மன்னர் கிருஷ்ண தேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம். மக்கள் தங்கள் பிறந்த நாள் போல, மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.
முதல்நாள் இரவே வீதிகள் தோறும் கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த தூதுவர்களுக்கு விருந்து என மிகப் பிரமாண்டமாய் இருந்தது.
மறுநாள் அரச சபையில் அரசருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வுகள் நடந்தன.
முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர்.
பிறகு அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர்.
அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தான். அரசர் உள்பட எல்லாரும் வியப்போடு பார்த்தனர்.
மற்றவர்களிடம் பரிசுகளை வாங்கித் தன் அருகே வைத்த மன்னர், தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்க்க ஆவலாக இருந்தனர்.
மன்னருக்கும் தெனாலிராமன் கொண்டு வந்த பரிசைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் ஏற்பட்டது.
அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.
தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.
அதனால் எல்லாரும் ஆவலுடன் அதைக் கவனித்தனர்.
கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான்.
அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்று மட்டும் இருந்தது.
அவையிலிருந்த அனைவரும் அதைக் கண்டு, தெனாலிராமனைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தனர்.
அரசர் கையமர்த்திச் சிரிப்பு அடங்கியவுடன், "தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவன் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா?” என்றபடி தெனாலிராமனைப் பார்த்து,
"ராமா இந்த சிறிய பொருளை எனக்கு பரிசாக அளிக்க விரும்பியதன் காரணம் என்ன?” எனக் கேட்டார்.
"அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும். அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும் போல இருங்கள்” என்றான்.
அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
மன்னர் தன் ஆசனத்தைவிட்டு எழுந்து வந்து தெனாலிராமனைத் தழுவிக் கொண்டு, "ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை. பொக்கிஷப் பணமும், பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது.” என உத்தரவிட்டார்.
தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் அனைவரும் பாராட்டினர்.
அரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றைத் எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்.