மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரர் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர் பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்க மாட்டார்.
ஒரு முறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கும் வரும் போது தனது பணப்பையைத் தொலைத்து விட்டார்.
வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப்பையை தேடிப் பார்த்து அது கிடைக்காமல் புலம்பினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டுப் பார்த்தும் கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். அப்போது அவரது மனைவியார் “உங்க பணப்பையைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்கள்... யாராவது கொண்டு வந்து கொடுப்பார்கள்" என்றார்.
அவரும் மனைவியின் சொற்படி அவர் பணப்பையைக் கொண்டு வந்து கொடுப்பவர்க்குப் பரிசு என்று அறிவித்தார். ஊர் மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து பரிசு பெறலாம் என்று நினைத்தார்கள். அவர்களும் தேடிப் பார்த்தனர். யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.
இந்த சம்பவம் நடந்து சில நாட்களுக்குப் பின்பு அருகிலிருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இருந்தாலும் மரியாதையுடன் வாழ வேண்டுமென்று விருப்பப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவும் எண்ணமுடையவர். அவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்ய முடியவில்லை, வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது ஒரு வேலை செய்து, சம்பாதித்து, பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப்பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்குப் போய் வேண்டிக் கொண்டார்.
அப்படி காட்டுவழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிபட்டுக் கீழே கிடந்தது, அதைப் பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்தப் புறாவைத் தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்குக் கொண்டு சென்று தண்ணீரை எடுத்து, அந்தப் புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர் அந்தப் புறாவை அருகில் இருந்த மரக்கிளையில் வைத்து விட்டு வந்தார். அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை. அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டுவிட்டுப் போயிட்டாங்க, அதைத் தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்துக் கொடுத்து விட வேண்டும் என்று அந்த ஊருக்குள் விரைந்தார்.
அப்போது ஊருக்குள் சென்ற போது அங்கிருந்த சிலரிடம் விசாரித்தார். இந்தப்பணப்பை சோமனுடையது என்றும் அதைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து கொடுப்பவர்களுக்குப் பரிசு கொடுப்பதாக அறிவித்திருப்பதாகவும் சொன்னார்கள்.
பூபாலனும் அவர்கள் சொன்ன சோமன் வீட்டைத் தேடிப் பிடித்துச் சென்று தனக்குப் பணப்பை கிடைத்த விபரத்தைச் சொன்னார், சோமனும் மகிழ்ச்சியுடன் அந்த பணப்பையை வாங்கிக் கொண்டார், அந்த நேரம் அவருடைய மனதில் ஒரு கெட்ட எண்ணமும் உருவானது. நமக்குத்தான் பணப்பை கிடைத்து விட்டது, பணமும் சரியாக இருக்கிறது, இவனுக்குப் பரிசு கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார்.
கெட்ட எண்ணம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து “நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை, அதை மரியாதையாகக் கொடுத்து விடு, நான் உன்னைச் சும்மா விடமாட்டேன்” என்று கத்தினார்.
பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் அந்தப் பணப்பையில் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே, இவரிடம் பரிசு வாங்குவதை விட இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார்.
சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார், பூபாலன் பணப்பை கொண்டு வந்த செய்தியைச் சொன்ன அந்த ஊர்க்காரகளில் சிலர், சோமன் பணப்பை கொண்டு வந்தவருக்கு என்ன பரிசு கொடுக்கப் போகிறார் என்று அறியும் ஆவலுடன் மேலும் சிலரை அழைத்து வந்தனர். அங்கு பூபாலன் குற்றவாளி போல் நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சனையை மரியாதை ராமனிடம் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள்.
சோமன், பூபாலன், ஊர் மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும், பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள்.
ஏற்கனவே சோமன் அறிவித்த அறிவிப்பு பற்றி மரியாதை ராமனுக்குத் தெரியும், அந்த அறிவிப்பில் வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான். சோமன் பரிசு கொடுக்காமல் ஏமாற்ற நினைப்பதையும் தெரிந்து கொண்ட மரியாதை ராமன், சோமனுக்குச் சரியான தண்டனை கொடுக்க நினைத்து தனது தீர்ப்பைக் கூறினார்.
“சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போது பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது, ஆக இது சோமனின் பையே இல்லை, வேறு யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊர் வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன் கோயில் செலவுக்குக் கொடுத்து விட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக் கொள்ளலாம், ஆக பூபாலன் அந்தப் பணத்தை தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக் கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையைக் கண்டுபிடித்தவுடன் சோமனே பரிசு கொடுப்பார்”
மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும், சோமன் காணாமல் போன பணம் கிடைத்தும் பரிசு கொடுக்காமல் தான் ஏமாற்ற நினைத்ததற்கு சரியான தண்டனை கிடைத்தது என்று எண்ணிக் கொண்டு வருத்தத்துடன் பணப்பையை பூபாலனிடம் கொடுத்து விட்டு வீட்டுக்குட் சென்றான். பூபாலன் தனக்குக் கிடைத்த பணத்தில் 10 பங்குத் தொகையை அம்மன் கோயிலுக்குக் கொடுத்து விட்டு, மீதிப்பணத்தை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்தார்.