நள்ளிரவு, அந்தச் சிறிய குடிசையில் ஒரு விளக்கெண்ணெய் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது.
அந்த விளக்கொளியில் ஒரு முதியவர் ஏதோ சுவடியும் கையுமாகக் காணப்படுகிறார். அந்தச் சுவடியைச் சிறிது நேரம் ஊன்றிப் படிக்கிறார். பிறகு கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்கிறார். பிறகு கண்களைத் திறக்கிறார். சுவடியைக் கீழே வைக்கிறார், பக்கத்தில் நிறையக் குவித்து வைக்கப்பட்டிருக்கும் ஓலைகளில் ஒன்றை எடுத்து ஏதோ எழுத ஆரம்பிக்கிறார்.
சுவடியைப் படிப்பதும், கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்வதும், பிறகு ஏட்டில் ஏதோ எழுதுவதுமான வேலை தொடர்ந்து நடந்து கொண்டே செல்கிறது. விளக்கில் உள்ள எண்ணெயும் குறைந்து கொண்டே வருகிறது.
அந்த வேளையில் ஒரு புதிய பெண்மணி அங்கே தோன்றுகிறாள். அவள் விளக்கில் எண்ணெய் ஊற்றித் திரியைத் தூண்டுகிறாள். அப்பொழுது விளக்கு சட்டென்று அணைகிறது. அது காரணமாக எழுத்து வேலையில் ஈடுபட்டிருந்த பண்டித சிரோமணி வாசஸ்பதி மிச்ரரின் வேலை தடைப்படுகிறது.
தவறு நேர்ந்துவிட்டதை உணர்ந்த அந்த அம்மாள், விளக்கை மீண்டும் ஏற்றிவிட்டு அப்பால் செல்ல ஆரம்பிக்கிறாள். உடனே பண்டித சிரோமணி அந்த அம்மாளைத் தடுத்து நிறுத்துகிறார்.
“அம்மா, தாங்கள் யார்?'' என்று கேட்கிறார். அந்த அம்மாள் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல், “தாங்கள் தங்கள் வேலையைத் தொடர்ந்து கவனியுங்கள். விளக்கு அணைந்ததில் தங்கள் வேலை தடைப்பட்டுவிட்டது. தயவுசெய்து என்னை மன்னிக்க வேண்டும்” என்கிறாள்.
ஆனால் பண்டித சிரோமணி அவளை விடுவதாயில்லை. “தாங்கள் யார் என்று சொன்னால்தான் நான் மேற்கொண்டு எழுதுவேன்" என்று சொல்லி, எழுதுகோலையும் ஓலைகளையும் கீழே வைத்தார்.
“சுவாமி, நான் உங்கள் மனைவி. தயவுசெய்து என்னை நீங்கள், நீங்கள் என்று கூப்பிட்டு எனக்குப் பாவம் ஏற்படும்படி செய்யாதீர்கள்'' என்றாள்.
"நீ மனைவியா? அப்படியானால் நமக்கு எப்பொழுது திருமணம் ஆயிற்று?"
"ஐம்பது வருடங்களுக்கு முன்னர்!"
“ஐம்பது வருடங்களாக நீ என் மனைவியாக இருந்துமா நான் உன்னைத் தெரிந்து கொள்ளவில்லை!''
"திருமணத்தன்றே தாங்கள் என்னை உங்கள் வலக் கையினால் பிடித்தபோது, இடக்கையில் இந்த ஓலைச் சுவடியை வைத்துக் கொண்டிருந்தீர்கள். இந்த ஐம்பது ஆண்டுகளாக இந்த ஓலைச் சுவடியைப் படிப்பதும், பிறகு படித்ததைப் பற்றிச் சிந்தனை செய்வதும், பிறகு அதை ஓலைகளில் எழுதுவதுமாகத்தான் இருக்கிறீர்கள்"
“இருந்தாலும் நான் உன் கணவன் என்னும் விஷயத்தை இந்த ஐம்பது வருடங்களாக நீ ஏன் எனக்கு நினைவுபடுத்தாமல் இருந்து விட்டாய்?''
"நான் எப்படி நினைவுபடுத்துவது? நீங்களோ உங்கள் வேலையைத் தவிர வேறு எதிலும் சிந்தனை செய்யாமல் இருக்கிறீர்கள்!"
“இருந்தும் ஐம்பது வருடங்களாக நான் உன்னைப் பார்க்கவே இல்லையா? பார்த்தும் இன்று கேட்டது போல, ‘நீயார்?' என்று ஏன் முன்னமே கேட்கவில்லையா?"
“வெறும் கண்களால் மட்டும் பார்த்தால் போதுமா? மனதும் அதில் ஒன்றியிருந்தால், யாரைப் பார்க்கிறோம் என்பது விளங்கும்''
"இந்த ஐம்பது வருடங்களையும் நீ எப்படித்தான் கழித்தாய்?"
“உங்களைக் கவனித்துக் கொள்வது, உங்கள் ஆகாரத்திற்கு ஏற்பாடு செய்வது, உங்கள் ஓலைகளைச் சீர்செய்து பக்கத்தில் வைப்பது, விளக்கு அணையாதபடி பார்த்துக் கொள்வது, இப்படிப் பல வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன். இன்றுதான் விளக்கு அணைந்து விட்டது. தாங்களும் என்னைக் கவனித்து விட்டீர்கள்"
“ஆமாம், நம் சாப்பாட்டுக்கு வழி?" “அக்கம்பக்கம் பெண்களுக்கு நான் பாட்டுச் சொல்லிக் கொடுக்கிறேன். அவரவர் தங்கள் தங்கள் வீடுகளிலிருந்து உணவுத் தானியங்கள் கொண்டு வந்து தருவார்கள். அதைக் கொண்டு தங்கள் உணவைத் தயாரிப்பேன்''
"ஐம்பது வருடங்களாகத் தாங்கள் எனக்கு இத்தனை உதவி செய்திருக்கிறீர்கள் என்பதை நான் அறியாமல் இருந்து விட்டேனே! தயவுசெய்து தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஆமாம், தங்கள் பெயர் என்ன, அம்மா?"
“பாமதி!''
“தங்கள் கணவனாக இருந்தும் தங்களைப் போஷிக்காமல் விட்டதற்கு என்னை மன்னித்து விடுங்கள்'' என்று கூறிப் பண்டித சிரோமணி தம் மனைவியின் காலில் விழப்போனார்.
அந்த உத்தமி பாமதி அவரைத் தடுத்து நிறுத்தினாள்,
“சுவாமி! தயவுசெய்து என் காலில் விழுந்து எனக்குப் பாவம் சேரச் செய்யாதீர்கள். என்னை மறந்ததனால்தானே பலருக்குப் பயன்படும்படியான ஓர் அரிய நூலைத் தாங்கள் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்? அந்த நல்ல காரியத்திற்கு இடைஞ்சல் ஏற்படாமல் என்னால் தங்களுக்குப் பணிவிடை செய்ய முடிந்ததே என்று நான் எவ்வளவோ மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆகவே முன்னைப் போலத் தாங்கள் என்னை மறந்து உங்கள் வேலையில் ஈடுபடுங்கள்'' என்றாள் பாமதி.
பாமதியின் நல்ல குணத்தைக் கண்ட பண்டித சிரோமணி ஆச்சரியப்பட்டார்.
“பாமதி! எத்தனையோ வருட தவப்பயனாக வியாசர் இயற்றிய வேதாந்த தரிசனம் என்னும் நூலுக்கு உரை எழுதத்தான் நான் என் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்து விட்டேன். ஆனால் நீ மட்டும் இத்தனை சிரத்தையுடன் என்னைக் கவனித்திராவிட்டால் இந்த நூல் முற்றுப் பெற்றிராது. ஆகவே இந்த நூலுக்கு, பாமதி என்னும் உன் பெயரைத்தான் வைக்கப் போகிறேன்'' என்றார். ஒருமுனைப் பாட்டின் சிகரமான பண்டித சிரோமணி வாசஸ்பதிமிச்ரர் அவர்கள்.