மரங்கள் அடர்ந்த ஒரு காடு இருந்தது. அந்தக் காட்டின் இடையே ஓர் ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஆற்றின் கரையில் ஒரு பெரிய அரசமரம் நின்றது.
ஆற்றிலிருந்து தொலைவில் நின்ற மரங்களுக்கெல்லாம், மழை பெய்யும்போதுதான் ஏராளமான தண்ணிர் கிடைக்கும். மற்றக் காலங்களில் அவை தரையில் மிக ஆழத்திற்குத் தங்கள் வேரை நீட்டி அங்குள்ள ஈரத்தைத்தான் இழுத்துக் கொள்ள வேண்டும்.
ஆற்றங்கரையில் இருந்த அரசமரத்திற்கோ ஆண்டு முழுவதும் தண்ணிருக்குக் குறைவில்லை. வண்டல் கலந்து வந்த தண்ணிரின் உரம் அரச மரத்திற்கு நல்ல வலிவும் பொலிவும் கொடுத்தது. அரச மரம் அகன்று பெருத்து வானுறவோங்கித் தலைநிமிர்ந்து பூரிப்போடு நின்றது.
அரச மரம் மற்ற மரங்களைப் பார்த்து, “நான் உங்களுக்கெல்லாம் தலைவன்!" என்று கூறியது.
மற்ற மரங்கள் பேசாதிருந்தன. ஆற்றின் வளத்தால் அதிக நலம் பெற்ற அரச மரம் அகங்காரத்தோடு பேசுவதை அவற்றால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏற்றுக் கொள்ளாமலும் இருக்க முடியவில்லை. ஆகவேதான் அவை பேசாமல் நின்றன.
ஒரு நாள் எங்கோ தொலைவில் உள்ள ஒரு மலையில் மழை பொழிந்தது. தொடர்ந்து பெரு மழை பெய்தபடியால் ஆறு பெருக்கெடுத்தது. வெள்ளம் பெருகி ஓடிவரும் ஆறு, தன் வேகத்தால் வழி நெடுகிலும் கரையை அரித்துக் கொண்டு வந்தது.
அரசமரம் இருந்த இடமும் அரிப்பெடுத்துக் கரைந்துவிட்டது. மண் கரையக் கரைய அரச மரம் வேரூன்றி நிற்க முடியவில்லை. அப்படியே ஆற்றுக்குள் சாய்ந்தது. வெள்ளம் அரசமரத்தையும் அடித்துக் கொண்டு சென்றுவிட்டது.
“ஆற்றங்கரை வாழ்வு அவ்வளவுதான்!” என்று சொல்லி மற்ற மரங்கள் அரச மரத்திற்காகப் பரிதாபப்பட்டன.