குரு மரணப் படுக்கையில் இருந்தார். அருகில் அவரின் சீடன் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டான்.
குரு மெல்ல அவனை அழைத்து, ''சீடனே. ஏன் கவலைப்படுகிறாய்? உன்னிடம் நான் எப்பொழுதும் இருப்பேன். கலக்கம் அடையாதே...!''
கலங்கிய கண்களுடன் சீடன் கூறினான், ''குருதேவா... நீங்கள் கூறியபடி ஜபம், தியானம் எல்லாம் செய்து வருகிறேன். ஆனால், ஆன்மிக உயர்நிலை அடையும் காலம் எப்பொழுது எனத் தெரியவில்லை. எதுவரை எனது ஆன்மிகப் பயிற்சியைத் தொடர்வது? உங்கள் காலத்திற்குப் பிறகு யாரிடம் நான் கேட்பது?''
அணையும் ஜோதி பிரகாசகமாக சுடர்விடும் என்பதை போல ஜோதிர்மயமான முகத்துடன் சிஷ்யனைப் பார்த்தார் குரு, ''கவலை கொள்ளாதே. இந்தக் கட்டிலுக்கு அடியில் ஒரு பெட்டி இருக்கிறது. அதன் உள்ளே உனக்குப் பிற்காலத்தில் உபதேசிக்க வேண்டியதை வைத்திருக்கிறேன்... அது அனைத்து விஷயங்களையும் போதிக்கும். எனது உபதேசம் தேவைப்படும் பொழுது மட்டும் பெட்டியைத் திறந்து பார். எனது ஆசிகள்...'' எனக் கூறியபடி அவரின் பிராணன் உள்ளே அடங்கியது.
நாட்கள் சென்றன. தனது ஆன்மிக சாதனையில் தனக்குப் பலன் கிடைப்பதாகச் சீடனுக்குத் தெரியவில்லை. தியானம், ஜபம் ஆகியவற்றை விட்டுவிடலாமா? என எண்ணினான்.
குருவின் உபதேசத்தைக் கேட்கப் பெட்டியைத் திறந்தான். சீடன் ஞானம் அடைந்தான்.
நாட்கள் சென்றன.
சீடன் கூறிய கருத்துகளை ஏற்காமல் மற்றவர்கள் கலகம் செய்தனர்.
மீண்டும் குருவின் உபதேசத்தைக் கேட்கப் பெட்டியைத் திறந்தான்.
அதற்குப் பின் மற்றவர்கள் அவனது கருத்துகளை ஏற்றுக் கொண்டனர்...
நாட்கள் சென்றன.
தனது இறுதிக் காலத்தை அடைந்தான் அந்தச் சீடன்.
பிறகு குருவான அவன், தனது சீடனைக் கூப்பிட்டுக் கூறினான், ''எனது பிரிய சீடனே, எனது குரு எனக்கு அளித்த உபதேசத்தை உனக்கு அளிக்கிறேன். எனது உபதேசம் தேவையான பொழுது மட்டும் இந்தப் பெட்டியைத் திற. எனது உபதேசம் கிட்டும்.''
சீடனின் சீடனான பரம சீடனின் ஆன்மிகச் சாதனையில் தொய்வு ஏற்பட்டது.
குருவின் உபதேசம் அறிய பெட்டியைத் திறந்தான்.
அதில் எழுதி இருந்த வாசகம்... எது?
'இன்னொரு முறை முயற்சி செய்.'
சீடனுக்கு மட்டுமல்ல, நமக்கும் பல வேளைகளில் இந்த உபதேசம் உதவும்.