'தன் மனைவிக்குக் காது சரியாகக் கேட்கவில்லையோ' என சந்தேகம் ஒருவருக்கு!
ஆனால் அதை மனைவியிடம் நேரடியாகக் கேட்கத் தயக்கம்! தயக்கம் என்ன, பயம்தான்!
இந்த விஷயத்தை அவரின் குடும்ப டாக்டரிடம் சொன்னார். அதற்கு அவர் ஓர் எளிய யோசனை சொன்னார்.
"இருபதடி தூரத்தில் இருந்து உங்கள் மனைவியிடம் ஏதாவது கேட்டுப் பாருங்கள். அவரிடமிருந்து பதிலில்லை எனில், சற்று நெருங்கி பதினைந்து அடி தூரத்தில் இருந்து சொல்லிப் பாருங்கள், பின் பத்து, ஐந்து இப்படி குறைத்துக் கொண்டே நெருங்கிச் சென்று பேசுங்கள்!
''எத்தனை அடி தூரத்தில் இருந்து பேசினால் அவர்களுக்கு காது கேட்கவில்லை எனத் தெரிந்தால் அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்கலாம்” என டாக்டர் சொன்னார். கணவனுக்கு ஒரே குஷி.
உற்சாகமாக வீடு திரும்பிய அவர் வீட்டு வாசலில் இருந்தபடியே உள்ளிருந்த மனைவியிடம், "இன்று என்ன சமையல்?” எனக் கேட்டார்.
பதிலில்லை!
அடுத்து வீட்டு வரவேற்பறையில் இருந்து அதே கேள்வியைக் கேட்டார்.
அதற்கும் பதிலில்லை!
ஹாலில் இருந்து கேட்டார்! சமையலறை வாசலில் இருந்தும் மீண்டும் மீண்டும் கேட்டார்! மனைவியிடமிருந்து பதிலே இல்லை!
'போச்சு, ரெண்டு காதுகளும் கேட்கவில்லை என உறுதி செய்து விட்டார்.
கடைசி வாய்ப்பாக மனைவியின் காதருகே சென்று, சத்தமாக, ''இன்றைக்கு என்ன சமையல்?'' எனக் கேட்டார்.
காதில் ஏதோ குண்டு வெடித்தது போல் இருக்கவே அவர் மனைவி அவரைக் கோபமாக திரும்பிப் பார்த்து, ''ஏன் இப்படிக் கத்துறீங்க? நீங்களும் வாசல் கேட்டிலிருந்து, ஹாலில் இருந்து, சமைலறை வாசலில் இருந்து கேட்க, கேட்க நானும் 'சாம்பார், உருளைக்கிழங்கு மசியல்' ன்னு சொல்லிக்கிட்டேயிருந்தேனே, காதில விழலயா? காதுல என்ன ஈயத்தையா காச்சி ஊத்திருக்கு?” என பெரும் சத்தத்துடன் பொரிந்து தள்ளி விட்டார்!
இப்போது தெரிகிறதா! பிரச்சினை யார் காதில் என்பது...?