துவாரகையில் புகழ் பெற்ற ஓவியன் ஒருவன் இருந்தான்.
அவன் ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணரிடம் சென்று, ''சுவாமி! தங்கள் திருவுருவத்தை நான் ஓவியமாக வரையப் போகிறேன்'' என்றான்.
அதற்கு ஸ்ரீகிருஷ்ணரும், ‘’சரி’’ என்று கூறி ஒப்புதல் தெரிவித்தார்.
''இன்னும் ஒரு வாரத்தில் இந்தப் படம் முழுமையடைந்து உங்கள் கையில் கிடைத்து விடும்'' என்று ஓவியன் சொல்லி விட்டுச் சென்றான்.
சரியாக ஒரு வாரம் கழிந்தது. ஓவியன் சொன்னபடியேப் படத்தை எடுத்துக் கொண்டு வந்தான்.
அனைவரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்த போது, கண்ணனிடம் அந்தப் படத்தைக் காண்பிப்பதற்காக, அதன் மேல் மூடியிருந்த துணியை ஓவியன் அகற்றினான். அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஏனென்றால், அந்தப் படம் கண்ணனது உருவம் போலவே இல்லை.
ஓவியன் மீண்டும் மீண்டும் அதேப் படத்தை வரைந்தான். மீண்டும் மீண்டும் அது போலவே நடந்தது.
அதனால் ஓவியன் பயந்து போய் ஊரைவிட்டே ஓடிப் போனான்.
வழியில் அவன் நாரதரைப் பார்த்தான்.
அவரிடம் அவன் விஷயத்தைச் சொன்னான்,
நாரதர் புன்சிரிப்பு தவழ ஓவியனிடம், ''அசடே! சுவாமிக்கு என்று தனியாக ஓர் உருவம் கிடையாது. எல்லா வடிவங்களும் அவருடைய வடிவங்கள்தான். இங்கே வா... உனக்குக் காதோடு காதாக ஒரு ரகசியம் சொல்கிறேன். அதன்படி செய். எல்லாம் சரியாகிவிடும். பிறகு வெற்றி உனக்குத்தான்!'' என்று சொல்லி நாரதர் ஓவியன் காதில் ஏதோ ரகசியமாகக் கூறினார்.
நாரதர் சொன்னதைக் கேட்டதும் ஓவியனின் முகம் மலர்ந்தது.
உடனே அவன் கண்ணனிடம் ஓடினான்.
இந்த முறை ஓவியன் எதையோத் துணியினால் மூடி மறைத்துக் கொண்டு வந்திருந்தான்.
ஸ்ரீகிருஷ்ணரைப் பார்த்து அவன், ''சுவாமி! நீங்கள் இந்தத் தடவை எப்படி உருமாறினாலும், படம் உங்களைப் போலவே இருக்கும் பாருங்கள்!'' என்று சொல்லித் தன்னிடம் இருந்த பொருளைத் திறந்து காட்டினான்.
அது ஒரு நிலைக்கண்ணாடி.
அதில் ஸ்ரீகிருஷ்ணரின் முகம் அப்படியே தெரிந்தது!
உங்கள் மனதையும் நீங்கள் கண்ணாடியைப் போல் சுத்தமாக வைத்திருங்கள். தூய அன்பினாலும், தூயபக்தியினாலும் அதை எப்போதும் தூய்மையாக வைத்திருங்கள்; அதில் இறைவனின் வடிவம் அப்படியேத் தெரியும்.