அரண்மனை பூமிக்குள் புதைந்து விட்டதாகவும், அரண்மனையிலே நிறையத் தங்கக் காசுகளும் மிக விலையுயர்ந்த பொருள்களும் இருந்ததாகவும் செய்தி ஒன்று உலவி வந்தது. பின்னர் அந்த இடம் மேடாகப் போய்விட்டதாகையால், அந்த இடத்திற்கு 'அரண்மனை மேடு' என்ற பெயர் வழங்கலாயிற்று. அது காலியிடம் ஆகவும், ஒருவரும் பயன்படுத்தாது பாழடைந்து விட்டதாகவும், பலரும் சொல்லுவர்.
அதற்குச் சிறிது தூரத்தில் ஓர் அம்மன் கோவில் இருந்தது. அந்த அம்மன் கோயிலில் பெரியோர்கள் தங்குவது வழக்கம்.
பக்கத்தில் உள்ள ஓர் ஊரிலே ஓர் ஏழையான மனிதர் அரண்மனை மேட்டைப் பற்றிய வதந்தியைக் கேட்டறிந்தவர். அந்த மேட்டில் கீழேயுள்ள தங்கத்தைப் பெற்றால் தமது வறுமை நீங்கும் என்ற ஆசை அவர்க்கு எழுந்தது.
அந்தத் தங்கத்தைப் பெறத் தெய்வத்தின் கிருபையாலன்றி வேறு வழியிற் பெற இயலாது என்று சிந்தித்து, பக்கத்திலுள்ள அம்மன் கோயில் தெய்வத்தைத் தினமும் வழிபட்டு வந்தார். அங்கே தங்குவோரில் உண்மையான சாது ஒருவர் தமக்குத் தேவி மந்திரம் உபதேசித்து ஜபம் செய்யும் வகையையும் கூறுவாராயின், தாம் அதை ஜெபித்து அங்குள்ள அம்மனின் அருளைப் பெற்றால், தங்கத்தைப் பெறலாம் என்று பலநாள் பகற்கனவு கண்டு கொண்டிருந்தார்.
நெஞ்சுருகிப் பண்ணும் பிரார்த்தனைக்குக் கடவுள் செவி சாய்ப்பார் என்பது உண்மையன்றோ? ஒரு நாள் சாது ஒருவர் அந்த அடியாரைப் பார்த்து, 'உனக்கு அம்பாள் மந்திரம் சொல்லுவேன், நீ ஒழுங்காக ஜபிப்பாயா?' என்று கேட்டார்.
அடியார் மனமகிழ்ந்து, சாதுவிடமிருந்து மந்திரோபதேசம் பெற்றார். காலையும் மாலையும் அக்கோயிலுக்கு வந்து, அது ஏகாந்தமான இடமாதலின், மணிக்கணக்காக ஜெபம் செய்யத் தொடங்கினார். மாதக் கணக்காக, ஆண்டுக் கணக்காக மந்திரத்தை ஜெபித்து வந்தார்.
ஒரு நாள் அந்த அடியாரது கனவில் அம்பாள் தோன்றி, “உனது முயற்சியைக் கண்டு மகிழ்ந்தேன்; நீ வரும் வெள்ளிக்கிழமையன்று இரவு 8 மணிக்குக் கோயிலுக்குப் பக்கத்துள்ள மரத்தடியில் நின்று கொண்டிரு. நான் ஒரு சிறுமி வடிவத்தில் தோன்றிப் புதையலைக் காட்டி, அதை எடுக்க உதவி செய்வேன்" என்று கூறினாள். அக்கனவு நனவு போலிருந்தது; கூறியபடியே செய்வதாக உறுதி பூண்டார்.
குறிப்பிட்ட நாளன்று இரவில் ஏழு மணிக்கே அம்மரத்தடியில் அமர்ந்து, விழித்துக் கொண்டே ஜெபித்தும், பிரார்த்தித்தும் வந்தார். எட்டு மணிக்கு ஒரு சிறுமி மரத்தடிக்கு வந்து, அடியாரைத் தன்னுடன் வருமாறு அழைத்தாள்.
அச்சிறுமியைத் தொடர்ந்து அடியார் செல்ல, சிறுமி அரண்மனை மேட்டின் மேல் ஓரிடத்தில் நின்றாள். அடியார் வந்ததும் சிறுமி ஒரு கதவைத் திறக்க, பூமிக்குள் இருக்கும் ஓரறையும் அதற்குச் செல்ல ஓர் ஏணியும், அறைக்குள் பிரகாசமாக எரியும் விளக்கும், தங்கக் காசுகள் நிறைந்த ஒரு பெரிய பாத்திரமும் தென்பட்டன. சிறுமி அடியாரை ஏணி வழியாக இறங்கி, வேண்டிய மட்டும் தங்கக் காசுகளை எடுத்து அங்கிருந்த ஒரு சிறு பெட்டியில் வைத்து அதைத் தூக்கிக் கொண்டு ஏணியின் மீது ஏறி வெளியே வரும்படி சொன்னாள்.
உள்ளம் பூரித்த அடியார் அப்பெட்டி நிறையக் காசுகளை வைத்து; அதைத் தூக்கிக் கொண்டு மேலேற முயன்றார். மிகக் கனமாயிருப்பதாக அடியார் கூற, சில காசுகளைக் கீழே எறிந்து விட்டு ஒவ்வொரு படியாக மெல்ல ஏறி வரச் சொன்னாள். ஒரு படி ஏறினதும், "அம்மா, சுமை கனமாயிருக்கிறதே, தூக்க முடியவில்லையே" என்று அடியார் முறையிட, “இன்னும் சில காசுகளை எறிந்து விட்டு, தூக்கக் கூடியதை மட்டும் மேலே எடுத்து வா" என்றாள் சிறுமி.
சில காசுகளை எறிந்துவிட்டு மீதியைத் தூக்கிக் கொண்டு மேலேற, கனம் பின்னும் அதிகமாயிருக்க, ஒவ்வோர் படியிலும் சில காசுகளை எறிந்து விட்டு, மேலேறினார். இரண்டே படிகள் மட்டும் ஏறவேண்டியிருந்தன; அப்போது இரண்டே காசுகள் இருந்தன.
ஒரு படி ஏறியதும் ஒரு காசை எறிந்தார்; அப்போதும் கனம் அதிகமாயிருந்தது. கடைசிப் படியில் நின்றபோது ஒரு காசு மட்டும் இருந்தது, அதுவும் தூக்க இயலாத கனமுடையதாகத் தோன்றிற்று.
அதையும் பெட்டியோடு கீழே எறிந்து விட்டு, அறைக்குவெளியே வந்தார் அடியார். கதவு மூடிக்கொண்டது.
அடியார் முன்னே சிறுமி மேட்டில் நின்றுகொண்டு, அவரது துயரம் நிரம்பிய முகத்தை உற்று நோக்கி, "பக்தனே, உன் மீது கொண்ட அன்புக்கும், உன் தவத்திற்கும் வசப்பட்டும், என்னால் இயன்றதை உனக்குச் செய்தேன். உனக்குப் பெரும்பொருளை அனுபவிக்கும் விதி இல்லை, என் செய்வது! வருந்தாதே, உனக்கு உண்டு உடுத்து உயிர் வாழ்தற்கு வேண்டிய அளவு கிடைக்கும். இனி மறு முறை என்னைக் குறித்துத் தவஞ் செய்யாதே'' என்று தேற்றி விட்டு, அவ்விடத்திலேயே சிறுமி மறைந்தாள்.
அடியாரும் ஒருவாறு மனந்தேறி இல்லம் மீண்டு வாழ்ந்தார். தேவியின் அனுக்கிரகத்தால் அவர்க்கு ஆயுள் முடியும் வரை, உணவுக்கோ உடைக்கோ தட்டு ஏற்படாதவாறு காலம் கழியலாயிற்று.