அந்தச் சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை காட்டிற்குச் சென்றார். நன்றாகப் பேசி வந்த அவர் திடீரென்று,‘‘மகனே, இப்போது உனக்கு ஒரு பெரிய சவால் உள்ளது. இதில் வெற்றி பெற்றால் நீ ஒரு வீரனாகி விடுவாய்’’ என்றார்.
சிறுவன் மலைத்து நின்றான்.
‘‘மகனே, இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக் கூடாது; வீட்டிற்கு ஓடி வந்துவிடக் கூடாது. யாரையும் உதவிக்கு அழைக்கவும் கூடாது’ என்றார்.
சிறுவன் சம்மதித்தான். தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை அவனுக்குக் கேட்டது.
தைரியமாக இருந்த அவன், திடீரென தூரத்தில் ஆந்தை கத்துவதையும் நரி ஊளையிடுவதையும் கேட்டான். அவனது இதயத்துடிப்பு 72-லிருந்து 82 -க்கு எகிறியது. வனவிலங்குகள் எப்போது தாக்குமோ என்று நடுங்க ஆரம்பித்தான்.
மரங்கள் பேய் போன்று ஆடின. திடீரென மழை சோ என்று கொட்டி அவன் சோகத்தைப் பெரிதாக்கிற்று. கடும் குளிர். பலத்த காற்று மரக்கிளைகளை அசைத்து, அவன் அமர்ந்திருந்த மரத்தையும் ஆட்டம் காண வைத்தது.
ஐயோ, இப்படி நிர்க்கதியாய் தவிக்கவிட்டுத் தந்தை திரும்பிப் போய்விட்டாரே!
‘யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்’ என்று பலமுறை கூவிப் பார்த்தான். பயனில்லை.
என்ன செய்வது? இருள், பீதி, தனிமை, பசி, தூக்கம் இவையெல்லாம் போதாதா ஒருவன் பயந்து சாவதற்கு? தூக்கம் வந்தபோதெல்லாம் ஏதோ ஒரு விலங்கு அவனைக் கடித்துக் குதறுவதாகக் கனவு கண்டான்.
இப்படியே இரவு கழிந்தது. காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான். சூரியன் உடம்பைச் சுட்டபோதுதான் கண்கட்டைத் திறந்து பார்த்தான் அவன்.
கண்ணைக் கசக்கிக்கொண்டு பார்த்தபோது, ஆச்சரியம்! ஆனந்தம்! அவனுக்கு அழுகையே வந்துவிட்டது. ‘அப்பா!’ என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் அப்பாவைத் தழுவிக் கொண்டான்.
‘‘அப்பா, நீங்கள் எப்போது வந்தீர்கள்?’’ என்று கேட்டான் ஆவலாக. சோர்வும் மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை, ‘‘நான் எப்போது மகனே உன்னை விட்டுப் பிரிந்தேன்?’’ என்று கேட்டார்.
‘‘இரவு இங்குதான் இருந்தீர்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறியபோதெல்லாம் என்னைக் காப்பாற்றவில்லை?எனக்கு ஏன் ஆறுதல் கூறவில்லை?’’
‘‘நீ வீரனாக வேண்டும் என்பதற்காகவே மௌனம் காத்தேன். இரவில் நான் வந்திருப்பதை அறிந்திருந்தால் நீ கோழை என ஊர் கூறிவிடும் அல்லவா?’’
ஆம், இறைவனும் நம்மோடு இப்படித்தான் இருக்கிறான். துன்பத்திலும் சோகத்திலும் தவிக்கும்போது நாம் துவண்டுவிடாமல், தீரர்களாக வேண்டும் என்பதற்காகத்தான் மௌனம் காக்கிறான்.