கடமையை உணர்த்தி விடு
வாலிக்கும் சுக்ரீவனுக்கும் இடையே நடந்த போரின் போது ராமனின் பாணத்தால் வாலி கீழே சாய்ந்தான். தான் செய்தது அதர்மமானதுதான் என்று சொல்லி வருந்தி நின்றான் ராமன்.
அப்போது வாலி, “என் தம்பி சுக்ரீவன் நல்லவன் ஆனாலும் சலனப் புத்திக்காரன். ராவணன் கவர்ந்து சென்ற உன்னுடைய சீதையை மீட்பதற்கு உனக்கு உதவுவான் என்பதற்காக சுக்ரீவனுடைய எதிரியான என்னை வீழ்த்தினாய்.
சரி, இனி மாரிக்காலம் துவங்கப் போகிறது. தேடுதல் என்பது இயலாது இந்தக் காலத்தில் ஆண் சிங்கம் இரையேதும் தேடிப் போகாமல் குகைக்குள் பெண் சிங்கத்திடம் முடங்கிக் கிடக்கிறதோ அதே போல் சுக்ரீவனும் தன் விருப்பப் பெண்களுடன் காலம் கழிப்பான்.
ஆனால், மாரிக்காலம் முடிந்ததும் மயக்கம் தீராமல் உனக்கு வாக்களித்தபடி சீதையைத் தேடுவதைத் தொடராமல் கிறங்கிக் கிடப்பான். அப்போது அவன் மீது கோபம் கொண்டு அவனைக் கொன்று விடாதே... கடமையை அவனுக்கு உணர்த்தினால் போதும். உணர்ந்து கொள்வான்.” என்றான்.
அண்ணனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சுக்ரீவன் அப்படியே அவன் காலடியில் வீழ்ந்து தன் தவறை உணர்ந்து அழுதான்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.