி ஏன் நின்று கொண்டிருக்கிறீர்கள்?'' என்றார்.
அவரது தோற்றம் துரியோதனனுக்கு அலட்சியத்தை ஏற்படுத்தியது.
''நான் எதற்கு நின்றால் என்ன?'' என்றான் அவன்.
ஆனால் அர்ஜுனன், ''சுவாமி... கிணற்றில் விழுந்த பந்தை எடுக்க வழி தெரியாமல் தவிக்கிறோம்'' என்றான் பணிவுடன்.
துரோணர் ஆர்வத்துடன் ''தம்பி உன் பெயர் என்ன?'' என்றார்.
''என் பெயர் அர்ஜுனன். குருகுலத்தில் படிக்கிறேன்'' என்றான்.
''நல்லது... நீருக்குள் விழுந்த பொருளை எடுக்கும் மந்திர வித்தையை இப்போதே உனக்குக் கற்றுத் தருகிறேன்'' என்று சொல்லி அங்கிருந்த புற்களைப் பறித்தார்.
அர்ஜுனன் காதில் மந்திரத்தை உபதேசம் செய்து புற்களை அவனிடம் கொடுத்து, ''அர்ஜுனா! மந்திரத்தை ஜெபித்தபடி ஒவ்வொரு புல்லாகக் கிணற்றுக்குள் வீசு'' என்றார்.
அந்தப் புற்கள் ஒன்றுக்கொன்று தைத்துக் கொண்டேப் போக, நீண்ட கயிறாக மாறியது.
அதன் உதவியுடன் பந்தை மேலே கொண்டு வந்தான் அர்ஜுனன்.
பின்னாளில் அவன் வில் வித்தையில் சிறக்க இந்த சம்பவம் அமைந்தது.